ஷிகர்பூர்:
ஆர்எஸ்எஸ் அமைப்பானது, தனது கல்விப் பிரிவான ‘வித்யா பாரதி’ மூலம்,உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகர்பூரில் ராணுவப் பயிற்சிப் பள்ளி துவங்க முடிவுசெய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இது அதிர்ச்சியையும் பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.
மதச்சார்பின்மையையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் அடிப்படையாக கொண்ட இந்தியநாட்டை, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்குமட்டுமேயான நாடாக- ‘இந்து ராஷ்டிர’மாக மாற்றுவதற்கு, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.மத்திய பாஜக அரசு மூலம், நாட்டிலுள்ள அரசுத்துறைகள் பலவற்றையும் வேகவேகமாக காவிமயமாக்கி வரும் ஆர்எஸ்எஸ், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் மனிதனையே சாப்பிடும் கட்டத்திற்கு வந்துள்ளது.
அந்த அடிப்படையிலேயே, ராணுவத்தைக் காவிமயமாக்கும் தனது நீண்டநாள் திட்டத்தை, கையில் எடுத்து, ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் பள்ளியை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சேர விரும்புவோருக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள் ளன. ஆனால், நாட்டைக் காக்கும் பணியான ராணுவத்தில் சேருவதற்கு அந்தளவிற்கு பயிற்சிப் பள்ளிகள் எதுவும் இல்லை. எனவே, அதனை ஈடுகட்டவே இந்த பயிற்சிப் பள்ளி என்றுஆர்எஸ்எஸ் பித்தலாட்டம் செய்துள்ளது.
ஏற்கெனவே, நாடு முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகளை நடத்தி வரும் ஆர்எஸ்எஸ், இந்த புதிய ராணுவப் பள்ளிக்காக, உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம் ஷிகர்பூரில் சுமார் 8 ஏக்கர் நிலத்தில், ரூ. 40 கோடியில் கட்டுமானப் பணிகளைத் துவங்கியுள்ளது. இந்த 8 ஏக்கர் நிலத்தையும் முன்னாள் ராணுவ வீரர் சவுத்ரி ராஜ்பால்சிங் என்பவரிடம் இலவசமாக பெற்றுள்ளது. மேலும், இந்த ராணுவப் பள்ளிக்கு, ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவரும், ஷிகர்பூரில் பிறந்தவருமான ராஜேந்திர சிங்கை நினைவுகூரும் வகையில், ‘ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்’ என்று பெயர் சூட்டியுள்ளது.வெறுமனே ராணுவப் பள்ளி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, 6-ஆம் வகுப்பிலிருந்து, 12-ஆம் வகுப்புவரை சிபிஎஸ்இ முறையில் கல்வி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 1200 மாணவர்கள் வரை இந்த பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற நிலையில், இவற்றில் 56 இடங்கள் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் அதிகாரப்பூர்வமாக வகுப்புகள் துவங்கப்பட உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பள்ளியை நடத்திச் செல்வது குறித்தஆலோசனைகளைப் பெறுவதற்கு, செப்டம்பர் மாதம் ராணுவ அதிகாரிகளின் கூட்டத்திற்கும் ஆர்எஸ்எஸ்-ஸின் வித்யாபாரதி ஏற்பாடு செய்துள்ளது.ராணுவப் பயிற்சிப் பள்ளி துவங்கும் ஆர்எஸ்எஸ்-ஸின் இந்த முடிவுக்கு, நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.“நாட்டில் ஏற்கனவே 5 ராணுவ பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. 2 ராஜஸ்தானிலும், 2 கர்நாடகாவிலும், ஒன்று இமாச்சல பிரதேசத்திலும் செயல்பட்டு வருகின்றன. அரசால் இந்த பள்ளிகள் நடத்தப்பட்டு வரும்போது ஆர்எஸ்எஸ் எதற்காக ராணுவப் பயிற்சிப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்?” என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.“அரசியல் ஆதாயங்களுக்காக இதனை ஆர்எஸ்எஸ் செய்கிறது. இங்கு பயிற்சி எடுப்பவர்களுக்கு ‘எப்படிகும்பல் கொலை செய்ய வேண்டும்’ என்று கற்றுத் தரப்படலாம். இது சமூக அமைதியை சீர்குலைக்கும் செயல்”என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.