ஸ்ரீஹரிகோட்டா,டிச.11- புவி கண்காணிப்புக்கான பிஎஸ்.எல்.வி-சி 48 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். புவி கண்காணிப்பு, வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை மற்றும் ராணுவப் பாது காப்புக்கு உதவும் வகையில் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்தது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் மூலம் புதனன்று பிற்பகல் 3.25 மணி யளவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதுதொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஎஸ்.எல்.வி-சி 48 -ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. பிஎஸ்எல்வி-ராக்கெட் வரிசையின் 50-வது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். முக்கியமாக ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளத்தில் இருந்து 75-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.