tamilnadu

img

இந்தியப் பொருளாதாரம் மிக பலவீனமாக உள்ளது!

புதுதில்லி:
இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட, ரொம்பவே பலவீனமாக இருக்கிறது என்று ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஐ.எம்.எப். அமைப்பு, அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி, அதனடிப்படையில் கணிப்புக்களை வெளியிடுவது வழக்கமாகும். இதன்படி, 2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றே ஆரம்பத்தில் ஐ.எம்.எப். கணித்து இருந்தது. அதன் பின் இந்தியாவில் நிலவிய பொருளாதாரச் சிக்கல்களை கருத்தில் கொண்டு 0.3 சதவிகிதம் குறைத்து, வெறும் 7 சதவிகிதம் அளவிலேயே வளர்ச்சி இருக்கும் என்று கணிப்பை திருத்திக் கொண்டது. 

தற்போது, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தொடங்கி, உற்பத்தித் துறை, சேவைத் துறை வரை அனைத்துப் பக்கமும் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தொழிற்துறையில் புதிய முதலீடுகளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை பலமடங்கு அதிகரித்து உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 2019 - 20 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையான 3 மாத காலத்தில் இந்தியப் பொருளாதாரம் 5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி போன்றவை பெரிய அளவில் குறைந்ததே, இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவுக்குக் காரணம் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அண்மையில் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை ஐஎம்எப் அமைப்பு மீண்டும் குறைத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐ.எம்.எப். அமைப்பின் செய்தித் தொடர்பாளரான கெரின் ரைஸ், வியாழக்கிழமையன்று தில்லிவந்திருந்தார். அப்போது, இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:

“இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த புதிய கணிப்புகளை விரைவில் நாங்கள் பெறுவோம். ஆனால் இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகவும் பலவீனமாகவே உள்ளது. முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது; வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நீண்டகால பலவீனம் வளர்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.