புதுதில்லி:
2014-19 வரையான ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி 55 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக ரூ. 2 ஆயிரத்து 21 கோடி மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டது. தேர்தலுக்காக கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மோடி, ஜூன் 8-ஆம் தேதி முதல் மீண்டும் பயணத்தைத் துவங்குகிறார்.
மோடி தன்னுடைய இரண்டாவது ஆட்சியில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுகள் மற்றும் இலங்கை நாடுகளுக்குச் செல்கிறார். இலங்கைக்கு ஏற்கெனவே சென்றுள்ள மோடி, மாலத்தீவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.அந்த வகையில், மாலத்தீவுகளின் நாடாளுமன்றத்தில் பேச இருக்கும் மோடி பின்னர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் ரேடார் சிஸ்டம் தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
மாலத்தீவுகள் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இலங்கை செல்லும் அவர், புனித ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக பேச உள்ளார். இலங்கை குண்டுவெடிப்புக்களுக்குப் பின்னர், அந்நாட்டிற்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.