புதுதில்லி:
கல்வியறிவில் இந்தியாவிலேயே மீண்டும் முதலிடத்தில் கேரளா உள்ளது. ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கேரளாவில் அதிக கல்வியறிவு உள்ளது. கேரளத்தின் கல்வியறிவு 96.2 சதவிகிதம். பெண் கல்வியறிவு 80 சதவிகிதத்துக்கு மேல் உள்ள ஒரே மாநிலம் கேரளம் என தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) அறிவித்துள்ளது.
இந்தியாவில் கல்வியறிவு 77.7 சதவிகிதம். நாட்டில் 84.7 சதவிகிதம் ஆண்களும், 70.3 சதவிகிதம் பெண்களும் ஏதேனும் ஒரு மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள். கல்வியறிவில் பாலின இடைவெளி 14.4 சதவிகிதம். இது கேரளத்தில் மிகக் குறைவு (2.2 சதவிகிதம்). கேரளத்தில் 97.4 சதவிகிதம் ஆண்களும் 95.2 சதவிகிதம் பெண்களும் கல்வியறிவு பெற்றவர்கள். இந்த இடைவெளி ராஜஸ்தானில் (23.2 சதவிகிதம்) மிக அதிகம். கல்வியறிவு விகிதத்தில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் தில்லி (88.7), உத்தரகண்ட் (87.6) உள்ளன. ஆந்திரா மிகவும் பின்தங்கியிருக்கிறது. கடைசி ஐந்து இடங்களில் உத்தரபிரதேசம் (73), தெலுங்கானா (72.8), பீகார் (70.9), ராஜஸ்தான் (69.7), ஆந்திரா (66.4) ஆகிய மாநிலங்கள் உள்ளன. தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையிலான விவரங்கள் தொகுக்கப்பட்டன. ‘உள்நாட்டு சமூக நுகர்வு: இந்தியாவில் கல்வி’ என்கிற அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.