tamilnadu

img

எப்படி வென்றது வுஹான்?

“ஐயோ எனக்கு காய்ச்சல் அதிகரித்துவிட்டது” “எல்லாப் போக்குவரத்தையும் தடை செய்துவிட்டார்கள்”    “மருத்துவமனைக்குப் போனால் உயிரோடு திரும்ப முடியுமா?”   “எனக்குப் பயமாக இருக்கிறது” - பீதிக்குரல்களுக்கு மத்தியில் “நம்பிக்கை இருந்தால் எல்லா வலிகளையும் கடந்து வந்து விடலாம்”  என்ற குரலும் வுஹான் நகரில் கேட்டது.

ஜனவரி 23
சீனப்புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் இரு நாட்கள் இருந்த தருணம். அன்று காலை 10 மணி முதல் வுஹானின் அனைத்து சாலை, ரயில், நீர் மற்றும் வான் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. பூட்டி மூடப்பட்டது வுஹான். கொரோனா வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுப்பதே இதன் நோக்கம். அன்றைய தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 495. ஆனால் இது இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்ததை விட இது 10 மடங்கு அதிகம். நகரில் 90 லட்சம் பேர் இன்னும் மிச்சமிருந்தார்கள்.  நகரின் கடலுணவுச் சந்தை ஜனவரி ஒன்றாம் தேதியே மூடப்பட்டுவிட்டது. இங்கிருந்துதான் கொரோனா வைரஸ் கிளம்பியதாகக் கூறினார்கள். அது நகரத்தின் திக்குகளெங்கும் பரவிக்கொண்டிருந்தது. மருத்துவர் ஜா சிகாங், வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முதலில் கண்டறிந்தவர்களில் ஒருவர். “பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. இருமிக் கொண்டே இருந்தார். அவர், கடலுணவுச் சந்தைப் பக்கமே போகவில்லை. அவர் வெளியூர்க்காரர்” என்கிறார் மருத்துவர் ஜா சிகாங். வைரஸ் பரவலுக்கு விலங்குகளின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவியதற்கான ஆதாரங்கள் இருந்தன. 83 வயதான ஜாங் நான்ஷான், ஒரு கிருமித்தொற்று நிபுணர். 2003 சார்ஸ் (SARS) வைரஸ் பரவல் காலத்திய ஹீரோ அவர். “கொரோனா மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவியதுதான் ” என்ற ஜாங் நான்ஷான், “வைரஸ் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துங்கள்; வுஹானுக்கு உள்ளும் புறமும் போக்குவரத்தை நிறுத்தி மனிதத் தொடர்புகளை துண்டியுங்கள்..” என்று வலியுறுத்தினார்.  மருத்துவர் ஜா சிகாங் பரிசோதித்த நோயாளி வெளியூர்க்காரர். அவர் கடலுணவு  சந்தைப் பக்கமே போகாதவர்.  அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவர் ஜா சிகாங்க்கு வைரஸ் தொற்றிக்கொண்டது. அவர் வேலை செய்த மருத்துவமனையின் மற்ற ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்றியது. ஏனெனில் அவர்கள் எந்த பாதுகாப்பு ஏற்பாடுமின்றி நோயாளிகளைக் கையாண்டிருந்தனர். “அதிவேகமாகப் பரவக்கூடிய வைரஸ் இது என்று அப்போதுதான் நாங்கள் உணர்ந்து கொண்டோம்” என்கிறார் மருத்துவர் ஜா சிகாங். நகரத்தில் வைரஸ் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. கொரோனாவை எதிர்த்துப் போரிட நகரின் 38000 மருத்துவ ஊழியர்களும் தயார் செய்யப்பட்டனர். தங்களுக்கு கடுமையான காய்ச்சல் என்று மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வுஹான் நான்காம் எண் மருத்துவமனையின் செவிலியர் சீ ஜிங்ஜிங் “இப்படியொரு கூட்டத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. நோயாளிகளின் வரிசை முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது. ஓய்வெடுக்க நேரமில்லாமல் நாங்கள் வேலை செய்தோம்” என்கிறார்.

ஜனவரி 24
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்றே 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் வேலை துவங்கப்பட்டது.  “கட்டுமானத்தை விரைவுபடுத்துவதே என்னுடைய முதன்மையான பணி”  என்கிறார் பொறியாளர் வு ´சென்.  இது போதுமானதாக இருக்காது என்று 1600 படுக்கைகள் கொண்ட இன்னொரு மருத்துவமனை கட்டும் வேலையும் துவங்கியது.  சீனாவின் பிற பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.  குடும்பத்தினர் ஒன்று சேரும் காலம் அது.  ஆனால் சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் 1200 மருத்துவ ஊழியர்கள் 
தங்கள் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து வுஹானுக்கு புறப்பட்டனர்.  அன்றைய தினம் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் நிலைக்குழு கூடி “வைரஸை கட்டுப்படுத்தி, வுஹான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே பிரதானமான கடமை”  என்று அறிவித்தது.

ஜனவரி 29
வுஹானில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 356. ஹூபே மாகாணத்திற்கு மாநிலத்திற்கு வெளியிலும் இது பரவத் துவங்கியிருந்தது.  உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை அதிவிரைவாகப் பரவக்கூடிய தொற்றாக அறிவித்து, பொது சுகாதார கட்டமைப்பு பலவீனமாக உள்ள நாடுகளுக்கும் இது பரவும் அபாயமிருப்பதை சுட்டிக்காட்டியது.  சீனா முழுவதுமிருந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழுவீச்சில் இயங்கத் துவங்கின. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தோதாக வுஹானின் அனைத்து மருத்துவமனை வார்டுகளும் மாற்றி அமைக்கப்பட்டன. கொரோனா நோயாளிகள் இருக்கும் பகுதிகள் துண்டிக்கப்பட்டன. உள்ளும், வெளியுமாக மனிதர்கள் மட்டுமல்ல, செல்போன் போன்ற பொருட்களும் நடமாடக் கடுமையாகத் தடைவிதிக்கப்பட்டது.  மருத்துவமனை ஊழியர்களும் அங்கேயே தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.  முகம், கைகள், கால்களுக்கு உறைகளுடன்  இரண்டு அடுக்கு பாதுகாப்பு உடைகள் அணிந்தனர்.  
பல நாட்கள் தொடர்ந்து அணிந்ததால் பலருக்கும் தோல் தடிப்பும், அரிப்பும்ஏற்பட்டது.  ஆனால் அவர்கள் அத்தனை யையும் தாங்கிக் கொண்டனர்.

குழந்தை கள், பெற்றோர்கள் உள்ளிட்ட குடும்பங் களைப் பிரிந்து மருத்துவமனைகளிலேயே தங்கினர். விலை அதிகம் கொண்ட பாதுகாப்பு உடைகள் கிழிந்து விடாமலிருக்க தொடர்ந்து ஆறு மணி நேரம் தண்ணீர் குடிக்காமல், உணவு உண்ணாமல், கழிப்பறைக்குப் போகாமல் பணியாற்ற வேண்டியிருந்தது. “நாங்களும் டயாபர் அணிந்தோம்” என்கிறார் ஊழியர் ஒருவர். மருத்துவர் டாங் ஷின் இருவாரங்களாக வீடு செல்லவில்லை. அவர் மூன்று கையுறைகள் அணிந்துள்ளார். கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள், ஆக்ஸிஜன் அளிக்கும் உபகரணங்களை அவர் கையாளுகிறார். “6 மணி நேரப் பணிக்குப் பின் செவிலியர்கள் அனைவரும் ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது” என்கிறார் முகத்திற்கு இறுக்கமாக கவசம் அணிந்து பணியாற்றிய வுஹான் யூனியன் மருத்துவமனை செவிலியர் சூ பெய்பெய். 6 மணி நேரத் தொடர்ச்சியான வேலைக்குப் பின் தனது பல அடுக்கு ஆடைகளைக் களைகிறார் மருத்துவர் டாங் ஷின். அவர் உடல் முழுக்க சிவந்து, அரிப்பு உணர்வுக்கு ஆளாகிறார். மருத்துவ ஊழியர்கள் அனைவரும்  களைப்புறாமல் பணியாற்ற போதுமான உணவு உட்கொள்ள வேண்டியதிருக் கிறது. 

“நோயாளிகளை சில நேரம் சுமந்து செல்ல வேண்டியதிருக்கிறது. அதற்குப் போதுமான பலம் வேண்டுமெனில் நாங்கள் நிறைய உண்ண வேண்டும்” எனச் சிரிக்கிறார் ஒரு பெண் செவிலியர். ஒருவரே படுக்கக்கூடிய படுக்கையில் இருவர் படுத்து உறங்குகிறார்கள். “நீங்கள் உற்சாகமாக இருப்பது போலத்  தோன்றுகிறதே?” என்ற கேள்விக்கு “நாங்கள் எங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் தொலைந்தோம்..” என்று பதிலளிக்கிறார். “சில நேரங்களில் எனக்கு மரண பயம் வந்து விடுகிறது. எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனக்கும் ஒரே ஒரு மகன். நான் இறந்து விட்டால் அவர்களை யார்  கவனித்துக்கொள்வார்கள் என்று கவலை கொள்கிறேன்” என்கிறார் தொடர்ந்து. பிப்ரவரி முதல் வாரம் துவங்கி அடுத்தடுத்த வாரங்களில், சீனாவின் பிற பகுதிகளிலிருந்து மேலும் 30ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் வுஹானுக்கு வரவழைக்கப்பட்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள் படை வரவழைக்கப்பட்டு வுஹானைச் சுற்றியுள்ள பிற சிறு நகரங்களில் பணியமர்த்தப்பட்டனர். சீன மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஹூபே மாகாணத்தின் ஒரு நகரை தத்தெடுத்துக்கொண்டன.

பிப்ரவரி 2 
ஹோஷெ­ன்ஷென் புதிய மருத்துவமனை தயாராகிவிட்டது. ஆனாலும் படுக்கைகள் போதவில்லை. பரிசோதனைக் கருவிகளும் போதவில்லை. நோயாளிகளைக் கண்டறிந்து மருத்துவமனைகளில் சேர்த்து தனிமைப்படுத்த வேண்டிய சவாலான பணி இருந்தது. 90 லட்சம் மக்களை  காப்பாற்ற விரைந்து செயல்பட வேண்டியிருந்தது. ஹாங்குவாங் கம்யூனிட்டி இயக்குநர் ஷெ­ன் இன்ஷியாங் போன்றோர் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை வீடுகளிலிருந்து அப்புறப் படுத்தி மருத்துவமனைக்கு கொண்டுவர வேண்டும். போதுமான அளவுக்கு ஆம்புலன்ஸ்கள் இல்லை. காவல்துறை வாகனங்கள் ஆம்புலன்ஸ்களாக மாறின. நோயின் துவக்க கட்டத்திலிருப்பவர்களை தனிமைப்படுத்தி வைக்க 12 மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இறப்பு 3 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தாலும் வைரஸ் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. “இது ஒரு போர்; நாங்கள் வெல்வோம்” என்கிறார் மருத்துவர் சாவோ ஷிகாங்.

பிப்ரவரி 3
வுஹானுக்கு வெளியே ஏற்படும் மரணங்கள் குறைந்தன.  காரணம் நகரம் மூடப்பட்டதே.  நகரம் பூட்டி மூடப்பட்ட மூன்றாவது வாரத்தில் 10000 நோயாளிகளும், மேலும் பல பத்தாயிரக்கணக்கானவர்கள் வைரஸ் அறிகுறிகளோடு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.  மேற்கொண்டு 200 பேருக்கு மட்டுமே படுக்கைகள் இருந்தன.  எனவே உள்ளூர் நிர்வாகம், விடுதிகள், விளையாட்டு மற்றும் மாநாட்டு அரங்கங்கள் போன்ற அனைத்து பொது இடங்களையும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றும் வேலை துவங்கியது.  உடனடியாக மேலும் 4000 படுக்கைகள் கிடைத்தன.  தற்காலிக மருத்துவமனைகளில் சிறு அறிகுறிகள் தென்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, முகக் கவசங்கள் போன்றவை வழங்கப்பட்டு மேற்கொண்டு அவர்களை அவர்களே கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
“சூடான குடிநீர், கழிப்பறை வசதிகளை பொறுமையாகக் காத்திருந்து பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது” என்கிறார் ஒரு பெண் நோயாளி.  “அரசு எங்களைக் காப்பாற்ற முடிந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம்; ஆனாலும் உள்ளுர் நிர்வாகம் ஆரம்பத்திலேயே விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும்” என்கிறார் ஒரு பெண்.  லீ வென்லீ என்ற மருத்துவர் டிசம்பர் 23 அன்றே வைரஸ் குறித்து எச்சரித்தார் என்றும் அவரின் எச்சரிக்கையை உள்ளூர் நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரியவந்தது. வுஹானுக்கு உள்ளேயும், வெளியேயும் 3000 சுகாதாரப் பணியாளர்கள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகினர். 

மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்க, வுஹான் நகர மக்களும் தங்கள் கடமையை உணர்ந்து நகரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.  
கையுறைகளும், முகக் கவசங்களும், பாதுகாப்பு உடைகளும் சீன மக்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டது.  அவற்றை எடுத்துச்சென்று மருத்துவமனைகளுக்கு வழங்குவது சவாலான பணியாக இருக்கிறது. தன்னார்வலர்கள் பலர் இதில் ஈடுபட்டனர்.  வு யாங் என்ற இரண்டு குழந்தைகளின் தாய் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார்.  தனது பெற்றோர்களின் ஆட்சேபணையையும் மீறி தொண்டு செய்து வருகிறார். தன்னார்வலர்கள் தங்கள் குடும்பத்தை துறந்து தனிமையில் தங்கி, இப்பணியைச் செய்கின்றனர்.  நகரின் குறுக்கும் நெடுக்குமாக கூரியர் இளைஞர்கள் பயணித்து மருத்துவ உபகரணங்களை டெலிவரி செய்யும் பணியிலிருக்கின்றனர். எஸ்எப் எக்ஸ்பிரஸ் என்ற கூரியர் நிறுவனம் கிடங்கிலிருந்து மருத்துவ உபகரணங்களைப் பெற்று வுஹான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று அவற்றை ஒப்படைக்கிறது.  இதனை அவர்கள் இலவசமாகச் செய்கிறார்கள்.  “இந்த இக்கட்டான காலத்தில் இப்பணியை நாங்கள் பெருமையுடன் செய்கிறோம்” என்கிறார்கள் அவர்கள்.

பிப்ரவரி 12 
மேலும் 10000க்கு மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளான செய்தி வருகிறது. நோய்த் தொற்றை உறுதி செய்ய மெதுவான, நாட்கள் பிடிக்கும் பரிசோதனை முறையைக் கைவிட்டு, விரைவான மருத்துவப் பரிசோதனை முறையைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருந்தன மருத்துவமனைகள். அன்று மறுபடியும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் கூடிய நிலைக்குழு “அதிகார வர்க்கத் தன்மையும், சடங்குத் தன்மையும் கொரோனாவை எதிர்த்த போராட்டத்திற்கு எதிரிகள்” என்று அறிவித்தார்கள்.  அடுத்த நாளே ஹூபே மாநில மற்றும் வுஹான் நகர நிர்வாகங்கள் மாற்றி அமைக்கப்
பட்டன.  நடவடிக்கைகள் கடுமையாகவும், துரிதமாகவும் எடுக்கப்பட்டன.

பிப்ரவரி 13
வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13000 ஐ தாண்டியது.  அன்றைய தினமே 11 விமானங்களில் 1400 ராணுவ மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்களுடன் வுஹான் வந்திறங்கினர்.  “இனி நாங்கள் வுஹான் வாசிகள். கொரோனாத் தொற்றை எதிர்த்து கடுமையாகப் போரிடுவோம்” என்று உறுதியேற்றனர். வுஹான் நகரிலேயே  நாளொன்றுக்கு 3 லட்சம் முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஜனவரி இறுதியில் இது வெறும் 35000 என்ற எண்ணிக்கையிலேயே இருந்தது.

பிப்ரவரி 17
வுஹானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டனர் என்ற நிலையை நகரம் எட்டியது. இது எப்படி சாத்தியமானது? மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டனர். சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கதவைத்தட்டி ஒவ்வொருவரையும் விசாரித்து, தொற்று ஏதேனும் உள்ளதா? இல்லையா? என்று பரிசோதித்து அறியும் பணி முடுக்கிவிடப்பட்டது.  லீ பெங்க் என்ற பெண் தன்னார்வலர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒரே நாளில் தான் 1000 பேரை பரிசோதித்து வந்தேன் என்கிறார்.  தினந்தோறும் இது தொடர்ந்தது. வைரஸால் பாதிக்கப்படாத மக்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களைப் பிரித்து தனிமைப்படுத்தும் பணி அயராது தொடர்ந்தது. இக்காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.  மளிகை, காய்கறி போன்றவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ள வேண்டும்.  அவை வீடுகளில் கொண்டுவந்து டெலிவரி செய்யப்பட்டன. மக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டு, வீடுகளிலேயே இருப்பது வைரஸ் தொற்றை தடுக்கும் என்ற வகையில் இது கடுமையாக அமல்படுத்தப்பட்டது.  நகரம் முழுமையாக அடைக்கப்பட்டது.  மக்கள் இதற்கு சிரமப்பட வேண்டியிருந்ததுதான்.  ஆனால் வேறு வழியில்லை.

பிப்ரவரி 19
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 615 என்று பெருமளவு குறைந்தது.  அன்றைய தினம், உலக சுகாதார நிறுவனத்தின் உதவி பொது இயக்குநர் புருஸ் அயில்வார்ட் சீனாவின் துணிச்சலான இந்நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியதோடு, வுஹான் நகர மக்கள் நன்றிக்குரியவர்கள்; அவர்களின்  தியாகம் மகத்தானது எனப் புகழ்ந்தார். வைரஸ் தாக்குதலுக்கு ஆளான வர்களின் எண்ணிக்கை படிப்படியாக மூன்று இலக்க எண்ணிலிருந்து இரண்டு இலக்க எண்ணாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

மார்ச் 13
இக்கட்டுரை எழுதப்பட்ட நாளில் (13.3.2020) வுஹான் நகரத்தின் கடைசி தற்காலிக மருத்துவமனையும் மூடப்படுகிறது என்ற செய்தி வந்தது. வுஹான் நகரையும், சீனாவையும் எழுந்து நின்று வணங்கும் இத்தருணத்தில் இப்படியொரு சூழல் இங்கு வருமானால் இந்தியா என்ன செய்யும் என்ற கவலையும் எழுகிறது நமக்கு.

ஆதாரம் : THE LOCKDOWN - ONE MONTH IN WUHAN (a documentary film by CGTN)