மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறிவித்துள்ள நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தன் முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசாங்கம் தொழிலாளர்நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக, முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றி இருப்பதற்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதிகரித்துவரும் வேலையின்மையைப் போக்க வலியுறுத்தியும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வரும் நவம்பர் 26 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் மேற்கொள்ளுமாறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுத்துள்ளது.
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தொழிற்சங்கங்களின் இந்த அறைகூவலுக்கு, தன் முழுமையான ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்துடன் நவம்பர் 26, 27 தேதிகளில் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள பல்வேறு விவசாய அமைப்புகளுக்கும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று, அமைப்புரீதியான துறைகளில் மிகவும் அபூர்வமாக வேலையில் சேர்ந்திருந்த ஊனமுற்றோர் பலரது வேலைகளைப் பறித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுமானால், இப்போது பொதுத்துறை நிறுவனங்களில் அமல்படுத்தப்படும் 2016 ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டம் போன்ற பல சட்டங்கள் தனியார் நிறுவனங்களில் மறுதலிக்கப்படும். இதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் இச்சட்டத்தின்மூலம் ஊனமுற்றோருக்கு அளிக்கப்பட வேண்டிய 4 சதவீத இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிடும். மேலும் பல துறைகளில் ஏற்கனவே கேசுவல் தொழிலாளர்களை நியமிப்பதும், ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதும் தொடங்கியிருப்பதால் ஊனமுற்றோருக்கான வேலைகள் பல வெளியே தூக்கி எறியப்படுகின்றன.
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை, நவம்பர் 26 அன்று நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்திடும் அதே சமயத்தில், ஊனமுற்றோருக்கான, கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
(1) கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 5,000 ரூபாய் கருணைத்தொகையாக வழங்கிடு.
(2) தனியார்துறையிலும் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடுகளை அளித்திடு.
(3) மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஊனமுற்றோர் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை வழங்கிடு.
(4) 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் 24ஆவது பிரிவை அமல்படுத்து. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி ஊனமுற்றோரைப் பாதுகாப்பதற்கான ஊதியம் மற்றும் வேலையில்லாக் காலத்திற்கான ஊதியம் வழங்கிடு.
இவ்வாறு முரளிதரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
(ந.நி.)