tamilnadu

img

காஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறார்கள் - யூசுப் தாரிகாமி

காஷ்மீரிகள், மோடியின் எதேச்சாதிகார ஆட்சியின்கீழ் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த முகமது யூசுப் தாரிகாமி கூறினார்.

புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது முகமது யூசுப் தாரிகாமி காஷ்மீர் நிலைமைகள் குறித்து மிகவும் உணர்ச்சிவசத்துடன் கூறியதாவது:

“காஷ்மீரில் எவருக்கு எதிராகவும் ஒரு துப்பாக்கிக் குண்டுகூட பாயவில்லை, எவரும் கொல்லப்படவில்லை என்று பாஜக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? காஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன கேட்கிறோம்? நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம். (இவ்வாறு இவர் கூறும்போது கண்களில் வந்த கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.)

மாநிலத்தில் இயங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரிடமும் கலந்தாலோசிக்காமல், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததும், மாநிலத்தை பல கூறுகளாக சிதைத்ததும் நரேந்திர மோடி ஆட்சியின் விரக்தியையே காட்டுகிறது.

ஒரு சராசரி காஷ்மீரி, எங்களுக்கு சொர்க்கம் வேண்டும் என்று உங்களிடம் கேட்கவில்லை. தயவுசெய்து நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்திட ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.  

காஷ்மீரில் பலதடவை மோசமான நிலைமைகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். எனினும் இப்போதுள்ளது போன்று ஒரு சங்கடமான நிலை இதற்கு முன் ஏற்பட்டதில்லை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடந்த நாற்பது நாட்களாக ஒருவர்க்கொருவர் சந்திக்க முடியாமல் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறது. மாநிலம் முழுமையாக இயங்கிடவில்லை. இதேபோன்றதொரு நிலைமையை இங்கே, புதுதில்லியில், ஒரு வார காலத்திற்கு உங்களால் முயற்சி செய்து பார்க்க முடியுமா?

காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணைந்திட கட்டாயப்படுத்தப்படவில்லை. நாங்களாகவேதான் எங்கள் விருப்பத்தின் விளைவாக மதச்சார்பற்ற இந்தியாவுடன் இணைந்தோம். இன்றையதினம், காஷ்மீர் மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதி மக்களின் கடின உழைப்பின் காரணமாக நம்மிடையே இவ்வாறு ஏற்பட்ட பந்தம் இன்றைக்குத் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது.

பத்திரிகையாளர்களே, தயவுசெய்து நாங்கள் சொல்வதையும் கேளுங்கள். அரசுத்தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள். காஷ்மீர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் கேளுங்கள். நாங்கள் கொல்லப்படுவதையோ அல்லது ஒழித்துக்கட்டப்படுவதையோ விரும்பவில்லை.”

இவ்வாறு யூசுப் தாரிகாமி கூறினார்.

சீத்தாராம் யெச்சூரி

அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

“அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஆட்சேபித்து கட்சியின் சார்பில் தனியே மனு தாக்கல் செய்திட இருக்கிறோம்.

இப்போது மிகவும் முக்கியமான அம்சம், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றியதாகும். கடந்த 40 நாட்களாக அங்கே இயல்பு வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியாது. தரைவழி தொலைபேசிகள் இன்னமும் இயங்கத் தொடங்கிடவில்லை. தோழர் தாரிகாமி இல்லத்தில் உள்ள தொலைபேசியும் மற்றும் கட்சித் தோழர்கள் பலரது வீடுகளில் உள்ள தொலைபேசிகளும் இன்னமும் செயல்படத் தொடங்கவில்லை. பலமுனைகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.”

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ந.நி.)

;