tamilnadu

img

காந்தியடிகளை தேச துரோகி என்றவர்தான் சாவர்கர்- பிரகாஷ்காரத் பேச்சு 

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டதால் காந்தியடிகளை தேச துரோகி என்று சொன்னவர் தான் சாவர்கர் என்று பிரகாஷ்காரத் குற்றம் சாட்டி உள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அலுவலக வளாகத்தில்  திங்களன்று மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்புரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:
உலகில் விஞ்ஞான சோசலிசத்தை தோற்றுவித்த கார்ல் மார்க்ஸ் சிலையை சேலத்தில் திறந்து வைத்திட வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரை மனிதர் சுரண்டாத சமூகத்தை எப்படி உருவாக்குவது, சமூக மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது என்ற மார்க்ஸின் சிந்தனைகள், தத்துவத்தில் இருந்துதான் உலக அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானது.  உலகளாவிய பாட்டாளி வர்க்க இயக்கத்தை வெற்றிகரமான முறையில் தொடங்கி வைத்தவர் கார்ல் மார்க்ஸ்.
ரஷ்யப் புரட்சியின் மூலம் உலகில் முதல் சோசலிச சமுதாயம் ஏற்பட்டதைப் பார்த்து, அந்தப் பாதைதான் விடுதலைக்கான ஒரே வழி என்று, இந்திய விடுதலைப் போராட்டத்தில் உதித்தது கம்யூனிஸ்ட் இயக்கம். மகத்தான தியாகம், எண்ணற்ற போராட்டங்களின் மூலம் உருவான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் உயிர்த்  தியாகம் செய்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், அதற்கு ஆதரவாக இருந்த நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் நீண்ட போராட்டத்தை நடத்திய வரலாறு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. 1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதில் இருந்தே  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கடும் அடக்குமுறையை ஏவியது. 1934இல் இருந்து நாடு விடுதலை பெறும் வரை தடையைச்  சந்தித்து கம்யூனிஸ்ட் இயக்கம் சட்டவிரோதமாகச் செயல்பட வேண்டியிருந்தது.  
அதேசமயம் இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக மூலம் நாட்டை ஆள்கிறது. 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடு விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடை விதிக்கப்படவில்லை. எந்த அடக்குமுறையையும் சந்திக்கவில்லை. ஆர்எஸ்எஸ்ஐச் சேர்ந்த ஒரேயொருவர் கூட வெள்ளை ஆட்சியை எதிர்த்து தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றதில்லை. இதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.
ஏனென்றால் ஆர்எஸ்எஸ் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை முதன்மையான எதிரியாகப் பார்க்கவில்லை. அவர்கள் முஸ்லிம்களை எதிரிகளாக கருதினார்கள். மேலும் நாடு விடுதலை பெற்றால் மீண்டும் முஸ்லிம்கள் ஆட்சி வரும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். மகாத்மா காந்தி வலியுறுத்திய இந்து முஸ்லிம் ஒற்றுமையை எதிர்த்துத்தான் அவரை சுட்டுக் கொன்றார்கள். 1948இல் காந்தி படுகொலைக்குப் பிறகுதான் சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்புக்குத் தடை விதித்தபோது, உள்துறை அமைச்சர் சர்தார் படேல், காந்தி படுகொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது என்றார்.
தேச விடுதலைப் போராட்டத்தில் மகத்தான தியாகம் செய்தது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி இருந்தது ஆர்எஸ்எஸ். நாட்டைப் பிளவுபடுத்தும் தீவிர வகுப்புவாத அரசியலை முன்னெடுத்தது. நம் நாட்டின் அரசியல் சட்ட வரைவை அம்பேத்கார் தலைமையிலான குழுவினர் உருவாக்கியபோது, இது இந்திய நிலைமைக்குப் பொருத்தமானது அல்ல, மநு ஸ்மிருதி அடிப்படையில் அமையவில்லை என்று கூறியது ஆர்எஸ்எஸ். இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள்.
இன்றைக்கு பாஜக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை எல்லா வழியிலும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியா என்பது மதச்சார்பற்ற கூட்டாட்சி குடியரசு, யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என மாநிலங்களின் ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் 29 மாநிலங்கள் இருந்தன. ஆனால் நாடாளுமன்றத்தில் 6, 7 தேதிகளில் சட்டமியற்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கலைத்து, இரு மத்திய ஆட்சி பிரதேசங்களாக ஆக்கி விட்டனர். இப்போது 28 மாநிலங்கள்தான் உள்ளன. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர்தான். அதை ஆர்எஸ்எஸ், பாஜகவால் சகித்துக் கொள்ள முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. இதன் மூலம் அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற கூட்டாட்சி குடியரசு என்பதில் இருந்து தடம் புரளச் செய்துள்ளனர்.
மேலும் காஷ்மீர் மக்கள் இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளான சுதந்திரமாக நடமாடும் உரிமை, கருத்துரிமை பறிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனைக்குச் செல்வதற்கும், மருந்து வாங்கப் போவதற்கும் கூட முடியாத நிலையில் அவர்கள் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீர் மக்களுக்கு எதிரான எதேச்சதிகாரமான செயல் ஆகும். இதுபோல் நாட்டின் மற்ற பகுதிகளிலும் மாற்றக்கூடிய ஆபத்தும் உள்ளது.
இந்த அரசு குடிமக்கள் பதிவு சட்டத்தை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய முஸ்லிம்கள் அல்லாத, மதவழி சிறுபான்மையினருக்கு ஆறாண்டுகளில் குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடையாது என்று மறுக்கப்படுகிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் குடியுரிமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிரானதாக இந்த சட்ட வரைவு உள்ளது. நாட்டின் குடிமக்களை மத, இன, சாதி, வசதி வாய்ப்பு அடிப்படையில் பார்க்கக் கூடாது என அரசியல் சட்டத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவின் குடிமக்கள் என்பதற்கு பாஜக அரசு புதிய வியாக்யானத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை பாஜக தேர்தல் அறிக்கையில் இந்து மகாசபை தலைவர் வி.டி.சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என கூறப்பட்டுள்ளது. இந்தியா இந்து தேசம், முஸ்லிம் தேசம் என இரு தேசங்களாக உள்ளன என்று முதன்முதலில் கூறியவர் சாவர்கர். முகமது அலி ஜின்னா இரு தேசக் கோட்பாட்டைச் சொல்வதற்கு வெகு முன்னரே சாவர்கர் இதைச் சொன்னார். இவ்வாறு மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்த நினைத்தவருக்கு பாரத ரத்னா விருது தருவதாக பாஜக சொல்கிறது.
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடுகிறது. பாஜக அரசும் கொண்டாடுகிறது. காந்தியடிகள் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டதற்காக அவரை துரோகி எனச் சொன்னவர் சாவர்கர். காந்தி படுகொலை வழக்கில் கோட்சேயுடன் சேர்ந்து வழக்கு விசாரணையைச் சந்தித்தவர் சாவர்கர். இந்த கொலை சதியில் அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை என்று விடுவிக்கப்பட்டவர் சாவர்கர். எனவேதான் அமித் ஷா, மோடி சாவர்கருக்கு பாரத ரத்னா விருது தர நினைக்கிறார்கள். இந்தியாவை முழுமையான இந்து ராஷ்டிரமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இவையெல்லாவற்றையும் தேசியம், தேசியவாதம் என்ற பெயரில் செயல்படுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் மக்களும், நம் நாடும் உண்மையான பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறது. இதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்குத்தான் இதைச் செய்கிறார்கள். ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. இது பொருளாதாரத் தேக்கத்தில் சிக்கும் நிலை உள்ளது. பொருளாதாரம், தொழில்துறை உற்பத்தி எல்லாம்  கிராக்கி இல்லாமல் நலிந்துள்ளன. பல லட்சம் பேருக்கு வேலையில்லை. ஆட்டோமொபைல், ஜவுளித் தொழில் உள்பட பல தொழில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதேபோல் கிராமப்புறப் பகுதிகளில் ஏழை மக்கள், விவசாயிகள் துயரம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
எனவே மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து மக்களை அணிதிரட்டி, ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை நாம் நடத்த வேண்டும். கார்ப்பரேட், சர்வதேச நிதிமூலதனக் கும்பலின் ஆட்சியாக பாஜக அரசு செயல்படுவதற்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டிப் போராடுவதுடன்,  மதச்சார்பற்ற அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று சேர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற நம் அடிப்படை அரசியல் சட்டக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் நடத்துவோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். அவரது ஆங்கில உரையை கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தமிழில் மொழி பெயர்த்தார்.