tamilnadu

img

சங் பரிவார் கலவரத்தை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்த தில்லி காவல்துறை - அஜய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா

முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக 100 பேரைக் கொண்ட பேரணிக்குத் தலைமை தாங்கிய பாஜக தலைவரான ஜெய் பகவான் கோயலைச் சுற்றி மௌஜ்பூர்-பாபர்பூர் சதுக்கத்தில் ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் திரண்டனர்.  ஜெய் ஸ்ரீராம், ஹர ஹர மகாதேவ் என்ற அதிரடி முழக்கங்களுக்கிடையே, ’இங்கே வாழ வேண்டுமென்றால், இந்த இடத்தை நீங்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும்’ என்று அந்த 60 வயது காவியுடை அணிந்த மனிதர் முழங்கினார். ‘நான்கு புறத்திலிருந்தும் முஸ்லீம்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக நாம் போராட வேண்டும்’ என்று அங்கிருந்த அவரது ஆதரவாளர்களை கோயல் தூண்டி விட்டார். 

திங்கள்கிழமையில் இருந்து, வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளிலும் பெரிய அளவிலான வகுப்புவாதக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. அனைவரும் இணைந்து வாழுகின்ற சூழல் உள்ள அந்தப் பகுதி செவ்வாயன்று மத அடிப்படையில் முற்றிலும் துருவமுனைக்குள்ளாக்கப்பட்டு இருந்தது. தாங்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே முஸ்லீம்கள் இருந்து வருகின்ற சூழலில், அரசியல் ஆதரவு பெற்றிருக்கும் கலகக்காரர்களைத் தவிர்த்து, அநேகமாக அனைத்து ஹிந்துக்களும் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.

நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்று தடை செய்கின்ற 144ஆவது சட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும்கூட, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் அனைவரையும், நெற்றியில் காவி திலகத்துடன் மௌஜ்பூர் சதுக்கத்தில் இறங்கியிருக்கும் கலவரக்காரர்கள் வெறித்தனமாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

"144 பிரிவு இங்கே போடப்படவில்லையா?" என்று பத்திரிகையாளர் ஒருவர் அந்த கலவரப் பகுதியில் இருந்த காவலரைக் கேட்டார். "ஆம்," என்று அவர் பதிலளித்தார். "அப்படியானால் இங்கே பேரணியை எப்படி ஒருவர் நடத்த முடியும்?" என்று அந்த பத்திரிகையாளர்  மீண்டும் கேட்டார். காவல்துறையைச் சார்ந்த அவர் “எனக்குத் தெரியாது” என்று பதில் அளித்தார்.

கோயல் மற்றும் அவரது ஆதரவாளர்களிடமிருந்து வந்த அந்த அழைப்பு எவரையும் பீதிக்குள்ளாக்குவதாகவே இருந்தது. அந்த கலவரத்தின் மையப்பகுதியான ஜாஃப்ராபாத் , மௌஜ்பூர் மெட்ரோ நிலையங்கள் இருந்த ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அந்தப் பகுதி, தேசிய தலைநகரில் இதுவரை காணப்படாத மதரீதியான துருவமுனைப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதி அதிக அளவில் முஸ்லீம்களைக் கொண்டது. ஆனால், செவ்வாயன்று, முஸ்லீம் போராட்டக்காரர்கள் பெருமளவில் முடக்கப்பட்டனர். "எங்கள் நோக்கம் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதாகும். எங்களுடைய ஹிந்து சகோதர சகோதரிகளுடன் சண்டையிடுவதற்கான எந்தவொரு எண்ணமும் எங்களிடம் இல்லை” என்று ஜாஃப்ராபாத்தில் இருந்த முஸ்லீம் போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

ஹிந்துத்துவா ஆதரவாளர்களால்தான் அங்கிருந்த நிலைமை கலவரமாக மாறியதா என்று கேட்டபோது, “நான் பொய் சொல்ல மாட்டேன். நேற்று ஹிந்து கும்பல் எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கியபோது, எங்கள் பக்கத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் வீசப்பட்ட அதே கற்களை, செங்கற்களை எடுத்து அந்தக் கும்பல் மீது வீசினார்கள். எங்களால் அங்கிருந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், இன்றைக்கு யாரையும் எந்தவொரு வன்முறையிலும்  ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம் ” என்றார்.

காவல்துறையைச் சார்ந்த ஒரு சிலர் காவலில் இருக்க, போராட்டக்காரர்கள் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று அங்கே பேசிய பல பேச்சாளர்களும் அழைப்பு விடுத்தனர். இதற்கு நேர்மாறாக, மௌஜ்பூர் மெட்ரோ நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி வெறித்தனமான ஹிந்துத்துவக் கும்பலால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டிருந்தது.

"ஜெய் ஸ்ரீ ராம்" என்று எழுதப்பட்ட காவித் திரைச்சீலைகள் அந்தப் பகுதிக்கு வரும் ஒருவரை வரவேற்கின்றன. அங்கு நிறுத்தப்பட்டுள்ள டெல்லி காவல்துறையின் சிறிய பட்டாலியனுக்கு முன்னால் தடிகள், குழல் விளக்குகள், பி.வி.சி குழாய்களுடன் இருக்கின்ற இளைஞர்கள் தங்களுடைய பலத்தை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருந்தனர். அராஜக கும்பல் எண்ணிக்கையில் அதிகரித்த போதும், அதை வெறுமனே பார்வையாளர்களாக மட்டுமே காவல்துறை அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்களை சந்தேகத்துடனே பார்த்தார்கள். யாராவது ஒருவர் வீடியோ அல்லது படத்தை எடுக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், பத்திரிக்கையாளர்களின் தொலைபேசியை அவர்கள் பறித்து, அனைத்து படங்களையும் நீக்கியதோடு, அவர்களை அடிப்பதாக அச்சுறுத்தவும் செய்தார்கள்.

கும்பலிலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர், அந்தக் கும்பலிடம் இருந்து விலகி இருக்குமாறு ஊடகவியலாளர்களைக் கேட்டுக்கொண்டனர். 144 நடைமுறையில் இருந்தபோதிலும், அந்தக் கும்பலை ஏன் கூடுவதற்கு அனுமதிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு காவல்துறை பதிலளிக்க மறுத்தது. நிருபர் பிறப்பால் ஹிந்துவாக இருப்பதை உறுதி செய்த பின்னரே, “'நாங்கள் போராட்டக்காரர்களால் சூழப்பட்டிருக்கிறோம், இந்த தடிகளின் மொழியை மட்டுமே அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்” என்று அநேகமாக 20 வயதின் பிற்பகுதியில் இருக்கும் ஹிந்து இளைஞர் ஒருவர் கூறினார். அதே வேளையில், அங்கிருந்த முஸ்லீம் நிருபருடன் பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

சிறிது நேர இடைவெளிக்குள்,  முஸ்லீம்களுக்கு எதிராக அதிகம் பயன்படுத்தப்படுகின்ற போர் முழக்கமான "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கத்துடன் பல்வேறு கும்பல்கள் அந்தப் பகுதிகளில் பரவியதால், நிலைமை அங்கே மோசமடைந்தது. கும்பலைக் கலைப்பதற்காக காவல்துறையின் சிறிய குழு  அவ்வப்போது பயன்படுத்திய கண்ணீர்ப்புகை குண்டிலிருந்து வந்து காற்றில் கலந்திருந்த கண்ணீர்ப் புகையோடு, முஸ்லீம்களுக்கு எதிரான ஆபாசமான வசை சொற்களும் சேர்ந்து கொண்டன.

மற்றொரு புறத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாபர்பூரின் வீதிகளில் காவி உடை அணிந்த நடுத்தர வயது பெண்கள் சுற்றி வந்தனர். அவர்களுடைய நடவடிக்கை தங்களுடைய சமூகத்திலிருந்து இன்னும் அதிகமான மக்களை முஸ்லீம்களுக்கு எதிராக ஒழுங்கமைப்பதற்கான தெளிவான குறிக்கோளுடன் இருந்தன. அந்த கலவரத்தின்போது  பிரதமரின் பெயரை முழங்க ஆர்வமாக இருந்தவர்களிடம் “இங்கே பாருங்கள். மோடி மோடி  என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அதற்குப் பதிலாக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றே சொல்லுங்கள்” என்று அங்கிருந்த ஒருவர் கூறிக் கொண்டிருந்தார்.

கலவர சம்பவங்கள் குறித்து தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அந்தக் கும்பல் அதிகரித்த பிறகு, மௌஜ்பூர் மெட்ரோ நிலையத்திற்கு அப்பால் கடந்து செல்வது சாத்தியமற்றதாகிப் போனது. கண்ணீர்ப்புகை குண்டுகள் சுடப்படும் சப்தத்தை ஒருவர் கேட்கலாம் அல்லது தூரத்திலிருந்து அதிக உயரம் எழுகின்ற புகை மேகங்களைக் காணலாம் என்ற நிலைமை நீடித்தது.

செவ்வாய்க்கிழமையன்று வடகிழக்கு டெல்லியில் இருந்த பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜாஃப்ராபாத் மற்றும் மௌஜ்பூர் மெட்ரோ நிலையங்களுக்கு இடையில் இருந்த நிலைமை திங்களன்று நடந்த சதியை நினைவூட்டுவதாகவே இருந்தது. ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்த முஸ்லீம்களுக்குச் சொந்தமான பல கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தெருக்கள் முழுவதும் கற்கள், செங்கற்கள், கண்ணாடி போன்றவற்றால் நிரம்பியிருந்தன.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, முஸ்லீம் ஆண்களும் பெண்களும் அடங்கிய குழு  ஜாஃப்ராபாத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வந்த தர்ணாவில் பெரும்பாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தது.  இருப்பினும் மூன்று நாட்களுக்கு முன்பாக தர்ணா ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதாக உணர்ந்த அந்த சமூகத்திற்குள் இருந்த மற்றொரு குழுவினர், ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்திற்கு அடியில் பிரதானச் சாலையை ஆக்கிரமித்து மற்றொரு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். .

சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்துகின்ற வகையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெறும் எந்தவொரு போராட்டத்தையும் அகற்றுவதற்கு தங்களுடைய ஆதரவாளர்கள் தயங்க மாட்டார்கள் என்று டெல்லி காவல்துறையையும் அரசாங்கத்தையும் அச்சுறுத்தும் வகையில், அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக தலைவரான கபில் மிஸ்ரா கூறிய பிறகு, மற்ற ஹிந்துத்துவா தலைவர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர்.

"பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைதியைக் காப்பதற்காக ஹிந்து மற்றும் முஸ்லீம் சமூகங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்தன. சீலாம்பூர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் இந்தியாவின் ஒத்திசைவான கலாச்சாரத்தை குறிப்பதாக இருந்தன. இப்போது எல்லாம் போய்விட்டது. எங்கள் பக்கத்து வீட்டுக்கார ஹிந்துக்கள்கூட இப்போது எங்களை சந்தேகத்துடனே பார்க்கிறார்கள்” என்று சமூக ஆர்வலரான ஓவைஸ் சுல்தான் கான் தெரிவித்தார். "இரு சமூகங்களுக்கிடையிலான உறவை சரிசெய்ய இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும்" என்று அவர் கூறினார்.

https://thewire.in/communalism/delhi-riots-jai-shri-ram-hindutva-bjp

 டெல்லி கலவரம்ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயல்திறன் கொண்ட கொள்கை தேவை என்று ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது

டெல்லியில் நடந்த வன்முறைகளின் போது, ஊடகவியலாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பிறகு, ஊடகவியலார்களின் பாதுகாப்பிற்கான தெற்காசிய வலையமைப்பு (South Asia Media Defenders Network  - சாம்டென்) என்ற நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சாம்டென்:  செயல்திறன் கொண்ட பாதுகாப்பு கொள்கை ஊடகங்களுக்குத் தேவைப்படுகிறது

புதுடெல்லி, பிப்ரவரி 26 - கும்பல் தாக்குதல்களிலிருந்து பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான வலுவான கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக சாம்டென் தெரிவித்துள்ளது.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்து செய்திகளைச் சேகரிப்பதற்காகச் சென்றிருந்த நிருபர்கள்  சுடப்பட்டும், தாக்கப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ளனர். சிலர் அந்தக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு, மிரட்டப்பட்டனர். சிலர் அச்சுறுத்தப்பட்டனர். ஹிந்து என்று தங்களை நிரூபிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். இன்னும் சிலர் குத்தப்பட்டு, தடிகளால் தாக்கப்பட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர், கல் எறிபவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஹெல்மெட் அணியத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அங்கே நடந்த வன்முறை அரசு நிர்வாகமும், காவல்துறையும் நிலைமையைக் கையாளத் தவறியதையே வலியுறுத்திச் சொல்கிறது. .

"அடிப்படை செய்தி சேகரிப்புகூட மிகவும் ஆபத்தான தொழிலாக மாறியுள்ளது என்பதையே டெல்லியில் நடந்திருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன" என்று சாம்டெனின் இந்திய ஒருங்கிணைப்பாளரான  சஞ்சய் ஹசாரிகா கூறுகிறார். "ஒவ்வொரு நாளும் பத்திரிகையாளர்கள் வெளியே சென்று, தாங்கள் செய்வதை, நன்கு அறிந்ததை, தங்களைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, உலகின் பிற பகுதிகளும் அதைக் கேட்க, பார்க்க, படிக்குமாறு தருகிறார்கள்". அவர்கள் மீது தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்வதைத் தடுப்பது ஒரு கிரிமினல் குற்றமாக மட்டுமல்ல, சுதந்திரமான பத்திரிகை தர்மத்திற்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள கருத்து சுதந்திரத்தை மீறுவதாகவும், செய்திகளை அறிந்து கொள்கின்ற பொதுமக்களின் உரிமையை மீறுவதாகவும் இது இருக்கிறது. இவ்வறான அச்சுறுத்தல்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் மனரீதியாக, உடல் ரீதியாக தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

மேலும் "ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்தவும், தங்கள் வேலையைச் செய்து வருகின்ற தொழில்முறை ஊடகங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் இந்திய அரசை, நேரடியாக மத்திய அரசிற்கு அறிக்கை அளிக்கின்ற டெல்லி காவல்துறையினரை, டெல்லி மாநில அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்" என்று ஹசாரிகா கூறினார். ஊடக அமைப்புகள் தங்களுக்குள் ஒற்றுமையைக் காட்ட வேண்டியிருக்கும் அதே வேளையில், பத்திரிகைகளின் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்குவதும் அவசியம் என்கிறார். 

சட்டப்பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டத்தின் கவசம் இல்லாமலேயே, ஊடகவியலாளர்கள் பலரும், அவர்களது குடும்பங்களும் அதிக ஆபத்தான நிலைமையில்,மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். "இது கட்டமைக்கப்பட்ட வழியில் ஊடகத் தலைமைகள் ஈடுபட வேண்டிய செயலாகும்: டெல்லியில் நடந்திருக்கும் சம்பவங்களும் மற்றும் பிற சம்பவங்களும் ஊடகவியலாளர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன."

(சாம்டென் என்பது தொழில்முறை ஊடகங்கள், தகவல் அறியும் செயல்பாட்டாளர்கள் மற்றும் பதிவர்களுக்கான வலைப்பின்னல் அமைப்பு ஆகும். இவர்களில் பலர் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அச்சுறுத்தல்களையும், தாக்குதல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். டாக்கா டெய்லி ஸ்டாரைச் சார்ந்த  மஹ்புஸ் அனாம், இலங்கை பத்திரிகை நிறுவனத்தைச் சார்ந்த குமார் லோபஸ், நேபாளத்தைச் சார்ந்த கனக் மணி தீட்சித்,  பாஸ்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற பீனா சர்வர் ஆகியோர் ஹசாரிகாவின் இணை ஒருங்கிணைப்பாளர்களாக தெற்காசியா முழுவதும் இருக்கிறார்கள்)

https://thewire.in/media/delhi-riots-samden-statement

- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு