tamilnadu

img

செப்டம் 25 விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கை

மத்திய பாஜக அரசாங்கம், விவசாயிகள் எதிர்ப்புச்சட்டங்களை நிறைவேற்றி யிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்தள்ளது. இதற்கு எதிராக செப்டம்பர் 25 அன்று விவசாயிகள் மேற்கொள்ளும் எதிர்ப்பியக்கத்திற்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் அனைத்து ஜனநாயக ஒழுங்குவிதிமுறைகளையும் ஒழித்தக்கட்டிவிட்டு, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டமுன்வடிவுகளையும், மின்சார சட்டத்தில் திருத்தங்களையும் நிறைவேற்றியிருக்கும் மோடி அரசாங்கத்தின் எதேச்சாதிகார நிலைப்பாட்டிற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. முறையாக விவாதங்கள் நடத்துவது தொடர்பான அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன.

செப்டம்பர் 25 அன்று நாடு தழுவிய அளவில் எதிர்ப்பியக்கங்களை நடத்திட அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறைகூவலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது. அன்றையதினம் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் பந்த் மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருப்பதற்கும் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாஜக அரசாங்கம், கார்ப்பரேட்டுகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் பயன் அடைவதற்காக அவசரகதியில் இந்தச் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்திருப்பது விவசாயிகளை பெரும் வர்த்தக சுறாமீன்களின் கருணையில் வாழத் தள்ளியிருக்கிறது. இது கிராமப்புற மக்களை மேலும் வறிய நிலைக்குத் தள்ளிவிடும். கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயம் விவசாயத்துறையில் ஏழை விவசாயிகளை மேலும் சுரண்டுவதற்கு இட்டுச்செல்லும். அதிலும் முக்கியமாக கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தில் பெரிய அளவில் அங்கம் வகிக்கும் பெண்களை இது மிகவும் பாதிக்கும்.

உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இவற்றை நீக்கி, இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்திருப்பது, பெரும்பான்மை ஏழை மக்களின், முக்கியமாக பெண்களின்,  உணவுப் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கும். இனிவருங்காலங்களில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை போன்றவை கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படமாட்டாது. கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் பட்டினிச்சாவுகள் தொடங்கிவிட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளிவரத்தொடங்கிவிட்டன. இந்நிலையில் இவ்வாறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது, நாட்டில் பசி-பட்டினித் தொற்றை வேகமாகப் பரப்புவதற்கு இட்டுச் செல்லும்.

ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம், நாட்டில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன்காரணமாக கொண்டுவரப்பட்ட சமூகமுடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகளுக்கு இவ்வாறு துன்ப துயரங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது அம்பானி, அதானி, பிர்லா, ஐடிசி போன்று தங்களுக்குத் தேர்தல் நிதி அளித்துவரும் முதலாளித்துவ நண்பர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

விவசாயிகளின் போராட்டங்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்திட வேண்டும் என்றும் நம் கிளைகள் அனைத்திற்கும், நம்மைப்போன்று இயங்கும் மாதர் அமைப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

(ந.நி.