ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவு ஏழு மணிக்கு அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ”ரெண்டு பெண்கள் ஆட்டோ மோதி கீழே விழுந்துட்டாங்க… உங்க ஆபீஸ் ஐ.டி. கார்டு வச்சிருக்காங்க… சீக்கிரம் வாங்க..” என்று சொல்லிவிட்டு மருத்துவமனை இருக்கும் இடத்தையும் சொன்னார்கள். ஆண்களும் பெண்களுமாய் 100 பேர் பணியாற்றும் அலுவலகத்தில் யார் விபத்தில் சிக்கியது என்ற பதற்றத்தில் புறப்பட்டுச்சென்றோம். “கோயிலுக்குப் போகணும். சார் பர்மிஷன் வேணும் எனக் கேட்டுச் சென்றவர்கள். வீட்டுக்குச் சென்று உடை மாற்றி, சீக்கிரம் கோயிலுக்குப் போகவேண்டும் என்ற அவ சரத்தில் சாலையைக் கடக்க முற்பட்டவர்களை ஒரு ஆட்டோக்காரன் அநியாயமாக தள்ளிவிட்டுச் சென்றுவிட்டான். உடலெங்கும் உராய்வுகளாலும் ஊமை அடிகளாலும் அந்தப் பெண்கள் துடிதுடித்ததைப் பார்க்கப் பொறாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த இருவரும் பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்ட வர்கள். அலுவலகத்தில் அனுமதி பெற்று சற்றே முன்னதாகப் புறப்பட்டு, குளித்து, உடை மாற்றி, கோவிலில் வழிபட்டு, பின்னர் வழக்கம்போல தங்களுக்காய் வீட்டில் பணிக்கப்பட்ட சமை யல் பணிகளை முடித்துவிட்டு, பிள்ளைகளை சாப்பிட வைத்து, தானும் உண்டு, வழக்கம் போலவே தாமதமாக வரும் கணவனின் வருகைக்காய் காத்திருந்து என நீண்டு செல்லும் பணிப் பளுவால் வேலைக்குப் போகும் பெண்களில் 60 விழுக்காட்டினர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியான காரணங்கள் பல இருந்தாலும் பணி ரீதியான காரணங்களே முதன்மையானவை. வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைப் போக்குவது குறித்தும் நாம் காலந்தோறும் விவாதித்துக் கொண்டுதானிருக்கிறோம். நம் சமூகச் சூழல் பெண்ணை இன்னும் தள்ளி வைத்தே பார்க்கிறது. மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். நூறாண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர். ஆனால் பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள் குறைந்தபாடில்லை.
உலகில் பெண்கள் மேலான ஒடுக்குமுறை, தனிச்சொத்துரிமை தோற்றத்துடன் தொடங்கியது. சொத்துரிமை ஆணின் கையில் செல்லவே, பெண் ஆணின் சொத்தானாள். இது ஆணாதிக்கத்தை பெண் மீது திணித்தது. இந்த தனிச் சொத்துரிமை அமைப்பு தன் உற்பத்தித் திறன் சார்ந்து தன்னை மாற்றி அமைத்த உற்பத்தி முறை, சமூக அமைப்புகளையும் அதன் கோட்பாடுகளையும் மாற்றி அமைத்தது. இப்படி உருவாக்கிய கோட்பாடுகளும், தனிச்சொத்துரிமை கண்ணோட்டமும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தியது. இயல்பாக ஆணின் சொத்துரிமை சார்ந்த பெண் மேல் கொண்டிருந்த அதிகாரத்தையும், அடக்குமுறையையும் நியாயப்படுத்தியது. ஒடுக்குமுறையும், ஒடுக்குமுறை வடிவங்களும், தனிச் சொத்துரிமை அடையும் வடிவம் சார்ந்து வேறுபட்டதாக காணப்பட்டது. ஆனால் தனிச்சொத்துரிமை சார்ந்து பெண் மேலான ஒடுக்குமுறையின் உள்ளடக்கம் மாறிவிடவில்லை. இதனால் பெண்ணின் போராட்டமும், சமூகத்தின் போராட்டமும், தனிச்சொத்துரிமை சமூகத்தில் இருந்தே தொடங்குகின்றது. இப்படி தனிச்சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்க ஒடுக்குமுறை, மூவாயிரம் வருடமாகத் தொடருகின்றது. பெண்ணின் போராட்டமும் அதே கால அளவைக் கொண்டது. ஆனால் பெண் விடுதலை.......?
இது போன்று பல கேள்விகளைப் போகிற போக்கில் கேட்டுவிட்டு நாம் போய்க்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் தம் உயர் அலுவலர்களின் அடக்கு முறைக்கு ஆளாகும் பெண்களில் நம் உறவுகள் யாரும் இல்லை. அதனால் கவலையில்லை. படித்து வேலைக்குப் போய் தன் குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காய் கிடைத்த வேலையில் மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களில் நம் அக்காவோ தங்கையோ யாருமில்லை. அதனால் கவலையில்லை. அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி பணம் கொடுத்து தற்காலிகப் பணியாளர்களாக அரசு அலுவலகங்களில் சிக்கி பணிப்பளுவால் புழுவாய்த் துடிக்கும் ஆயிரமாயிரம் அபலைகளில், நம் பிள்ளைகள் யாருமில்லை…. அதனால் கவலையில்லை. இப்படித்தான் நம்மில் பலர் நம்மை நாமே தற்காத்துக் கொள்வதாய் நினைத்துக் கொண்டு சமூகத்தை ஊனப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் ஆண்களுக்கு நிகராக…. ஆண்களை விட மேலாக பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழமைவாதிகள் பெண்களை முன்னேறவிடாமல் தடுப்பதோடு பல வழிகளிலும் இடையூறாகவும் உள்ளனர். தனிப்பட்ட ஆண் அல்லது ஆண் சமூகத்தை பெண்ணுக்கு எதிராக காட்டுவதன் மூலம், தனிப்பட்ட பெண் அல்லது பெண் சமூகத்தை முன்னிறுத்துகின்றனர். இது ஆணையும் பெண்ணையும் மோத வைக்கின்றது. ஆண் பெண் ஒரு சமூகமாக சேர்ந்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுவதை இது மறுதலிக்கிறது. சமூகத்தின் விடுதலைக்குப் பதில், ஆணாதிக்கம் பெண் வடிவில் மீள அரங்கேறுகிறது. சமூக விடுதலை என்பது பெண் விடுதலை மட்டுமல்ல, ஆணை ஆணாதிக்கத்தில் இருந்து விடுப்பதும் தான். இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து ஆண் பெண் இருவரும் விடுதலை அடைவது தான், ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலையாகும்.
இன்றைய உலகச் சந்தையில் நுகர்வு என்பதே ஆணாதிக்க நுகர்வாகவே இருக்கிறது. பெண் தான் விரும்பியதை நுகர முடியவில்லை. இப்படி பெண்ணியம் ஆணாதிக்க சமூக அடிப்படையை பாதுகாத்துக் கொண்டு, இன்று பல்வேறு முழக்கங்கள் ஊடாக ஆணாதிக்கம் புதுப்புது வடிவம் எடுக்கிறது. ஆணாதிக்கத்தை உருவாக்கிய தனிச்சொத்துரிமையை பாதுகாத்தபடி தான், இன்று பெண்ணியம் பேசப்படுகிறது. சாராம்சத்தில் இந்த பெண்ணியம் ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை சார்ந்து, மறு வடிவம் பெறுகிறது. சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்கும் உதவும் வகையில் இல்லாத எல்லா பெண்ணியவாதக் கோரிக்கையும், ஆணாதிக்கத்தைத் தக்கவைக்கும் முயற்சியின் அங்கமாக உள்ளதுடன், மனிதப் பிளவுகளில் உயிர் வாழும் நச்சுக் காளான்களாக உள்ளன.
இன்றைய உலகச் சந்தையில் நுகர்வு என்பதே ஆணாதிக்க நுகர்வாகவே இருக்கிறது. பெண் தான் விரும்பியதை நுகர முடியவில்லை. இப்படி பெண்ணியம் ஆணாதிக்க சமூக அடிப்படையை பாதுகாத்துக் கொண்டு, இன்று பல்வேறு முழக்கங்கள் ஊடாக ஆணாதிக்கம் புதுப்புது வடிவம் எடுக்கிறது. ஆணாதிக்கத்தை உருவாக்கிய தனிச்சொத்துரிமையை பாதுகாத்தபடி தான், இன்று பெண்ணியம் பேசப்படுகிறது. சாராம்சத்தில் இந்த பெண்ணியம் ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை சார்ந்து, மறு வடிவம் பெறுகிறது. சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்கும் உதவும் வகையில் இல்லாத எல்லா பெண்ணியவாதக் கோரிக்கையும், ஆணாதிக்கத்தைத் தக்கவைக்கும் முயற்சியின் அங்கமாக உள்ளதுடன், மனிதப் பிளவுகளில் உயிர் வாழும் நச்சுக் காளான்களாக உள்ளன.
எத்தனை வயதானாலும் ஆணையும், பெண்ணையும் பாலினக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கும் பார்வையை கட்டாயமாக்கியுள்ளது நம் சமூகத்தின் கண்கள். ஆனால் அதையும் தாண்டி தாங்கள் இணைந்து செயல்படுவதால் ஏற்படும் நன்மைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் மெய்ப்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் போராடினார்கள். இளம் தலைமுறையைச் சார்ந்த ஆண்களும் பெண்களுமாய் வெட்ட வெளியில் நாள் கணக்கில் இரவு பகலாக குழுமியிருந்த வர்களிடம் பாலின பேதமில்லை…. வன்மம் இல்லை. வன்முறையில்லை. தனி மனித தாக்கு தல் இல்லை… வல்லுறவில்லை. குரோத மில்லை. எங்கும் நீக்கமற மனித நேயமும் சகோதரத்துவமும்தான் நிறைந்திருந்தன. பெண்களில் பலர் போராட்டத்தை வழி நடத்தும் தளகர்த்தாக்களாகவும் விளங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் காக்கப்பட்ட கண்ணியம்தான் உலக அளவில் உரக்கச் சொல்லப்பட்டது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாய் வாழவும், வரலாறு படைக்கவும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் சமூக அமைப்புகளும், உலகமயமாக்கலும்தான் அவர்களைப் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. தடை உடைத்து வரலாறு படைத்திடும் சக்தி நம் சந்ததியர்களுக்கு உண்டு.