tamilnadu

img

சைக்கிளில் கார்மோதி புலம்பெயர்ந்த தொழிலாளி பலி

லக்னோ:
வெளி மாநிலத்தில் வேலை செய்த புலம் பெயர் தொழிலாளி, தனது நண்பர்களுடன் 1000 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் புறப்பட்டார். பாதி தூரத்தைக் கடந்து லக்னோவை அடைந்த நிலையில் கார் மோதி அவர் பலியானார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சில தொழிலாளர்கள் சைக்கிள் அல்லது நடைப்பயணமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதி பழன்வாவைச் சேர்ந்த 26 வயதான சாஹிர் அன்சாரி தங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஏழு நண்பர்களுடன் தில்லியில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த இவர்கள், சைக்கிளில் மே 5-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 1000 கி.மீ தூரத்தை சைக்கிள் மூலமாகவே அனைவரும் கடக்க முடிவெடுத்தனர். லக்னோ வரை பாதி தூரத்தை கடக்கவே அவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆகியுள்ளது. மே 10-ஆம் தேதி காலை 10 மணியளவில் உணவு உண்பதற்காக சாலையின் தடுப்பில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மற்றவர்கள் அருகில் இருந்த மரத்தில் தூக்கி எறியப்பட்டதால் ஓரளவு காயத்துடன் தப்பினர். காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், இழப்பீடு பணம் கொடுப்பதாக கூறி பின்னர் மறுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அன்சாரியை, நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மோதிய கார் லக்னோவை சேர்ந்த பதிவு எண்ணை கொண்டதாகவும், அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.  உயிரிழந்த அன்சாரிக்கு, மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.இறந்த சாஹிர் அன்சாரியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ. 14 ஆயிரம் ரூபாய் கேட்பதாக அவரது நண்பர் அன்சாரி கூறினார். நாங்கள் ஏழை மக்கள். சம்பாதித்தால் தான் சாப்பிட முடியும். இல்லையென்றால் நாங்கள்  உணவு இல்லாமல் பட்டினியாக கிடக்க வேண்டியதுதான் என்று கூறினார்.

புதன்கிழமை இரவு இதே சாலையில் ஒரு விபத்து நடந்தது. லக்னோ, கிருஷ்ணா மற்றும் பிரமிளாவின் ஜான்கிபுரம் பகுதியில் வசித்து வரும் சத்தீஸ்கரின் பெஹ்மதாரா மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தம்பதியினர் 700 கி.மீ. தொலைவில் உள்ள தங்கள் வீட்டிற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் அவர்களது இரண்டு சிறு குழந்தைகளும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;