இராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் வீட்டிற்கு நடந்தே திரும்பி செல்ல முயற்சி செய்ததால் முதலாளியின் ஒப்பந்தக்காரரால் தாக்கப்பட்டனர்
மார்ச் 25 ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த பிறகும், ராஜஸ்தானின் நீம்ரானாவில் உள்ள எச்.என்.வி நிறுவனத்தில் பணிபுரிந்த ஜார்க்கண்டிலிருந்து குடியேறிய தொழிலாளர்கள், இது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்பி தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தனர்.
ஊரடங்கிற்கு முன்பாக மார்ச் மாதத்தில் தாங்கள் ஒன்பது நாட்கள் வேலை செய்ததற்காக பெற்ற ஊதியத்தை வைத்து ஏறத்தாழ இந்த இரண்டு மாத ஊரடங்கு காலத்தை சமாளித்துள்ளனர்...
மே 4 ஆம் தேதி நிறுவனம் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியபோது, இந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் சென்று மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கோரினர், ஆனால் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை. "வேலை சரியாக ஆரம்பிக்கப்படவில்லை, நாங்கள் சில மணிநேரங்கள் மட்டுமே வேலை செய்தோம், அதுவும் குறைந்த எண்ணிக்கையில். தொழிற்சாலை பணம் சம்பாதிக்கும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை, ”என்று ஜான்கண்டிலிருந்து
எச்.என்.வி நிறுவனத்தில் பணிபுரியும்
புலம் பெயர்ந்த தொழிலாளியான கௌதம் விஸ்வகர்மா என்பவர் (The Wire ) பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
ஆதரவற்று, சிக்கித்தவிக்கும் குடிமக்களுக்கான ராஜஸ்தான் மாநில அரசின் இ-மித்ரா போர்ட்டலில் தங்கள் பிரச்சினையை தொழிலாளர்கள் பதிவு செய்து, தங்கள் பதிவு மற்றும் தங்களின் ஊதியம் குறித்தான அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருந்தனர், ஆனால் இராஜஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
பின்னர் தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து, தங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்புமாறு ஒப்பந்தக்காரரை வலியுறுத்தினர். "ஒப்பந்தக்காரர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, ரேஷன் கடைக்காரரிடம் கூட எங்களுக்கு ரேஷன் கொடுக்க வேண்டாம் என்று ஒப்பந்தக்காரர் சொல்லி வைத்திருந்தார்," என்று அவர் கூறினார்.
தங்களின் நிலைமையைக் கண்டு சோர்ந்துபோன தொழிலாளர்கள் மே 12 அன்று ஜார்க்கண்டிற்கு நடந்துச்செல்ல திட்டமிட்டனர். “நாங்கள் ஊருக்கு திரும்பி வருகிறோம் எங்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பி வைக்கும்படி எங்கள் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டோம். நாங்கள் வழியில் சாப்பிடுவதற்காக ரேஷன் கடையில் சில பொருட்களை வாங்கினோம், இரவு 7 மணியளவில் நடக்கத் தொடங்கினோம், ”என்று ஜார்க்கண்டில் இருந்து குடியேறிய மற்றொரு தொழிலாளி சுரேந்திரா கூறினார்.
தொழிலாளர்கள் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபோது, அவர்கள் தங்கள் ஒப்பந்தக்காரரிடமிருந்தும் அவரது ஆட்களிடமிருந்தும் அழைப்புகளைப் பெறத் தொடங்கினர். "நாங்கள் சிறிது நேரம் எடுக்கவில்லை, ஆனால் அவர்கள் தொடர்ந்து எங்களை அழைத்தார்கள்," என்று அவர் கூறினார்.
இறுதியாக, அவர்களில் ஒருவர் ஒப்பந்தக்காரரின் ஆளான பிஜேந்திர சிங்கின் அழைப்பை எடுத்தார். "ஜார்கண்ட் செல்லும் வழியை தன்னிடம் சொல்லும்படியும் அவர்களின் இருப்பிடத்தையும் சொல்லும்படி கேட்டார்" . அவரை நம்பி, அவர்கள் இருப்பிடத்தை சொன்னார்கள்.
“இரவு சுமார் 12 மணி. நாங்கள் இருட்டில் சற்றே தொலைந்துவிட்டோம், எனவே பிஜேந்திரா எங்களுக்கு வழிகாட்டினால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம், ”என்றார் விஸ்வகர்மா.
இந்த தொழிலாளர்களின் கூற்றுப்படி, சிங்குடன் பேசிய சில நிமிடங்களில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
"அவர்கள் எங்களை நோக்கி சத்தம்போட்டுக்கொண்டே வந்து லத்திகளால் தாக்கத் தொடங்கினர். சுமார் மூன்று மணி நேரம் போலீசார் எங்களை சித்திரவதை செய்தனர். எங்களில் ஒருவருக்கு தலையில் அடிபட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டது ”என்று அவர் கூறினார்.
தொழிலாளர்கள் பின்னர் நீம்ரானாவில் உள்ள நிறுவன வளாகத்திற்கு அருகிலுள்ள தங்கள் அறைகளுக்கு திரும்பிச்சென்றனர்.
அங்கு, ஒப்பந்தக்காரரும் அவரது ஆட்களும் எங்களுக்காக காத்திருந்தார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். "நாங்கள் அடைந்ததும், அவர்களும் எங்களைத் தாக்கத் தொடங்கினர்," என்றார் விஸ்வகர்மா.
மறுநாள் காலையில், தொழிலாளர்கள் தாக்கியதற்காக ஒப்பந்தக்காரர் மற்றும் அவரது ஆட்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்தனர், ஆனால் ஒப்பந்தக்காரர் மற்றும் நிறுவனத்தின் நான்கு பொது மேலாளர்களுடன் வந்து வழக்குத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
"இதுபோன்ற விஷயங்கள் சில நேரங்களில் நடக்கும் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள், எனவே சமரசம் செய்வது நல்லது, நாங்கள் புகார் செய்யாமல் இருந்தால், அவர்கள் ஜார்கண்டிற்கு திரும்பிச் செல்ல பேருந்து ஏற்பாடு செய்வதாக எங்களுக்கு உறுதியளித்தனர்," என்று அவர் கூறினார்.
இருப்பினும், நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல இன்றுவரை காத்திருக்கிறார்கள்.
தொழிலாளிகளின் இந்த குற்றச்சாட்டை ஒப்பந்தக்காரர் ஜிதேந்திர சிங் மறுத்தார். "அவர்கள் வேலை செய்தால் நாங்கள் அவர்களுக்கு சம்பளம் தருவோம் என்று நாங்கள் அவர்களிடம் கூறியிருந்தோம், ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் அவர்கள் இங்கே இருந்தால் COVID-19 நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள்," என்று அவர் தி வயரிடம் கூறினார்.
"மே 4லிருந்து பணிபுரிபவர்களுக்கு, இந்த மாத சம்பளத்தை நாங்கள் அவர்களின் கணக்குகளில் செலுத்தியுள்ளோம், அவர்களில் சிலருக்கு இன்று தரவுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், தொழிலாளர்களை அடித்ததற்காக ஒப்பந்தக்காரர் மீது நீம்ரானா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. தி வயருடன் பேசிய பிவாடி காவல்துறை கண்காணிப்பாளர் அமன்தீப் சிங் கபூர், “இந்த தொழிலாளர்கள் இரவில் நடப்பதைக் கண்ட காவல்துறையினர் அவர்களை நீம்ரானாவில் உள்ள அறைகளுக்கு திருப்பிச்செல்ல வலியுறுத்தினார்கள். இ-மித்ரா போர்ட்டலில் பதிவு செய்யச் சொன்னார்கள். இந்த தொழிலாளர்கள் காவல்துறையினருடன் கொண்டிருந்த ஒரே தொடர்பு இதுதான். " என்றார்.
"உண்மையில், தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு வந்து, அவர்களில் ஒருவரை தாக்கிய ஒப்பந்தக்காரருக்கு எதிராக புகார் பதிவு செய்தனர்," என்றும் அவர் கூறினார்
மே 15 தேதியிட்ட மற்றும் தி வயர் அணுகிய புகாரில், தொழிலாளர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரியபோது, அவர்களது ஒப்பந்தக்காரர் குட்டூ அவர்களை தொழிற்சாலையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும் விஸ்வகர்மா போலீசாரிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 13 அன்று தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்றபோது, குட்டூ அவர்களைத் திரும்ப அழைத்து, அவர்களின் பயணம் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததாக அந்த அறிக்கை பதிவு செய்கிறது. மே 14 அன்று, குட்டூ மீண்டும் அவர்களை வேலைக்கு வரச் சொன்னபோது, தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், அவர் அவர்களை பிரம்பால் அடித்தார். இந்த தாக்குதலில் விஸ்வகர்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
தொழிலாளர்கள் தி வயர் மற்றும் காவல்துறையினரிடம் கூறிய தேதிகளுக்கு இடையில் வேறுபாடு இருப்பதாக விஸ்வகர்மா ஒப்புக்கொண்டார். “ஆம், இது ஒரு தவறு. நாங்கள் மே 12 அன்று ஜார்க்கண்டிற்கு புறப்பட்டோம், மே 13 அன்று குட்டூ என்னைத் தாக்கினார், ”என்று விஸ்வகர்மா தி வயரிடம் கூறினார்.
Source: https://thewire.in/labour/neemrana-migrant-workers-police