மணி ரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக 180 பிரபலங்கள் மீண்டும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
முன்னாக இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக்காஷ்யப், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் முஸ்லீம்கள் தலித்துகள் சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் வன்முறையை தூண்ட பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தற்போது பீகாரைச்சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி சூர்ய காந்த் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதைத்தொடர்ந்து கடிதம் எழுதிய பிரபலங்கள் 49 பேர் மீதும் தேச துரோகம், பொது அமைதியை குலைத்தல், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 180 பிரபலங்கள் மோடிக்கு தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் நசருதீன்ஷா, வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர் உள்ளிட்டோர் எழுதிய கடிதத்தில் “நம் நாட்டில் நடக்கும் கூட்டு வன்முறைக்கு எதிராக பொறுப்புள்ள குடிமகன்களாக குரலெழுப்பிய காரணத்திற்காக எங்கள் கலைத் துறையைச் சேர்ந்த 49 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, குடிமக்களின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.