tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வாழ்க்கை செலவு குறியீட்டு எண் அடிப்படையில் இணைக்க வேண்டிய கோரி டிகே ரங்க ராஜன் கடிதம்

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வாழ்க்கை செலவு குறியீட்டு எண் அடிப்படையில் இணைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி டிகேரங்க ராஜன் எம்பி  மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர்  சந்தோஷ் கங்குவார் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

விலைவாசி உயர்வு காரணமாக குறைந்து வரும் உண்மையான கூலியால், அவதிப்படும் ஒப்பந்த ஊழியர்களின் பரிதாப நிலையை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நிரந்தர  ஊழியர்களுக்கு சட்டப்படி தர வேண்டிய சலுகைகள் காரணமாக ஏற்படுகிற செலவை குறைக்கவே பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் அணி திரட்டப்படாத ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
துரதிருஷ்டவசமாக, பெருவாரியான இந்த ஒப்பந்த ஊழியர்களின் கூலி என்பது விலைவாசி உயர்வால் பாதுகாக்கப்படாத நிலை உள்ளது. அணிதிரட்டப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்குறியீட்டு எண் ஊதியம் இணைக்கப்பட்டுள்ளது. நமது தேசத்தின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை செய்து வரும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் விலைவாசி உயர்வால் குறையாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எனவே, இந்தப் பெருவாரியான தொழிலாளர்களை பாதுகாத்திட அவர்களது ஊதியத்தை விலைவாசி குறியீட்டு எண்ணுடன் இணைக்க தகுந்த புதிய சட்டத்தினை இயற்றுவது நாடாளுமன்றத்தின் உடனடி கடமை என நான் கருதுகிறேன். இந்த சட்டம், தொழிலாளர்களின் விலைவாசி உயர்வுக்கேற்ப தகுந்த ஊதிய உயர்வினை அவர்களது நிறுவனத்திடமிருந்து பெற அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருந்திடல் வேண்டும்.
ஊதியம் வழங்கும் சட்டத்திற்கு தகுந்த திருத்தங்கள் கொண்டு வந்து அணி திரட்டப்படாத ஒப்பந்த ஊழியர்கள் நிவாரணம் பெற வழிவகை செய்திட தாங்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன் .