tamilnadu

img

ரமேஷ் சென்னித்தலாவின் தவறான அறிக்கை குறித்து காங்கிரஸ்காரர்கள் சிந்திக்க வேண்டும்: கேரள முதல்வர்....

திருவனந்தபுரம்:
மத்திய அரசின் விசாரணை முகமைகள் குறித்த  எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவின் அறிக்கை, அரசியலின் அடிப்படைகளை அறிந்த எவரும் புரிந்துகொள்ள முடியாதது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் திங்களன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவது குறித்து சோனியா காந்தி விமர்சித்தது மற்றும் சிபிஐக்கு ஆதரவளிக்கும் சென்னித்தலாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்த ஊடக கேள்விக்கு முதல்வர்பதிலளித்தார். ‘மத்திய விசாரணை முகமைகள் குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அகில இந்தியக் கட்சியின் ஒரு பகுதியாக இருக்கும்போது அகில இந்தியத் தலைமை சொல்வதை மறுக்க மாநிலத் தலைவர்கள் பொதுவாகத் தயாராவதில்லை’ என்று கூறிய பினராயி விஜயன், ‘மத்திய முகமைகள் குறித்த ராகுல்காந்தியின் அறிக்கையை கேரள பாஜக தலைவர் ஒருவர் விமர்சித்தார். இதுவரை அனைத்திலும் தங்களுடன் இருந்த காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதா என்று பாஜகதலைவர் கேட்டார். அந்த கேள்விக்கான தெளிவுபடுத்தல் கேரள எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து வந்தது. தேசிய மட்டத்தைப் போலல்லாமல், கேரளாவில் உள்ள காங்கிரஸ் முடிந்தவரை பாஜகவுடன் இணைந்து செல்கிறது. ராகுல் காந்தியின் அறிக்கை அதற்கு தடையாக இருப்பதாக பாஜக தலைவர் சுட்டிக்காட்டியபோது சென்னித்தலா தனது கட்சியின் தேசிய தலைமையையே நிராகரித்தார்’ என்று விவரித்தார்.

நாட்டில் மதச்சார்பின்மை பல வழிகளில் கேள்விக்குறியாகி வருகிறது. ஆனால் கேரளா ஒரு தனி தீவாக நிற்கிறது. மதச்சார்பின்மைக்கு ஒரு கீறல் இல்லாமல் நாம் முன்னேற முடியும். வகுப்புவாத,தீவிரவாத சக்திகளுடன் இணைவது மதச்சார்பின்மைக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கையாகும். சிறிது வாக்குகளையும் சில இடங்களையும் முக்கியமானதாக கருதக்கூடாது. இதுபோன்ற அனைத்து தவறான செயல்களையும் புரிந்துகொள்ளும் சமூகம் கேரள சமூகம். கேரள எதிர்க்கட்சித் தலைவரின் இத்தகைய தவறான அறிக்கைகள் எந்த அளவிற்கு அந்த கட்சிக்கு பொருத்தமானவை என்பதை காங்கிரஸ்காரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேரள முதல்வர் கூறினார்.