மேற்குவங்கத்தில் உள்ள நந்திகிராமத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இங்கு 2008ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் அதிதீவிர இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நரவேட்டையாடிய திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் இங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு இதே கதி நேர்ந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சியின் கொடிய மக்கள் விரோத ஆட்சி தாண்டவமாடுவதை வங்கத்து மக்கள் பெரும் அதிருப்தியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை முற்றாகக் கைவிட்டது மம்தாவின் ஆட்சி. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து திரும்பி வங்கத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கிறார்கள். நந்திகிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோரின் சொந்த வீட்டைப் போன்றது நந்திகிராமத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அலுவலகத்தை மீண்டும் திறந்தார்கள். செங்கொடிகளை பறக்கவிட்டார்கள். ஜுன் 26 அன்று இந்த அலுவலகத்தில் வைத்து, பலநூற்றுக்கணக்கான எளிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஏராளமான நிவாரணப் பொருட்களை தொழிற்சங்கமே திரட்டி வழங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த பலதரப்பு மக்களின் உதவியோடு சமூக சமையல் கூடங்களை மார்க்சிஸ்ட் கட்சி, நந்திகிராம் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செங்கொடி நிச்சயம் உயரப் பறக்கும். அதுவே எளிய பாட்டாளி வர்க்கத்தை அரவணைக்கும்.