கம்யூனிஸ்ட்டுகள் நேரடியாக செயல்பட முடியாத நிலையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியாக செயல்பட்டார்கள். இந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்காக ஒரு பத்திரிகை அவசியமாக இருந்தது. 1936ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு அமைப்பு தோழர் எஸ்.வி.காட்டே அவர்களின் ஒருங்கிணைப்பால் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொதுச் செயலாளராக ஜீவாவும் கூட்டுச் செயலாளர்களாக பி.சீனிவாசராவ், நீலாவதி சுப்ரமணியம் ஆகியோரும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பி.ராமமூர்த்தி, கே.முருகேசன், தூத்துக்குடி சங்கரநாராயணன், திருச்சி கே.ஏ.சாரி போன்றோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலும் வந்தது. தேர்தல் பிரச்சாரம் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்ததால் உடனடியாக கட்சிக்கு பத்திரிகை துவக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து 1937 நவம்பர் 6 அன்று ‘ஜனசக்தி’ பத்திரிகை வார ஏடாக துவங்கப்பட்டது. அதன் ஆசிரியராக கட்சியின் பொதுச் செயலாளரான ஜீவா செயல்படுவதென முடிவானது. ஜனசக்தியின் முதல் இதழின் பிரகடனம் தலையங்கம் ‘நாம்’ என்ற தலைப்பில் வெளியானது. அந்தப் பிரகடனம் இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது உலகில் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும் என்றும் ஏகாதிபத்தியத்தையும், பாசிசத்தையும் எதிர்த்து உலக மக்களால் நடத்தப்படும் மகா யுத்தத்தின் ஒரு பகுதிதான் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் சுட்டிக்காட்டியது. மனித சமூகவாழ்வில் புரட்சிகர சக்திக்கும் அதற்கு எதிரான சக்திகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதிதான் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் இந்திய மக்கள் அனைவரும் அதை உணர வேண்டும் என்றும் கூறியது. செய்ய வேண்டிய அவசர அவசிய வேலையானது விவசாயிகள், தொழிலாளிகள், வாலிபர்களை ஒன்றுதிரட்டி காங்கிரஸ் மகா சபையை மைய அமைப்பாக வைத்து தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்துப் போராடுவதுதான் என்று அந்த பிரகடனத்தில் கூறப்பட்டது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்தவும், பூரண சுதந்திரம் பெறவும், சோசலிசத்தை உருவாக்கவும் ஜனசக்தி கடைசி மூச்சு உள்ள வரையில் தயவு தாட்சண்யமின்றி கடும் போர் புரிய போர்க்கோலம் பூண்டு நிற்கும் எனவும் சூளுரைத்தது. ஜனசக்தியின் முதல் இதழ் வெளிவந்ததுமே அது சென்னை மாகாண காங்கிரஸ் அரசாங்கத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியது. அதனால் ஜனசக்தியை அச்சிட்டு தந்த பி.என். பிரஸ் உரிமையாளர் மிரட்டப்பட்டார். இதனால் ஜனசக்தியை அச்சிட்டு தருவதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து மூன்று இதழே வெளிவந்த நிலையில் ஜனசக்தி நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த மூன்றாவது இதழில்தான் பாவேந்தர் பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பிரபலமான பாடல் வெளியானது. அந்தப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை மக்களுக்கு மிக எளிமையாகவும் அதே சமயத்தில் வலிமையாகவும் எடுத்துச் சொல்வதற்கான மிகச்சிறந்த பாடலாக அமைந்தது. அந்தப் பாடல் என்றென்றும் புகழ்மிக்க பாடலாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஜனசக்தி நிறுத்தப்பட்டதனால் சொந்தமாக அச்சகம் இல்லாமல் பத்திரிகை நடத்துவது சிரமமானது என்பதை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி - கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொண்டது. அதையடுத்து சொந்த அச்சகம் உருவாக்குவதற்காக கட்சித் தலைமை தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. நண்பர்களின் உதவியுடன் நிதி வசூலித்து அச்சு இயந்திரமும் அச்சு எழுத்துக்களையும் வாங்கியது. ஆயினும் கட்சித் தலைவர்கள் பெயரில் அச்சகம் துவக்க காங்கிரஸ் அரசாங்கம் அனுமதி அளிக்காது என்பதால் தோழர் பி.சீனிவாசராவின் நெருங்கிய நண்பரான காங்கிரஸ் ஊழியர் பாலன் என்பவரின் பெயரில் அனுமதிகோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதனால் அனுமதியும் கிடைத்தது. அந்த அச்சகம் சேசு அச்சகம் என்ற பெயரில் செயல்படத் துவங்கியது. இதையடுத்து 1938 ஏப்ரல் 6 அன்று மீண்டும் ஜனசக்தி வெளியானது. ஜனசக்தியின் அந்த இதழில் ‘புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற தலைப்பில் பிரதானக் கட்டுரை வெளியிடப்பட்டது. அது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதே இந்திய மக்களின் முதன்மையான முதற்பெரும் காரியம் என்று கூறியது. இந்த யுத்தத்தில் வெற்றிபெற வேண்டுமானால் தேசவிடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்டுள்ள பலதரப்பட்ட மக்களையும் ஓரணியில் சேர்த்து தேசிய ஐக்கிய முன்னணியைக் கட்டித்தீர வேண்டும் என்று வலியுறுத்தியது.
தொடர்ந்து ஜனசக்தி ஏடு தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்கள், அவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை எடுத்துரைத்தது. காங்கிரஸ், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிகளின் செய்திகளை வெளியிட்டது. மாணவர் இயக்கங்கள், விவசாயிகள் கடன்பிரச்சனை, ஜமீன் குடிபிரச்சனைகள், கொடூரமான குற்றப்பரம்பரை சட்டம் போன்றவை குறித்தும் பல குறிப்புகளும் ஜனசக்தியில் வெளியாயின. அத்துடன் ஜனசக்தியில் மாமேதைகள் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் பற்றியும், லெனின் தலைமையில் புரட்சி நடத்தி ரஷ்யாவில் புதிய ஆட்சி செய்து வரும் சாதனைகள் பற்றியும் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. புதுமைப்பெண் என்ற தலைப்பில் ஆசிரியரான ஜீவா எழுதிய தொடர் கட்டுரைகள் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் சிறுகதை, திரைப்பட விமர்சனம் போன்றவையும் வெளிவந்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின், ஆங்கில வார ஏடாக நேஷனல் பிரண்ட் என்னும் பத்திரிகை இதே 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த ஏட்டின் கட்டுரைகளும் செய்திகளும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டுவதாக அமைந்தது. இந்தப் பத்திரிகையில் கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.சி.ஜோஷி, டாக்டர் ஜி.அதிகாரி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி வாசகர் கடிதங்கள் ‘சம்மட்டி அடி’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
திருத்தம்
திங்கள்கிழமை வெளியான லட்சுமி மில் போராட்டம் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ‘காலுக்குச் செருப்புமில்லை’ என்ற பாடல் ஜீவா அவர்களால் எழுதப்பட்டது. அந்தப் பாடலை தொழிலாளர் போராட்ட மேடைகளில் கோவை ராம்தாஸ் மிக உருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் பாடுவார் என்று வாசிக்கவும்.