பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் என வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய தேசத்தின் மகத்தான புதல்வர்களில் ஒருவர் உஸ்தாத் பிஸ்மில்லா கான். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வாழ்நாள் முழுவதும் இசை சேவையில் ஈடுபட்டிருந்த உலகப்புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதையான பிஸ்மில்லா கான், இந்நூற்றாண்டில் பிறந்த இசை அறிஞர்களில் சிறந்தவராக கருதப்படுகிறார். பீகாரில் பிறந்த இவர் 20 வயதில் கங்கை கரையில் அமைந்துள்ள காசிக்குச் சென்றார். அவரது மாமாவிடம் ஷெனாய் இசை மாணவராக சேர்ந்தார். 70 ஆண்டுகாலம் இந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் மகத்தான அடையாளமாக உஸ்தாத் பிஸ்மில்லா கான் காசியிலும் கங்கைக் கரையிலும் இசைத் தென்றலாய் வலம் வந்தார். உலகமெல்லாம் அவரது இசை பரவியது. ஆலயத்தின் முதன்மை இசைக் கலைஞராக இருந்த போதிலும், காசி நகரின் நெருக்கடி மிகுந்த ஒரு தெருவில் எந்த வசதியும் இல்லாத வீட்டில் ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர் பிஸ்மில்லா கான். அன்பே இறைவன் என்று வாழ்நாள் முழுவதும் இறை இசைப் பணி மேற்கொண்ட பிஸ்மில்லா கான், நெடிய சிந்தையுடன் ஒரு முறை ஒரு கேள்வி எழுப்பினார் : “மானிடம் கடவுளால் படைக்கப்பட்டிருந்தால் மனித உறவில் சமத்துவம் இல்லையே ஏன்?”