மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்த பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக் , ஜம்மு காஷ்மீர் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மோடி அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் இணையத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு திறந்தவெளி சிறைபோல உள்ளது என்று தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினம் முடிவடைந்த பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்தார். ஆனால் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜாவும் காஷ்மீர் சென்ற போது விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த சனியன்று காஷ்மீர் நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள காஷ்மீர் சென்றனர். ஆனால் தலைவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி மீண்டும் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமியை ஒப்படைத்திட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் குறித்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இன்று நடந்த விசாரணையில்
நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம். சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஜம்முகாஷ்மீருக்கு செல்லலாம். கட்சிநிர்வாகி யூசூப்தாரிகாமியை நண்பராக சந்திக்கலாம். ஆனால் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. மேலும் முகமது ஜலீல் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்தினரை பார்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.