ரஷ்யாவில் 1905-எழுச்சிக்குப் பிறகு தொடர்ந்து நடந்துவந்த நாடுதழுவிய வேலை நிறுத்தங்கள்,மக்களின் போராட்டங்களால்,ஜார் ஆட்சி பின்வாங்குவது போன்று ஒரு தோற்றத்தை ஏற்ப்படுத்தியது. பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்பு ஏற்படுத்தும் உரிமை ஆகியவற்றோடு பரவலான வாக்குரிமை அளித்து, டூமா எனப்படும் பாராளுமன்றத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் அறிவித்தது.
அரசாங்கத்தின் அறிவிப்பு ஒரு மோசடித் திட்டம் என்றாலும் புரட்சிக்கான தயாரிப்புப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான கால அவகாசத்தை அது அளித்தது.பெயரளவில் அறிவிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி மக்களிடையே புரட்சிகர உணர்வை ஏற்படுத்துவதற்கு போல்ஷ்விக்குகள் முனைந்தனர்.
அரசாங்கத்தின் நிலையை லெனின் வேறு கோணத்தில் மதிப்பிட்டார்.பழைய, நூற்றாண்டுகால கொடுங்கோன்மை வழிமுறைகளில் அரசாங்கம் இனிமேல் ஆட்சி செய்ய முடியாது என்கிற முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டினார். எனவே, தொழிலாளர்கள் விவசாயிகளோடு இணைந்து மேலும் உற்சாகத்துடன் புரட்சியை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இந்த காலகட்டத்தில் உள்ளூர் மட்டத்திலான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. “தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகள்” என்கிற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் நிர்வாக அமைப்புகள் தோன்றின. வேலைநிறுத்தம் நடத்துவதற்கான போராட்டக் குழுவாக துவங்கிய இந்த அமைப்புகள், உள்ளூர் நிர்வாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளாக மாறின.தொழிலாளர்கள் தங்களுடைய தேவைகள்,வாழ்வாதார கோரிக்கைகளுக்காக அமைப்பு ரீதியாக ஒன்றுபடும் களங்களாக சோவியத்துக்கள் அமைந்தன.
எடுத்துக்காட்டாக, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத் சுமார் 400 லிருந்து 500 தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்டதாக இருந்தது. மொத்தம் 2 லட்சம் தொழிலாளர்களை அது பிரதிநிதித்துவப் படுத்தியது. 5 தொழிற்சங்கங்கள், 96 தொழிற்சாலைகள் கொண்ட செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்த சோவியத் வலுவாக செயல்பட்டது. இதுபோன்று பல நகரங்களிலும் பல பகுதிகளிலும் சோவியத்துக்கள் அமைந்தன.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ போன்ற நகரங்களில் வலுவாக அமைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் நாடு முழுவதும்,அவை இணையான அரசு நிர்வாகமாக மாறின. பின்னாளில் பிப்ரவரி புரட்சி நடைபெற்ற போது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார வடிவங்களாக சோவியத்துக்கள் ஒருபுறம்; மத்திய முதலாளித்துவ அரசாங்கம் மறுபுறம் என இரட்டை ஆட்சி ஏற்பட்டது. பிறகு, சோவியத்துக்கள் முழு அதிகாரம் பெற்ற, லெனின் தலைமையிலான அரசு அமைந்தது.
உள்ளூர் மட்டத்தில் செயல்பட்ட சோவியத்துக்களை பாட்டாளி வர்க்க அரசின் கரு வடிவமாக லெனின் கருதினார். அவற்றை அமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் போல்ஷ்விக்குகள் முழுமையாக பங்காற்றினார்.
1905-புரட்சிக்குப் பிறகு இந்த சோவியத்துக்கள் எல்லாப் பகுதிகளிலும் உருப்பெற்றன.பல இடங்களில் ராணுவ வீரர்கள், மாலுமிகள் தொழிலாளர்களோடு இணைந்து பிரதிநிதிகளாக செயல்பட்டனர். பல பகுதிகளில் தொழிலாளர்கள்-விவசாயிகள் பிரதிநிதிகள் கொண்டதாகவும் அமைந்தன. இந்த சோவியத்துக்கள் மக்கள் செல்வாக்கு கொண்டதாக இருந்ததால்,உள்ளூரில், பத்திரிக்கை சுதந்திரம், எட்டு மணி நேர வேலை ஆகியவற்றை உறுதிப்படுத்தினர்.ஒரு கட்டத்தில் ஜார் அரசாங்கத்திற்கு எதிராக வரிகொடா இயக்கமும் நடத்தினர்.
இந்த சோவியத்துக்கள் ஒரு வரலாற்று அனுபவமாக திகழ்கின்றன. உள்ளூரில் மக்கள் தங்களை நிர்வகித்துக் கொள்ள அவர்களுக்கு அதிகாரமும், ஜனநாயகமும் உறுதி செய்ய வேண்டுமென்பது கம்யூனிஸ்ட்களின் பார்வை. கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த இடங்களில் உள்ளூர் மட்டத்தில் அதிகாரப் பரவல் என்பது சோசலிசத்தின் அடிப்படையாகத் திகழ்ந்தது.
தற்போது, அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாகாண நிர்வாகங்களை செயல்பட விடாமல் டொனால்டு டிரம்ப் செயல்படுகிறார் என்று மாகாண நிர்வாகங்கள் குற்றம் சாட்டுகின்றன. முதலாளித்துவம் அதிகாரங்களை தனது கையில் குவித்துக் கொள்ளவே முயலும். சோசலிசம், மக்களுக்கு அதிகாரம் என்ற பார்வை கொண்டது. ஆனால், இன்றளவும் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்ற அவதூறினை பரப்பி வருகின்றனர்.
அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று சொல்லப்படுவதுண்டு.அது போன்று சோவியத்துக்கள் புரட்சி அணுக்களாக செயலாற்றின.உள்ளூர் சோவியத்துக்களில் உள்ளூர உறைந்திருக்கும் ஆற்றலை லெனின் முழுமையாக புரிந்துகொண்டு, அவற்றை மிகத் திறமையாக புரட்சிக்கு பயன்படுத்தினார்.