கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 2
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம், கலை இலக்கிய வாதிகளில் மன்றம் இவற்றை கட்டி வளர்த்த தலைவர் தோழர் ஜீவானந்தம். அவர் கவிஞர், நாவன்மை படைத்த பேச்சாளர், போராளி, எளிமையின் சின்னமாய் திகழ்ந்தவர். உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களிடையே பேசி அவர்களை மார்க்சியத்தின்பால் ஈர்த்தவர். அவர் பேச்சைக் கேட்பதற்கு ஆன்மீகவாதிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வந்து கூடுவார்கள். அவரது பேச்சில் பாதி இலக்கியமும், பாதி அரசியலும் மிளிரும்.
விளையும் பயிர் முலையிலே தெரியும் என்பதுபோல் அவரது பிறந்த ஊரான பூதப்பாண்டியில் சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சுண்டலை பகிர்ந்தளித்து சமத்துவத்தை நிலைநாட்டியவர். சாதி மற்றும் தீண்டாமை கொள்கைகளுக்கெதிராக போராடியவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே கவிதை, நாடகம், நாவல் எழுதத் துவங்கினார். மேல் சாதியினர் வசிக்கும் வீதியில் ஒரு அரிஜன சிறுவனை அழைத்துக் கொண்டு போய் புரட்சி செய்தார். அதனால் அந்த ஊரார் ஜீவாவை விலக்கிவைத்தனர். இதனால் தாய், தந்தையருடன் பகைமை ஏற்பட்டு, படிப்பை நிறுத்தி விட்டு வீட்டை விட்டு வெளியேறி தீண்டாமைக்கெதிராக ஆலயப் பிரவேசங்களை நடத்தினார். சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர் நடத்தி வந்த பரத்வாஜ் ஆசிரமத்தில் பிராமண மாணவர்களுக்கு மட்டும் தனி இடத்தில் உணவு பரிமாறும் வழக்கத்தை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டத்தில் தோழர் ஜீவா கலந்து கொண்டார்.
காரைக்குடி அருகில் சிராவயல் என்ற கிராமத்தில் காந்தி ஆசிரமத்தை தோற்றுவித்தார். சாதி வேறுபாடின்றி ஆண்களும் பெண்களும் சமத்துவமாக அங்கு கல்வி கற்றனர். அங்கு வந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை பெண்களின் வீரம் பற்றி ஜீவா பேசியதைக் கேட்டு மிகவும் பாராட்டினார். “அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது. ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும்” என்று வ.உ.சி. புகழ்ந்து கூறினார்.
மகாத்மா காந்தியின் தலைமையில் 1922ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் போதுதான் ஜீவா அரசியலில் நுழைந்தார். ஜீவாவின் காந்தி ஆசிரமத்திற்கு மகாத்மா காந்தி வந்தார். காந்தி ஆசிரமத்தை பார்த்துவிட்டு ஜீவாவிடம் உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு ஜீவா, இந்தியா தான் எனது சொத்து என்று பதிலளித்தார். மகாத்மா “இல்லை, இல்லை நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்று கூறினார். பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்து அவருடன் சேர்ந்து செயல்பட்டார். அச்சமயத்தில் சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியார், ரஷ்ய நாட்டிற்குச் சென்று திரும்பி எங்கும் சமதர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். இந்தியப் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் மிக முக்கிய இடம்பெற்ற தலைவர் சிங்காரவேலர் எனும் சிந்தனைச் செம்மலின் தொடர்பால் ஜீவாவிற்கு தத்துவ அடிப்படையில் சில தெளிவுகள் ஏற்பட்டன.
“நான் நாத்திகன் ஏன்?” என்ற பகத்சிங்கின் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்த குற்றத்திற்காக ஜீவாவையும், வெளியிட்டதற்காக பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும் வெள்ளையர் அரசு கைது செய்தது. கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலர் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார். அவர் மூலம் ஜீவாவுக்கு மார்க்சியம் அறிமுகமானது. ஜீவா பெரியாரிடமிருந்து பிரிந்து 1935ல் சுய மரியாதை சமதர்மக் கட்சியை துவங்கினார். இதில் தோழர் எஸ்.ஏ.டாங்கே கலந்து கொண்டு இந்தக் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினார். 1936ல் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் அதன் பொதுச் செயலாளராக ஜீவா தேர்வு செய்யப்பட்டார்.
பம்பாயிலிருந்து தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க எஸ்.வி.காட்டே வந்தார். அமீர் ஹைதர்கான், சுந்தரய்யா, ஏ.எஸ்.கே, பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து ஜீவா செயல்பட துவங்கினார். 1936 முதல் தமிழகம் முழுவதும் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை கைதானார். அது பஞ்சாலைத் தொழிலாளர் முதல் ரயில்வேத் தொழிலாளர் வரை அவர் பங்கேற்காத போராட்டங்களே இல்லை. தனது உணர்ச்சிமிக்க உரைகளால் போராடுவதற்கு தொழிலாளர் நெஞ்சில் கனல் மூட்டினார். பாரதிக்குப் பின், பாரதி வழியில் நின்று தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், தமிழகத்திற்கும் பாடுபட்ட தனிப்பெரும் தலைவர் ஜீவாவே.
மண்டபங்களுக்குள்ளும், மாநாட்டுப் பந்தலுக்குள்ளும் மற்றவர்கள் பாரதி புகழ் பாடிக் கொண்டிருந்த காலத்தில் பாரதியை, பாரதியின் குரலை பாமரர்களிடத்தும், தொழிலாளர்களிடத்தும், பண்டித மகாசபைகளிலும் ஜீவா முழங்கினார். அரசியல் சொற்பொழிவானாலும், தொழிலாளர் போராட்ட உரையானாலும் பாரதியின் வாசகங்களை இணைத்துப் பரப்பிய பெருமை ஜீவாவிற்கே தனி உரிமையாகும். கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் பெரும் படைப்பாளிகளின் படைப்புகளுக்குள் மூழ்கி முத்தெடுத்து அதைப் பல்வேறு கோணங்களில் தமிழ் மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டினார். தானும் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞராகத் திகழ்ந்து கவிதைகளை எழுதி வெளியிட்டார். 1937ஆம் ஆண்டு ஜனசக்தி பத்திரிகையை துவக்கினார். ஜீவாவுடன் பி.ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே, முருகேசன் ஆகிய தோழர்கள் அவருக்கு உதவினர். கலைஞர்கள் டி.கே.சண்முகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சரஸ்ரநாமம், எம்.ஆர்.ராதா மற்றும் பல கலைஞர்களுடன் மிகுந்த நட்புடன் இருந்தார். அவர்களும் கட்சிக்கு பல வழிகளில் உதவினர். தமிழகத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை உருவாக்கினார். 1952 தேர்தலில் வடசென்னை தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். சட்டமன்றத்தில் தமிழில் முதலில் பேசியவர் இவரே. 16.1.1963ல் திடீர் உடல்நலக் குறைவினால் ஜீவா காலமானார். அவரது பேச்சைக் கேட்டவர்களின் காதுகளில் இன்னும் அந்த சிம்மக்குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தொடரும்...