tamilnadu

img

குஜராத்தில் மத அடிப்படையில் கொரோனா நோயாளிகள் பிரிப்பு?

புதுதில்லி 
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள், மத அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாக, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த அமைப்பு வெளிநாடுகளில் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் இருப்பதைக் கண்காணிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், அது தொடர்பான அறிக்கை அளிக்கவும் அங்கீரிக்கப்ட்ட அமைப்பாகும்.
மத சுதந்திரம் தொடர்பான பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்து வருகிறது இந்த அமைப்பு. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென  2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த அமைப்பு பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் நோயாளிகளை அகமதாபாத் மருத்துவமனையில் மத ரீதியாக பிரிப்பதில்லை என குஜராத் அரசு மறுத்துள்ளது. இது குறித்து, மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:கொரோனா தொற்றுக்கு, இந்தியாவில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன், தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நோயாளிகள், மத அடிப்படையில், பிரிக்கப்படுவதில்லை. கொரோனாவுக்கு எதிராக இந்தியா நடத்தி வரும் போருக்கு, மத சாயம் பூசும் பணியை, அமெரிக்க அமைப்பு நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா கூறுவது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.இவ்வாறு அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

;