புதுதில்லி:
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் பஞ்சாப் மாநில தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல, தானும் ஒருநாள் தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்படலாம்” என்று கூறியிருந்தார்.
இது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானது.இந்நிலையில், கெஜ்ரிவாலின் கருத்தை விமர்சித்து, ட்விட்டரில் பதிவிட்ட மத்திய பாஜக அமைச்சர் விஜய் கோயல், “உங்களின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களாலேயே உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறி தில்லி காவல்துறைக்கு நீங்கள் அவப்பெயர் ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள்” என்று கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
விஜய் கோயலின் இந்த பதிவுக்கு, கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். அதில், “விஜய் அவர்களே, எனது தனிப்பட்ட மெய்க்காப்பாளர்கள் அல்ல; பிரதமர் மோடியே நான் இறக்க வேண்டுமென்று விரும்புகிறார்” எனக் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.