tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜான்சிராணி இலட்சுமிபாய் நினைவு நாள் 

1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர் ஜான்சிராணி இலட்சுமிபாய்.

1857ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள்  இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும், பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதால் இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. 
சிப்பாய் கலகம் என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் சம்பந்தமாகவே ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.

ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857 ஆம் ஆண்டு சூன் 8ஆம் நாாள் ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும், விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு கூறினர். இதனையே காரணமாக வைத்து, 1858 ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் நாள் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படையின் ஆயுதங்கள் மார்ச்சு 31ஆம் நாாள் ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னரும் வரும் வழியில் தங்களது ஆயுத வண்டிக்காக காத்திருந்த சமயம், ஆயிரம் பேர் கொண்ட ஹியூரோஸ் தலைமையிலான குதிரைப்படை என்பீல்ட் ரக துப்பாக்கிகளின் உதவியோடு அவர்களைத் தாக்கி 1500 வீரர்களை மரணமடையச் செய்தது. மாவீரன் தாந்தியா தோபேயும் மிகுந்த மனவருத்தத்துடன் புறமுதுகிட நேரிட்டது. பின்னால் வந்த தாந்தியா தோபேயின் ஆயுத வண்டியும் கொள்ளையடிக்கப்பட்டு, பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். ஜான்சி ராணிக்கு உதவுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அவருக்கே எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன.

ஆனாலும் ஜான்சி ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த ஜான்சி ராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களின் பின்னர், ஆங்கிலேயர்களால் அத்துமீறி நுழைந்து நகரத்தைக் கைப்பற்ற முடிந்தது. ஆயிரக்கணக்கான வீரர்களுடன் மாவீரன் குதாபக்ஷ், பீரங்கி படைத்தளபதி கௌசல்கான் ஆகியோரும் மரணமடைந்தனர். கடுங்கோபத்திலிருந்த பிரித்தானியர், அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர். ஆங்கில கொள்ளையர்கள் நகர வீடுகளில் புகுந்து மாணிக்க மணிகளையும், பொன்னையும், பொருளையும் கொள்ளையடித்தும் பல இடங்களிலும் பெண்களைச் சூறையாடியும் தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.
ஜான்சி ராணி 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் இரவு நேரத்திலே தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையணியின் பாதுகாப்புடன் ஜான்சி ராணி நகரத்தை விட்டு நீங்கினார்.
ராணிலட்சுமிபாயை ஜான்சியைவிட்டு வெளியேறச்சொல்லி ஆங்கிலேயர் பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியுறச் செய்தது. தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார் லட்சுமிபாய். அதில் வீரம் மிக்க பெண்கள் படையும் இடம்பெற்றது. அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்று டாடியா மீது படையெடுத்து, அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச்சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார்.
ஜான்சி ராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வெள்ளையரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858 ஆம் ஆண்டு சூன் 17 ஆம் நாள் கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சி ராணி போரிட்டார். இப்போரின்போது படுகாயமடைந்த ஜான்சி ராணி, அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார். ஆனால் வீழ்ந்தது ராணிதான் என்று ஆங்கிலேயருக்குத் தெரியாததால், அவரது உடல் உடனடியாக பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது. பிரித்தானியர் மூன்று நாட்களின் பின்னர் குவாலியரைக் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார். இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன. அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கிய போது அதன் ஒரு பகுதியான பெண்கள் படைப் பிரிவிற்கு 'ஜான்சி ராணி படை' என்று பெயரிட்டார். இப்படைப் பிரிவிற்குக் கேப்டன் லட்சுமி செகல் தலைமையேற்றது குறிப்பிடத்தக்கது.

===பெரணமல்லூர் சேகரன் ====
 

;