ஜம்முகாஷ்மீரின் நிலை குறித்து பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு மீண்டும் தில்லிக்கு அனுப்பி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்து, அரசியலமைப்பில் 370வது பிரிவை திரும்பப் பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமிஷ்தா அறிவிக்கும் முன்னரே ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரைதகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்று நிலைமையை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரில் இருந்து திருப்பி விடப்பட்டனர். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் 12 பேர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல முடிவு செய்தனர். ராகுல்காந்தியுடன் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதன்படி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை தந்தனர். ஆனால், விமான நிலையத்திலேயே எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ், காஷ்மீர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், நான்கு முறை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான, முகமது யூசுப் தாரிகாமியைக் கொணர்ந்திடவேண்டும் என்று கோரி, ஆட்கொணர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.