tamilnadu

img

மனித உரிமைப் போராளி தோழர் பி.சீனிவாசராவ் - ஐ.வி.நாகராஜன்

ஒன்றாக இருந்த சென்னை மாகாணத்தின் தெற்கு கன்னட பகுதியை சேர்ந்த படகராவில் ஒரு நடுத்தர  குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பி.சீனிவாச ராவ். 1930-ம் ஆண்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். மக்களை தேசிய இயக்கத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் கம்யூனிஸ்ட் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், சி.எஸ். சுப்பிர மணியன் உள்ளிட்டோர் செயல்பட்டார்கள். அவர்களுடன் இணைந்து பி.சீனிவாசராவும் பணியாற்றினார்.

1952 ஏப்ரல்-30 அன்று தலைமறைவாக இருந்த பி.சீனிவாசராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் தஞ்சை மாவட்டத்தில் இயக்கப் பணிகளை பகிரங்கமாக செய்ய ஆரம்பித்தார். தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் தட்டி எழுப்பி னார். அன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த ஒரே நோக்கம் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளிகளையும் ஒன்று திரட்டுவதுதான். நிலப்பிரபுக்களின் நெருக்கடியிலும், பண்ணை யார்களின் தாக்குதலிலும் செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில்தான் தோழர் பி.சீனி வாசராவின் கரம் அவர்களை அரவணைத்தது. உழைப்பாளி மக்களாகிய ஏழை எளிய அடித்தட்டு மக்கள் தங்களின் வேதனைகளை பி.சீனிவாசராவிடம் கொட்டி தீர்த்தனர். அதன் பிறகுதான் பி.சீனிவாசராவ் கிராமம் கிராமமாகச் சென்று அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை துவக்கினார்.

37 நாட்களும் 600 மைல்களும்

1960-ம்ஆண்டு காங்கிரஸ் அரசு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்திய நில உச்ச வரம்பு திருத்த சட்டமசோதா நிலப்பிரபுக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து மசோதாவில் திருத்தம் கொண்டுவரக்கோரி பி.சீனிவாசராவ் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழகம் முழுவதும் மக்களிடம் கோரிக்கையை கொண்டு செல்ல மாபெரும் பாதயாத்திரையை மேற்கொண்டது. இந்த இயக்கம்  வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறியது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதைய மாநில தலைவராக இருந்த பி.சீனிவாசராவ் தலைமையில் கோவையிலிருந்து ஒரு அணி யும் அப்போதைய பொதுச்செயலாளர் தோழர் மணலி கந்தசாமி தலைமையில் மதுரையி லிருந்து ஒரு அணியுமாக இரண்டு பகுதிகளி லிருந்து சென்னை நோக்கி அந்த நடைப் பயண பிரச்சார இயக்கம் புறப்பட்டது. இரண்டு குழுக்களும் 600 மைல் தூரம் 37 நாட்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களிடமும் கிராமங்களிடமும் அழியாத்தடங்களைப் பதித்தது.

நிரம்பி வழிந்த சிறைச் சாலைகள்

நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15ம் நாளில் இரு குழுக்களும் தங்களின் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு செப்-21-ல் தலை நகர் சென்னை வந்தடைந்தன. நிறைவாக நடைபெற்ற மாபெரும் பேரணி பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரெழுச்சியோடும், மிகுந்த உற்சாகத்தோடும் பங்கெடுத்தனர். அந்த பொதுக் கூட்டத்தில் மறியல் போராட்டத்திற்கான அறைகூவல் விடப்பட்டது. செப்-15 முதல் 28 வரை தமிழகம் முழுவதும் 15 நாட்கள் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. 16 ஆயிரம் பேர் கைதானார்கள். தஞ்சை மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் கைதானார்கள். தமிழகம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களைச் சந்தித்து வந்த பிறகு, ‘என் வாழ்நாளில் இதுபோன்ற எழுச்சியை இதுவரை நான் கண்டதில்லை’ என்று தோழர். பி.சீனி வாசராவ் போராட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

திருச்சி, வேலூர் சிறைச்சாலைகள் நிரம்பி  வழிந்தன. 2050பேரை வைக்க வேண்டிய திருச்சி சிறையில் 8ஆயிரம் பேரை வைத்தனர். குடிக்கத்தண்ணீர் இல்லை. கழிப்பிடவசதி இல்லை. படுக்க இடம் இல்லை. மழை பெய்து கொண்டேயிருந்தது. சுதந்திர இந்தியாவில் உரிமைக்காக போராடும் போராட்ட வீரர்களை குற்றவாளிகளைப் போல் சிறைக்காவலர்கள் அடக்கி ஒடுக்கினர். இதை எதிர்த்து சிறைச் சாலையிலேயே கிளர்ச்சிகள் வெடித்தன. ஏ.எம்.கோபு, கோ.வீரய்யன்  ஆகியோர் பொறுப்பாக இருந்து செயல்பட்டனர். பிறகு தமிழக அரசு பணிந்தது. செப்-28-ல் மூன்று ஆண்டுகளுக்கு சாகுபடி நிலத்திலிருந்து வெளி யேறாமல் இருக்க பாதுகாப்பு கொடுத்தது. இது விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

முள்ளியாற்றங்கரையில்...

தமிழகம் முழுவதும் மறியல் போராட்ட த்திற்கு திட்டமிட்டு மக்களைத் திரட்ட ஓய்வு உறக்கமின்றி உணவிற்கு உரிய நேரம் கூட ஒதுக்காமல் உழைத்திட்ட தோழர்.பி.சீனிவாசராவை 1961-ம் ஆண்டு மரணம் சாய்த்தது. மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள்; மக்களுக்காக போராடு என்ற மாமேதை லெனின் கூறிய வார்த்தைகளின் பொருள் ஆழத்தை உணர்ந்து மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சேரியில் வாழும் மக்களுடன் கலந்து அவர்களின் சமூக வளர்ச்சிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை உயர்வுக்கும் போராடினார். சேரி என ஒதுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் அடிமை விலங்கொடித்து வர்க்கப் போராட்டத்தின் வழியாக மனிதன் மனிதனாக வாழ மாற்றத்தை உருவாக்கினார். அவர் இறந்த பின்பு, அவர் எந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடி விடுதலைப் பெற்று தந்தாரோ - அந்த மக்கள் அடர்த்தியாக வாழும் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள முள்ளியாற்றங்கரையில் அவர் விருப்பப்படி அடக்கம் செய்யப்பட்டார். அவரது இறுதி மரியாதையின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கண்ணீரும் கம்பளையுமாய் கதறி அழுத காட்சி இன்றும் நம் கண்முன் நிழலாடுகிறது. அந்த துயரமான நேரத்தில் மாநிலத் தலைவர்கள் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர். இரங்கல் கூட்டம் இரவு 11.30 மணிக்கு எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.கல்யாண சுந்தரம், என்.சங்கரய்யா, கே.டி.கே தங்க மணி, பார்வதிகிருஷ்ணன், கே.ரமணி,எம்.காத்தமுத்து, மணலி கந்தசாமி என இன்னும் பலர் இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.

கண்ணீர்க் கடலில் தலைவர்கள்

பி.ராமமூர்த்தியும் மணலி கந்தசாமியும் பேச முடியாமல் தங்களது இதயத்தில் பொங்கி எழுந்த வேதனையை கண்ணீராய் உதிர்த்தனர். பண்ணை நிலப்பிரபுக்களின் அடிமைகளாக வாழ்ந்த மக்களை தலைநிமிர வைத்து, ‘அடித்தால் திருப்பி அடி!’ என தைரியத்தை ஊட்டி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய, ஈடு இணையற்ற மாபெரும் தலைவராக பி.சீனிவாசராவ் திகழ்ந்தார். இடதுசாரி இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு 14-11-2009 அன்று திருத்துறைப்பூண்டியில் அவருக்காக நினைவு மணிமண்டபத்தை அமைத்தது. அவருக்காக ஆண்டுதோறும் செப்-30-ம் தேதி அரசு சார்பிலும்  நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட  முள்ளியாற்றாங்கரை சமாதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிறைவாக தெற்கு வீதியில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றுவருகிறது. அவரின் நினைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெண்கலச்சிலையும் அமைக்கப்பட்டு மக்கள் அவரைப் போற்றி வருகின்றனர்.

இன்று (செப்.30) பி.சீனிவாசராவ் அவர்களின் 58-ம் ஆண்டு நினைவு தினம்
 

;