tamilnadu

img

நிவாரணம் போதுமானதல்ல: சமூகப்பரவலைத் தடுப்பதற்கான குறிக்கோளைத் தோல்வியுறச்செய்து விடும் - சீத்தாராம் யெச்சூரி

கோவிட்-19-கொரானா வைரஸ் தொத்துக்கு எதிராக, மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகுப்பு, போதுமானதல்ல என்றும், இது இத்தொற்றின் சமூகப்பரவலைத் தடுப்பதற்கான குறிக்கோளைத் தோல்வியுறச் செய்துவிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேரத்தை வீணாக்காதீர்கள். இரண்டு மாத காலத்திற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும். அவ்வாறு எடுக்காமலும் சமூக முடக்கத்தை அறிவிப்பதற்கு முன் மத்திய அரசாங்கம் எவ்விதத் திட்டமிடலையும் மேற்கொள்ளாததாலும் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நிதி நெருக்கடியைச் சரிசெய்வதற்கான காலம் இதுவல்ல. பணக்காரர்களின் சுமார் 7 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்யும் உங்களுக்கு, நிதிப்பற்றாக்குறை என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து, தொற்றைத் தோற்கடித்திட வேண்டும்.

வியாழன் அன்று அரசால் அறிவிக்கப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்கிற முக்கிய பிரச்சனையைத் தவறவிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்த இந்தியர்களை விமானங்கள் மூலம் பத்திரமாகக் கொண்டுவந்த நாம், இங்கேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நம் சொந்த சகோதரர்களுக்கும் நிச்சயமாக உணவும், தங்குவதற்கான இடமும் அளித்திட வேண்டும், அல்லது அவர்களின் சொந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்திட வேண்டும். இதைச் செய்யத் தவறுவோமானால், நாட்டின் பல மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் கும்பலாக உள்ள இவர்கள் அலை அலையாக வந்து, ‘சமூகப் பரவலை’ அச்சுறுத்திக்கொண்டிருப்பதன் விளைவாக,  21 நாள் சமூக முடக்கத்தின் நோக்கமே தோல்வியடைந்துவிடும். எனவே, உடனடியாக இதனைச் சரிசெய்திட வேண்டும்.

உணவு தான்யங்கள் அளிப்பதை இரட்டிப்பாக்கி இருப்பது, மூன்று மாதங்களுக்கான இலவச சமையல் எரிவாயு அளிப்பது, ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ கிராம் அளவிலான தான்யங்கள் அளிப்பது போன்று சில நல்ல முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், இவை நிச்சயமாகப் போதுமானதல்ல. கோவித்-19 தொற்றை எதிர்த்து முறியடித்திட மிகவும் முக்கியமான அம்சம் நல்ல ஊட்டச்சத்து உணவை உட்கொள்வதாகும். எனவே, அரசு வெளியிட்டிருக்கிற முன்மொழிவுகள் இதற்கு உதவாது.

வயதான விதவைகளுக்கும், ஊனமுற்றோருக்கும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்தருப்பது மிகவும் குறைவு. அவர்களுக்குத் தேவை, தங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான உதவி. இதற்கு ஆயிரம் ரூபாய் எப்படிப் போதுமானதாகும்?

சுகாதார ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் அளிக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு எவ்விதச் செலவினமும் ஏற்படப் போவதில்லை. தனியார் துறையையும் இது கட்டுப்படுத்துமா என்று விளக்கம் இல்லை. அவர்களுக்கு உடனடித் தேவை என்னவென்றால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் போதுமான அளவிற்குப் பரிசோதனை செய்வதற்கான வசதிகள். இவை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அரசாங்கம், ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. உண்மையில் இது, பிரதமர் கிசான் யோஜனா (PMKY-PM Kisan Yojana) திட்டத்தின்கீழ் 2019 தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தொகையின் முதல் தவணையேயாகும்.

பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் மாற்றப்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் குறைவு. அனைத்து ஜனதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் ரூபாய் வீதம்  நேரடியாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

தொழிலாளர்களுக்கு உருப்படியான ஆதாயம் எதுவும் இல்லை. அவர்களின் சொந்த சேமநல வைப்பு நிதியிலிருந்து (PF-Provident Fund) அவர்களின் ஊதியத்தில் 24 சதவீதம் அளிப்பது, எவ்விதமான கூடுதல் நிவாரணத்தையும் அவர்களுக்கு அளித்துவிடாது. இது அவர்களின் சொந்த சேமிப்புப் பணமாகும், அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய தொகையாகும்.

 

இப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

 

·அனைத்து ஏழை மக்களுக்கும், குறிப்பாக மதிய உணவுத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்குவதன் மூலமாக பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மையைக் கட்டுப்படுத்திட முடியும். கேரளம் இதைச் செய்து கொண்டிருக்கிறது.

·மிகப்பெரிய அளவில் கதவடைப்புகள் மற்றும் பணிநீக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அனைத்துத் தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதை உத்தரவாதம் செய்திட வேண்டும்.

·விவசாயிகள் அனைவருக்கும் அவர்கள் வாங்கியுள்ள கடன்கள் அனைத்திற்கும் ஒரு தடவை தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும்.

·இது அறுவடைக் காலம். உற்பத்தியான பொருள்களும் பாதிப்பு எதுவும் இல்லாத வகையில் அறுவடை செய்யப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். விவசாயிகள் அவற்றை அறுவடை செய்வதற்குப் பாதுகாப்பு அளித்திட வேண்டும். அவற்றை அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்திட வேண்டும்.

·மத்திய தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக ஊழியர்களுக்க, அவர்கள் வாங்கியுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு அளித்திட வேண்டும், அவர்களின் இஎம்ஐ என்னும் சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணைகளை (EMIs) நிறுத்தி வைக்க வேண்டும்.

·சுய உதவிக் குழுக்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை. ஏனெனில், நாட்டில் உள்ள  6 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் எவ்வித நடவடிக்கைகளுமின்றி ஸ்தம்பித்திருக்கின்றன. அவர்கள் வாழ்வதற்கும், சுகாதாரமாக இருப்பதற்கும் அவர்களுக்கும் பணம் கொடுத்து உதவ வேண்டும்.

·மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (MNREGA) கீழ், வழங்கப்படும் ஊதியங்களை 20 ரூபாய் அதிகரித்திருப்பதாக அறிவித்திருப்பது  ஒரு ‘ஜோக்’ ஆகும். தற்போது எங்கும் வேலைகள் நடைபெறவில்லை. அவர்களுக்குத் தேவை நேரடி ரொக்க மாற்றுகள் (direct cash transfers) அல்லது பணிகள் நடந்தாலும், நடைபெறாவிட்டாலும் ஊதியங்கள் அளிக்கப்படுவதாகும்.     

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அறிக்கையில் கோரியுள்ளார்.

(ந.நி.)