tamilnadu

img

கனவிலும் கூடக் கருதவில்லை - முசாபர் அகமது

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவகத் தலைவர்களில் ஒருவர் தோழர்   முசாபர் அகமது அவர்கள், அவர் இந்தியாவில்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள் எனும்  கட்டுரையை எழுதியிருந்தார். அவரது  கட்டுரையை தீக்கதிர் நாளிதழ் 1976ஆம்  ஆண்டில் வெளியிட்டது. அதனை  உத்தமபாளையத்தைச் சேர்ந்த  தோழர் உசேன் மீர் 1976 அக்டோபர் மாதம்  பிரசுரமாக வெளியிட்டார் தோழர்  முசாபர் அகமதுவின் அந்தக் கட்டுரையை  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின்   நூற்றாண்டையொட்டி இங்கு தருகிறோம்:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பரில்தான் துவக்கப்பட்டது என்று 1959-ல் கட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியல்ல வென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது.  “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் 1920 அக்டோபர் -17” என்று கட்சியின் மத்தியக்குழு அறிவிக்கிறது. எப்படியெனில், அன்றுதான் சோவியத் நாட்டிலுள்ள தாஷ்கண்டில் ஒன்று கூடிய இந்தியப் புரட்சிவாதிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கினார்கள். அன்றுமுதல் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், கட்சியையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பமானது. 

1917 -ல் ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடந்தது. இந்தப்புரட்சியை பற்றி ஏகாதிபத்திய உலகம் ஏராளமான அவதூறுகளைப் பரப்பியது. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவில் பெண்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டனர் என்றும், குழந்தைகள் தாயிடமிருந்து பறிக்கப்பட்டனர் என்றும் இது போன்ற வேறு அவதூறுகளும் ஏகாதிபத்திய உலகத்தினால் பரப்பப்பட்டன. இப்படிப்பட்ட அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் ரஷ்யப் புரட்சியின் எதிரொலி நமது நாட்டிலும் ஒலிக்கவே செய்தது. மேற்கு வங்கத்தில் பயங்கரவாதப்புரட்சி இயக்கத்தின் ஆரம்ப முன்னேற்றம் பின் தள்ளப்பட்ட போதிலும், அந்த ஆண்டில் ஏனைய பல இயக்கங்கள் வீறு கொண்டு முன்னேறின. கிலாபாத் இயக்கமும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரும் இயக்கமும் இங்கு குறிப்பிடத்தக்கவை. ஏராளமான பெரிய கூட்டங்களும், ஊர்வலங்களும், தடைசெய்யப்பட்டன.

அக்காலத்தில் கல்கத்தாவில் எல்லா கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் நான் கலந்து கொள்வது வழக்கம். 1918 முதல் பல இடங்களிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் வெடித்தெழ ஆரம்பித்தன. 1919 -ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. கொஞ்ச காலம் வரை நாட்டில் பெரும் கண்டன இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தன. 1919-ல் சீர்திருத்தச்சட்டம் (The Reforms Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. 1920-ல் அரசியலையே எனது வாழ்க்கையாக்கிக் கொள்ளுவது என முடிவு செய்தேன். அதற்கு முன்னர் நான் ஒரு இலக்கியக் கழகத்தின் முழு நேர ஊழியனாகப் பணிசெய்து வந்தேன் இந்தக்கழகத்தின் மூலம் 49ஆம் வங்க ரெஜிமெண்டின் (பட்டாளத்தின்) ஹவில்தாராக இருந்த காஸிநஸ்ருல் இஸ்லாமை தெரிந்துகொண்டேன். அவர் பின்னர் ஒரு கவிஞராக நாடு முழுவதும் பிரபலமடைந்தார். வங்க ரெஜிமெண்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் என்னுடன் சேர்ந்து கல்கத்தாவில் வசிக்க ஆரம்பித்தார்.

‘நவயுகம்’ ஏடு

ஏ.கே பஸலுல்ஹக் என்பவர் அன்று ஓர் இடதுசாரித் தலைவராக அறிமுகமானார். அவர் வங்கத்தில் ஒரு பிரசுரம் கொண்டுவரத் தீர்மானித்தார். அதற்கு நஸ்ருல் இஸ்லாமும், நானும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.  எங்களது கூட்டு ஆசிரியர் குழுவின் சார்பில் ‘நவயுக்’ என்னும் மாலை நாள் இதழ் வெளிவந்தது. நஸ்ருல் இஸ்லாமின் கனல் பறக்கும் எழுத்து வண்ணத்தினால் முதல் நாளிலிருந்தே பத்திரிகை பிரசித்தி பெற்றது. பெரும்பாலும் வழக்கமாகத் தலையங்கங்களை நான்தான் எழுதுவேன். ‘நவயுகம்’ பத்திரிகையானது பிற வங்கப் பத்திரிக்கையிடமிருந்து வேறுபட்ட தன்மையுடையதாக இருந்தது. காரணம் அது தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. திரு. பஸலுல்ஹக் (இடதுசாரித் தலைவர்) இதைத்தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல இந்தச் சிறப்பு அம்சத்தை ஊக்கப்படுத்தவும் செய்தார். 

உணர்ச்சிமயமானவை

என் நண்பர் ஒருவர் கூறினார் “வங்கப் பத்திரிகைகள் முழுமையாகவே உணர்ச்சிமயமானவை. நீங்கள் பத்திரிகையின் கொஞ்ச இடத்தை சாதாரண மக்களைப் பற்றி - குறிப்பாக தொழிலாளர்களை, விவசாயிகளைப்பற்றி எழுதுவதற்கு ஒதுக்கி வையுங்கள்” நான் அவரது வேண்டுதலுக்கு முற்றிலும் உடன்பட்டேன். நான் ஏற்கனவே கப்பலில் வேலை செய்பவர்களுக்கும், விசைப்படகுகளுள் வேலை செய்பவர்களுக்குமிடையே என் பணியை ஆரம்பித்திருந்தேன்.

நான் பிறந்த இடத்தில் (வங்காள விரிகுடாவிலுள்ள ‘ஸான்ட்விப்’ என்னும் தீவில்தான் நான் பிறந்தேன்) வசிக்கும் மக்களில் அதிகமான பேர் வழக்கமாக கப்பலில் வேலை செய்பவர்கள்தாம், இப்பொழுதும் அங்குள்ள ஏராளமான மக்கள் கப்பலில் வேலை செய்கிறார்கள். மற்றவர்களைப்பற்றி எழுதுவதைக்காட்டிலும் கப்பல் ஊழியர்களைப் பற்றி நான் அதிகமாக எழுதினேன். இவர்களின் பிரச்சனைகளுக்கு ‘நவயுகம்’ பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் பத்திரிகையில் எழுதுவதன் வாயிலாக மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு கவரப்படுவேன் என்பதை அன்று நான் கனவில்கூட கருதவில்லை. 

கம்யூனிஸ்ட் அகிலம் 

1920-ல் கூடிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ், காலனி நாடுகள் பற்றிய லெனினது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது. அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் அகிலம் காலனி நாடுகளுடன் தொடர்பு கொள்ள முயன்றது.    

ரஷ்யப்புரட்சி நடந்தது முதலே பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கத் துவங்கியது. இங்கும் ஏதாவதுநடந்த  விடுமோ என்று - குறைந்தது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாவது உருவாகிவிடுமோ என்று - இந்திய அரசாங்கம் அஞ்சியது. அதனால், அரசாங்கம் தனக்கு ஒரு மத்திய ரகசிய புலனாய்வுத் துறையைப் புதிதாக உருவாக்கியது. பல்வேறு பிரதேசங்களிலிருந்த அரசியல் ஊழியர்களின் செயல்களை இந்தப் புலனாய்வுத்துறை மிகக்கவனமாக கண்காணித்து வந்தது.

மத்திய இரகசியப் புலனாய்வுத்துறையின் உளவாளிகள் நாடெங்கும் பரப்பப்பட்டனர். இந்த உளவாளிகள் உளவு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குக்கூட அனுப்பப்பட்டனர். இப்படிப்பட்டதொரு சூழலில் எங்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகக் கஷ்டமான பணிகளை நிறைவேற்றச்சென்றோம்.

... தொடரும்