இந்திய ஒற்றுமை காப்போம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு சென்னையில் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.
இந்தி திணிப்பை எதிர்த்தும், தாய்மொழிப் பாதுகாப்பை வலியுறுத்தியும் மாநில அளவில் பலகட்ட போராட்டங்கள், மாநாடுகள் நடந்த வரலாறு உண்டு. ஆனால், தென்மாநிலங்களை ஒருங்கிணைத்து மொழி பிரச்சனை குறித்து நடைபெறும் முதல் மாநாடு இதுவே ஆகும்.
இம்மாநாட்டு செய்தியினை உற்றுநோக்கும் சிலர் மார்க்சிஸ்ட்டுகளுக்கு இப்போதென்ன மொழி பிரச்சனையில் புதிய அக்கறை வந்துவிட்டது என கேள்வி எழுப்பக் கூடும். ஆனால், இந்திய வரலாற்றை உற்றுநோக்கினால் விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி, இப்போது வரை இடியாப்பச் சிக்கலாக நீடித்து வரும் மொழி பிரச்சனைக்கு தெளிவான, ஜனநாயகப் பூர்வமான தீர்வினை வற்புறுத்தி போராடி வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படும் என்பதை ஏற்றுக் கொண்ட போதிலும், மொழிப் பிரச்சனையில் நியாயமான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. தாய்மொழிக் கல்வி, மாநிலங்களில் ஆட்சி மொழி என்பதை ஏற்றுக் கொண்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தி மொழியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமெனவும், இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்புவதன் மூலமே இந்திய ஒற்றுமையை பாதுகாக்க முடியும் என்ற நிலையை மேற்கொண்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தி பிரச்சார சபாக்களும் அப்போது அமைக்கப்பட்டன. 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி 125 பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என அரசாணை வெளியிட்டார். இதை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் அனைத்துக் கட்சிகள் ஒன்றுகூடி நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்ற பல பெண்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்போது சிறையில் அடைக்கப்பட்ட நடராசன், தாளமுத்து ஆகிய இளைஞர்கள் மரணமடைந்தனர். மொழிப்போரில் உயிர்நீத்த முதல் தியாகிகள் இவர்களே.
விடுதலைக்குப் பிறகு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயக்குழுவில் மொழிப்பிரச்சனை குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எண்ணற்ற கருத்துப் போராட்டங்களும் நீடித்தன. இறுதியாக, மொழிப் பிரச்சனை குறித்த 17வது அட்டவணை அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டப் பிரிவு 343 முதல் 351 வரையிலான பிரிவுகள் மொழிப் பிரச்சனை குறித்த அணுகுமுறைகளை விளக்குகின்றன.
மொழிப்பிரச்சனையில் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து மொழியியல் துறை நிபுணர் ராமாகாந்த் அக்னி கோத்தாரி தெரிவித்துள்ள கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. “மொழி அடிப்படையில் மாநிலங்களை பிரிப்பது, தேசிய மற்றும் அலுவல் மொழியை தீர்மானிப்பது, அதன் எழுத்து வடிவம், தாய்மொழிக் கல்வியின் பாத்திரம், நீதிமன்றம் மற்றும் நிர்வாக மொழி, சிறுபான்மை மக்களது மொழிப் பிரச்சனைகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இவ்விவாதங்கள் போற்றத்தக்க அறிவுக்கூர்மையுடன் நடைபெற்ற போதிலும் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட முடிவானது, இந்தியாவின் பெருமைப்படத்தக்க பன்மொழி மற்றும் பல கலாச்சார அம்சங்களை நிராகரிக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டது. மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் சமரசம் செய்து கொள்ளப்பட்டது. பன்மொழி பேசும் மக்களின் உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவானது எதிர்காலத்தில் மொழி மற்றும் கலாச்சார அடிப்படைகளை மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்” என குறிப்பிட்டார். அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது.
அரசியல் சட்டப்பிரிவு 343 தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழியே மத்திய அலுவல் மொழியாகும் என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. இதற்கு துணையாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு (1965ஆம் ஆண்டு) ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தலாம். எனவே, 1965ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்பது தெளிவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல மொழி பேசும் பல நாடுகளில் அனைத்து மொழிகளும் ஆட்சிமொழியாகவும், நிர்வாக மொழியாகவும் ஏற்கப்பட்டு சுமூகமான அணுகுமுறை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் பல மொழிகளை நிராகரித்து இந்தி மொழி மட்டுமே மத்திய ஆட்சி மொழி என தீர்மானித்துள்ளதே இந்திய மொழிச் சிக்கலுக்கு ஆணி வேராகும்.
ஆர்.எஸ்.எஸ். தத்துவ நிலை
இன்னொரு பக்கம் விடுதலைப் போராட்டக் காலத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து மகா சபாவும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதையும், இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவ நிலை வழங்கப்படுவதையும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டுமென்ற கருத்தோட்டத்தையும் தொடர்ந்து எதிர்த்து பிரச்சாரம் செய்தன.
இவ்வமைப்புகளை பொறுத்த வரை இந்தியா ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்பதே தத்துவ நிலைபாடு. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் கிடைத்த வாய்ப்பு முழுவதையும் பயன்படுத்தி நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழியை படிப்படியாகவும், இறுதியாக சமஸ்கிருதத்தை அரங்கேற்றுவதற்கான முயற்சிகளையும் அனுதினமும் மேற்கொண்டு வருகிறது. இதனுடைய ஒரு பகுதியாகவே அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 1991ம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக கொண்டாட வேண்டுமென அரசாணை வெளியிட்டார். தற்போது அறுதிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்தித் திணிப்பை வலிந்து மேற்கொண்டு வருகிறது. இதன் வெளிப்பாடே சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா “இந்தியாவின் அடையாளமே இந்தி மொழி தான்” என பகிரங்கமாக கூறியுள்ளது ஆகும். மேலும் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள தேசிய கல்வி வரைவுக் கொள்கையின் இறுதி அறிக்கையில் பள்ளிகளில் நாடு முழுவதும் மும்மொழித் திட்டம் அமலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபத்தின் உச்சக்கட்டம் அடுத்த பகுதியில் தான் உள்ளது. “4.15: லத்தீன், கிரேக்கம் ஆகிய உலக மொழிகள் இரண்டும் சேர்ந்தாலும், அளவில் அவற்றை விட அதிகமான இலக்கியங்களை தன்னுள் கொண்ட மொழியாக 8ஆவது பட்டியலில் உள்ள முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதம் விளங்குகிறது. கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருந்து, கட்டிடக் கலை, உருக்கு கலை, நாடகம், கவிதை, கதை ஆகிய துறைகளில் பல்வேறு மதங்களைச் சார்ந்த, மத நம்பிக்கை ஏதுமில்லாத, பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த விரிவான சமூக, பொருளாதார பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் உருவாக்கிய எண்ணற்ற கருவூலங்களைக் கொண்டதாகவும் அது (சமஸ்கிருதம்) விளங்குகிறது”.
இவ்வாறு சமஸ்கிருத மொழியின் பெருமைகளை பாடுவதன் மூலம் இனி வருங்காலங்களில் இதர மொழிகளைப் போல் பள்ளி பாடத்திட்டத்தில் சமஸ்கிருதமும் அறிமுகப்படுத்தப்படும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் மக்களின் தாய்மொழிகளாக உள்ள நிலையில் அம்மொழிகளில் மாணவர்கள் படிப்பது அவசியமான ஒன்றாகும். இவைகளோடு சேர்த்து சமஸ்கிருதத்தை மாணவர்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை. சமஸ்கிருதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நேச மொழி என்பதைத் தவிர வேறு காரணங்கள் ஏதுமில்லை.
ஆக ஒட்டுமொத்தத்தில் ஆரம்பக் கல்வி முதல் மும்மொழித் திட்டத்தை திணித்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மாணவர்களின் சிந்தனையில் திணிப்பதே தேசியக் கல்வி கொள்கையின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு சிபாரிசுகள் அரசுக்கு முன்மொழியப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நாடு முழுவதும் அமலாக்கப்பட்டு வருகிறது. இக்குழுவின் 117 சிபாரிசுகளும் இந்தி மொழியை நாடு முழுவதும் திணிப்பதற்கான வழி வகைகளைக் கொண்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க ஒரு இந்தி அலு வலரை நியமிப்பது, ஆங்கிலக் கல்வி மட்டுமே உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி கல்வியை கட்டாயமாக புகுத்துவது, விஞ்ஞான கல்விக் கூடங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் நூலகங்களுக்கு புத்தகங்கள், இதழ்கள் வாங்கும் போது 50 சதவீதத்தொகை இந்தி புத்தகங்களுக்கு, இதழ்களுக்கு செலவழிக்கப்பட வேண்டும் போன்ற பல வகைகளில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தி மொழி வளர்ச்சிக்கு பல நூறு கோடிகளை ஒதுக்கும் மத்திய அரசு அதேசமயம், இந்தியாவின் 8ஆவது அட்டவணையில் உள்ள மொழிகளின் வளர்ச்சிக்கு சல்லிக்காசு கூட ஒதுக்குவதில்லை என்பதிலிருந்தே மற்ற மொழிகளின் பால் மேற்கொள்ளப்படும் பாரபட்சமான அணுகுமுறையைப் புரிந்து கொள்ள முடியும்.
துவக்கத்திலிருந்தே இந்தியை மத்திய ஆட்சி மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. 1967 நவம்பர் 27 அன்று ஆட்சி மொழி சட்டத் திருத்த முன்முடிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது இந்த சட்ட முன்வடிவை ஏற்க முடியாது என தோழர் பி.ராமமூர்த்தி நீண்ட உரையாற்றி னார். இந்த சட்ட முன்முடிவு எந்த தீர்வையும் அளிக்காது என சுட்டிக்காட்டியது டன் நாட்டின் மொழிச்சிக்கலைத் தீர்க்க உரிய வழிகளையும் விளக்கமாக எடுத்து ரைத்தார். மேலும் இந்திய அரசியலமைப்பில் உள்ள மொழி குறித்த பிரிவுகளை படித்துக் காட்டி பல மொழி ராஜ்ய அமைப்பில் எவ்வாறு ஒரு பிரிவு மக்களது மொழியை அரசாங்க மொழியாக்க முடியும். சகல மொழிக்கும் உரிய இடத்தை அளிக்க வேண்டுமென்பதை அரசியல் சட்டத்தை உருவாக்கியுள்ளவர்கள் மனதில் கொள்ளவே இல்லை என ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில், இந்தியை ஒரே ஆட்சி மொழியாக திணிக்கும் இந்த முயற்சியை கட்சி எதிர்க்கிறது என அறிவித்ததுடன் இது இந்திய யூனியனின் ஐக்கியத்தை குலைக்கவே வழிவகுக்கும் என தெளிவாக சுட்டிக்காட்டியது. 1968ம் ஆண்டு மத்திய அரசு ஆட்சி மொழி சட்டத் திருத்தத்தையும், தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு தமிழகத்தில் மீண்டும் மாணவர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட நேரத்தில் இது குறித்து, எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தமிழக சட்டமன்றத்தினுடைய சிறப்புக் கூட்டம் 23.1.1968ம் ஆண்டு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் சார்பில் கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தீர்மானத்தை முன்மொ ழிந்தார். அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பல திருத்தங்களை முன்மொழிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் விரிவான திருத்தங்களை முன்மொழிந்து நீண்ட உரையாற்றினார். இதனை வழிமொழிந்து தோழர் என். சங்கரய்யா உரையாற்றினார். இந்த சட்டத் திருத்தங்களும், இவ்விரு தலைவர்களின் உரைகளும் இந்தியாவின் மொழிச் சிக்கலுக்கு தீர்வு காணும் முக்கிய ஆவணங்களாக திகழ்கின்றன.
தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:-
“பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட இந்நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த சுதந்திர போராட்டத்தில் உருவான நாட்டின் ஒற்றுமையை பேணி பாதுகாத்து மேலும் கெட்டிப்படுத்துவதற்கு இந்நாட்டில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்தை எல்லா மட்டங்களிலும் நல்குவது அத்தியாவசியம் என்பது இச்சபையின் திடமான கருத்து”.
இதற்கு வேண்டிய கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று இச்சபை வற்புறுத்துகிறது:-
1. அரசியல் சட்டத்தில் இந்திக்கு பிரத்யேகமாக அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட்டு, நாட்டின் பிற மொழிக்கு கீழ்நிலை அளிக்கும் ஷரத்துக்களை யெல்லாம் நீக்கி எல்லா இந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து நல்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
2. அரசியல் ஷரத்தின் 8வது ஷெட்யூலில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தின் 8வது ஷெட்யூலில் உள்ள மொழிகளில் நடப்பதற்கு ஏககாலத்தில் மொழி பெயர்ப்பு ஏற்பாடு செய்திடவும் வேண்டும்.
4. மத்திய சர்க்காரின் மசோதாக்கள் சட்டங்கள் உத்தரவுகள் போன்றவைகள் எல்லாம் 8வது ஷெட்யூலில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் பிரசுரிக்க வேண்டும்.
5. மத்திய அரசின் பணிமனைகள் (அலுவலகங்கள்) இருக்கும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே மக்களிடம் தொடர்பு வைத்து பணியாற்ற வேண்டும்.
6. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தத்தம் மாநில மொழியிலேயே கடிதம் எழுது வதற்கும் அம்மொழியிலேயே பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
7. ஒவ்வொரு பிரஜைக்கும் தன் தாய் மொழியிலேயே மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதற்கும் பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
8. எட்டாவது ஷெட்யூலில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதிவசதிகளை வழங்கிட வேண்டும்
9. எல்லா மாநிலங்களிலும் கல்வி நிலையங்களில் உயர்மட்டம் வரையிலும் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
10. அதேபோன்று அந்தந்த மாநிலத்தின் மொழியே மாநிலங்களில் நிர்வாக மொழியாகவும் உயர்நீதிமன்றம் வரை நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இவையாவும் அடுத்த பத்தாண்டுகளில் முழுமையாக அமலாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11. மொழிவழி சிறுபான்மையினருக்கு உயர்கல்வி வரை தங்கள் தாய்மொழியி லேயே கல்வி பயிலுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
12. மும்மொழித் திட்டம் என்பது பயனற்றது. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளையும் மாணவர்கள் இஷ்டம் பூர்வமாக கற்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய விரிவான திருத்தத்தை சட்டமன்றத்தில் மொழந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. முதலமைச்சர் அண்ணாதுரைஅவர்கள் முன்மொ ழிந்த திருத்தத்தில் கூட மத்தியில் ஆட்சி மொழி குறித்து குறிப்பிடப்பட்டதே தவிர மாநிலத்தில் அந்தந்த மாநில ஆட்சி மொழியே இருக்க வேண்டுமென்றோ, அந்தந்த மாநிலங்களில் கல்வி நிலையங்களில் அந்தந்த மாநிலத்து மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இந்த விவாதத்தின் போது தோழர் என்.சங்கரய்யா பேசுகையில் மும்மொழி திட்டம் நிச்சயமாக தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள மாண வர்கள் தமிழை தவிர வேறு மொழியை கற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமையில்லை. அண்டை மாநிலமொழிகளைக் கூட கற்றுக் கொள்ள சொல்ல நமக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க 6000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கில மொழியை நம்முடைய மாணவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டுமென ஏன் நாம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும? அவர வர்களின் தாய் மொழியைத் தவிர வேறு ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர ஆங்கிலம் தான் படிக்க வேண்டும், இந்தி தான் படிக்க வேண்டுமென்றோ சொல்லக்கூடாது. மற்ற மொழிகளை படிப்பதற்கு அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். இதற்கு அரசாங்கமும், கல்வித்துறையும் எந்த அளவு ஏற்பாடு செய்ய முடியுமோ அந்த அளவு ஏற்பாடுக ளை செய்து தர வேண்டும்’ என ஆணித்தரமாக சட்டமன்றத்தில் கருத்தினை பதிவு செய்தார்.
இந்தியாவின் பன்முக பாரம்பரிய மொழிகளை அழித்து இந்தி - சமஸ்கிருத ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் பாஜகவின் சதிகளை முறியடித்திட தாய்மொழிகளை பாதுகாத்திடவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்திடவும், அனைத்து மக்களையும் அறைகூவி அழைக்கிறது சென்னையில் நடைபெறும் தென்மாநிலங்களின் மாநாடு.