புதுதில்லி,மார்ச் 27- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். அனைத்து வகைக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை 3 மாதங்கள் தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வருமானம் இருக்காது. நிலைமை சீரடையும் வரை வேலைக்குச் செல்ல இயலாது. எனவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இவர்கள் வாங்கிய கடன்களுக்கான தவணையை இந்த காலங்களில் செலுத்த முடியாது.
நிலைமை சீரடைந்த பின்னரே பணம் செலுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மும்பையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் ஒரு அசாதாரண மற்றும் இதுவரை இருந்திராத சூழலில் வாழ்ந்து வருகிறோம். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் நமது முயற்சி போரினைப் போல இருக்க வேண்டும். இது மனிதர்கள், நிறுவனங்கள் என அனைத்துத் தரப்புக்கும் கடினமான காலம். ஆனால் இதுவே நீடிக்காது. நாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொலையாளியை எதிர்த்துப் போராடுகிறோம். கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்பை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது. சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.
ரெப்போ வட்டி குறைப்பு
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை (ரெப்போ வட்டி) 75 புள்ளிகள் குறைத்து, 4.20 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் பணத்துக்கான வட்டி விகிதமும் 90 புள்ளிகள் குறைந்து 4 சதவீதமாக உள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
குறைப்பால் தொழில் நிறுவனங்கள், பொது மக்களுக்கு குறைந்த வட்டியில், வங்கிகள் கடன் வழங்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும். கொரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளோருக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்கள், கடனுக்கான தவணைகள் திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தள்ளி வைப்புக்கான காலம் மார்ச் 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்படும். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய முதலீட்டுக் கடன்கள், வங்கி மேல்வரைப் பற்று ஆகியவற்றுக்கான வட்டி செலுத்தும் காலமும் 3 மாதத்துக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. இந்தக் காலமும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்படும். இந்த 3 மாதக் காலத்துக்கான வட்டியை 3 மாதக்கால முடிவில் செலுத்தினால் போதும் .
3 மாதம் இஎம்ஐ செலுத்தத் தேவையில்லை. மாத தவணை செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை எடுக்கக்கூடாது. சிபிலில் கடன் செலுத்தவில்லை என்று பதிவு செய்யக்கூடாது. இந்தியாவில் வங்கிகளின் அமைப்பு பாதுகாப்பாகவே உள்ளது. தனியார் வங்கிகளிலும் முதலீடுகள் பாதுகாப்பாகவே உள்ளன. வங்கிகளில் உங்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம். அச்சத்தால் யாரும் வங்கியிலிருந்து வைப்புத் தொகையை எடுக்க வேண்டாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.