1921 - 24ஆம் ஆண்டுகளில் பெஷாவரில் கம்யூனிஸ்ட் சதி வழக்குகள் நடைபெற்று வந்தபோது, சென்னையிலும், பம்பாயிலும் மற்றும் கல்கத்தாவிலும் கம்யூனிஸ்ட் கருத்துப் பிரச்சாரம் பிரபலமாகி வந்தது. ஏற்கெனவே சொன்னதுபோல் சென்னையில் சிங்காரவேலர் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளையும் பம்பாயில் டாங்கே ‘சோசலிஸ்ட்’ என்ற பத்திரிகையையும் கல்கத்தாவில் முசாபர் அகமது ஒரு பத்திரிகையையும் நடத்தி ஆங்கிலேய - எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் மார்க்சிய பிரச்சாரத்தையும் நடத்தி வருவதையும் இந்த இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி வருவதையும் கண்டு ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் சிங்காரவேலர், டாங்கே மற்றும் முசாபர் அகமது ஆகிய மூவரையும் மையமாக வைத்து தொடுத்த வழக்குதான் கான்பூர் சதி வழக்கு.
1923ஆம் ஆண்டு மே மாதத்தில் முசாபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் உசேன் ஆகிய மூவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் காவல்துறையினர் சிங்கார வேலரைக் கைது செய்ய வந்தபோது, அவர் டைபாய்டு காய்ச்சலில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த ஆங்கிலேய அரசாங்க பெரிய மருத்துவர் சிங்காரவேலரை கான்பூர் கொண்டு செல்ல அனுமதி தரவில்லை.
ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கெனவே ஒரு திட்டம் வைத்திருந்தது. பெஷாவர் நகரில் ‘மாஸ்கோ வழக்கு’ என்ற கம்யூனிஸ்ட் சதி வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அந்த வழக்கில் சௌகத் உஸ்மானியையும், முசாபர் அகமதுவையும் சேர்க்க அது திட்டமிட்டிருந்தது. ஆனால் வடமேற்கு எல்லை மாகாணத்தில் பிரதம கமிஷனராக இருந்த சர் ஜான் மாபே என்பவர் இதற்குச் சம்மதிக்க மறுத்தார். இந்த இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்தால் மீண்டும் துவக்கத்திலிருந்து விசாரணை நடைபெற வேண்டும், எனவே அதைச் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.
இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவது தனது ஆதிக்கத்திற்கு ஆபத்தானது என்று ஆங்கிலேய அரசாங்கம் கருதியதால் அது அந்த இயக்கத்தை அழிப்பதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தோடு நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியர்கள் அனைவரையும், சிறையிலடைக்க ஒரு குற்றப் பத்திரிகையைத் தயாரித்தது. அந்த சதிவழக்குதான் கான்பூர் சதி வழக்கு. முதலில் 105 பேரை கைது செய்ய வேண்டுமென்று அது திட்டமிட்டது. பின்னர் அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியில் பின்வரும் எட்டு பேர் மீது வழக்கு தொடர முடிவு செய்தது.
1. எம்.என்.ராய்
2. மௌலாபக் ஷ் என்ற சௌகத் உஸ்மானி
3. முசாபர் அகமது
4. குலாம் ஹூசேன்
5. நளினி குப்தா
6. ராம் சரண்லால் சர்மா
7. எஸ்.ஏ.டாங்கே
8. சிங்காரவேலர்
இந்த எட்டுப் பேர் மீதும் 1898ஆம் வருடத்திய குற்றப் பிரிவு சட்டத்தின் 196 பிரிவின்கீழ் கீழ்க்காண்போர் மீது மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கைத் தொடரும் படி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த எட்டுப் பேரில் என்.என்.ராய் ஜெர்மனியில் இருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அதேபோல் ராம் சரண்லால் சர்மா பிரெஞ்சுப் பிரதேசமான பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் சிங்காரவேலரை மருத்துவ காரணத்தால் கைது செய்ய முடியவில்லை. குலாம் உசேன் என்பவர் பெஷாவர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாபி என்பவருக்கு எதிராக சாட்சியம் தருவதாக வாக்களித்து அப்ரூவராக மாறினார். எனவே அவர் கைது செய்யப்படவில்லை. எனவே இறுதியாக சௌகத் உஸ்மானி, முசாபர் அகமது, நளினி குப்தா, எஸ்.ஏ.டாங்கே ஆகிய நால்வர் மீது மட்டும் குற்றப் பத்திரிகை சாட்டப்பட்டது. மணிலால் டாக்டர் என்ற வழக்கறிஞர் முசாபர் அகமதுவுக்காகவும், சௌகத் உஸ்மானிக்காகவும் வாதாடினார். கபில்தேவ் மாளவியா என்ற வழக்கறிஞர் டாங்கேவிற்காகவும், நளினி குப்தாவுக்காகவும் வாதாடினார். முதலில் லண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் பாதுகாப்புக்குழு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக பிரபல வழக்கறிஞர் முகமது அலி ஜின்னாவைத்தான் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் 30 ஆயிரம் ரூபாய் வேண்டுமென்று கேட்டார். ஏனென்றால் அரசாங்க வழக்கறிஞருக்கு அரசாங்கம் தினமும் 1000 ரூபாய் கொடுத்தது. ஜின்னாவுக்கு கம்யூனிஸ்ட் பாதுகாப்புக்குழு அவ்வளவு பணம் தர இயலாத நிலையில் அவர் ஆஜராகவில்லை.
பெஷாவர் சதிவழக்கில் அந்த வழக்கு விபரம் வெளியே தெரியக்கூடாது என்று மூடி மறைத்த அரசாங்கம் இப்பொழுது இந்த வழக்கை பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் பயத்தை உண்டுபண்ணுவதற்காக பத்திரிகையாளர்களை நீதிமன்றத்திற்குள் நுழையவும், செய்தி சேகரிக்கவும் அனுமதித்தது. இந்தச் சதிவழக்கின் ஆரம்ப விசாரணை நாளன்று உளவுத்துறை இயக்குநர் கர்னல் சிசில்கேயி என்பவர் செய்தியாளர்களை அழைத்து இந்த வழக்கு முழுவதையும் ‘கான்பூர் போல்ஷ்விக் சதிவழக்கு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடும் படி கூறினார். இதனால் இமயம் முதல் குமரி வரை போல்ஷ்விக் என்ற வார்த்தை பிரபலமாயிற்று. இந்த வழக்கில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களின் சுருக்கம் பத்திரிகையில் வெளியானது. ஏராளமானோர் இவற்றைத் தொடர்ந்து படிக்கலாயினர். கான்பூரில் இருந்த மாணவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. போல்ஷ்விக் என்றால் கொடூரமான தோற்றம் கொண்டவர்களா? எப்படிபட்டவர்கள் என்ற ஐயம் ஏற்பட்டது. இதேபோன்றே கான்பூர் நகரில் பெரியவர்களுக்கும் ஏற்பட்டது. எனவே அந்நகரின் இளைஞர்களும், பெரியவர்களும் தினமும் நீதிமன்றத்திற்கு வந்து முசாபரையும், மற்ற மூவரையும் பார்த்து ‘அடடே எல்லோரும் இந்தியர்கள்தான்’ என்று கூறிக்கொண்டே திரும்பினர்.
(நாளை தொடரும்...)