tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக து. ராஜா தேர்வு

புதுதில்லி, ஜூலை 21- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் புதுதில்லியில் அக்கட்சியின் மத்திய அலுவலகமான அஜய் பவனில் ஜூலை 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில் ஜூலை 21 ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் அரசியல் நிலைமை குறித்தும், பாஜக தலைமை யில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள தீவிர வலதுசாரி பிற்போக்குவாத ஆட்சியின் பாசிச தாக்குதல்களை எதிர்த்து உறுதிமிக்க போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் நரேந்திர மோடி அரசாங்கம் மிகவும் வேகமாக வலதுசாரி பிற்போக்குவாதக் கொள்கையை அமலாக்கிக் கொண்டிருக்கிறது. நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய பட்ஜெட், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. மேலும்  பட்ஜெட்டானது நாட்டிலுள்ள 99.3 சதவீத கார்ப்ப ரேட் கம்பெனிகள் ஆதாயம் அடையக்கூடிய அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. மேலும் பட்ஜெட்டானது தொழிலாளர்கள் கடுமையான போராட்டங்கள் மூலம் பெற்றுள்ள உரிமைகளை மறுக்கக்கூடிய விதத்திலும், நாட்டில் முதலாளிகளுக்கு வசதி செய்து கொடுக்கக்கூடிய விதத்திலும் நாட்டிலுள்ள 44 சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்போது மக்களு க்குத் தெரிவிக்க வேண்டிய பட்ஜெட் கணக்குகள் குறித்து மத்திய நிதியமைச்சர் கவலைப்படவே இல்லை. இது, பொருளாதாரத்தைப் படிப்படி யாகப் பாழ்படுத்துவதற்கான நடவடிக்கையாகும். மோடி அரசாங்கம் மிகவும் கண்மூடித்தனமாக தனியார் முதலீட்டையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கிறது. எதார்த்தத்தில் இது நடைபெறு வதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. ஏனெனில் மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் தனியார் முதலீடு செய்திட வரமாட்டார்கள். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு பட்ஜெட்டில் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.

சவாலை எதிர்கொள்வோம்

தேர்தலைப் பொறுத்தவரை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாஜகவை முறியடித்திட, மதச்சார்பற்ற, ஜனநாயக  சக்திகளை ஒருங்கிணைத்திட முயற்சிகள் மேற்கொண்டபோதும், நடைமுறையில் பல்வேறு கட்சிகள் ஒன்றுபட முன்வரவில்லை. தமிழ்நாட்டைத் தவிர இதர மாநிலங்களில் மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மத்தி யில் புரிந்துணர்வில் குழப்பம் இருந்தது. தமி ழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அணியில் புரிந்துணர்வும், ஒருங்கி ணைப்பும் ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  இரண்டு இடங்களை பெற்று வெற்றி பெற முடிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், கேரளத்தில்  ஒரு இடத்திலும் வெற்றி பெற முடிந்தது. மொத்தத்தில் மக்களவையில் 5 இடங்கள் என்ற அளவில் இடதுசாரிகளின் பலம் குறைந்துள் ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானதே என்ற போதிலும் இடதுசாரிகளின் பாரம்பரியமான வாக்கு தளம் சரிந்திருப்பது அதிர்ச்சிகரமானதே. இத்தகைய சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்து தவறுகளை சரிசெய்வோம். இது மிகப் பெரிய சவாலான பணியே. இந்த சவாலை எதிர்கொள்வோம்; வெற்றி பெறுவோம். பாஜக, 44 கட்சிகளுடன் புரிந்துணர்வை வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் சில கட்சிகளுடன் புரிந்துணர்வை வைத்திருக்கிறது. தனது கூட்டணியில் சேர்வதற்காக கட்சிகளுக்கு பாஜக கையூட்டு அளிக்கிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில், பல்வேறு கட்சியினரையும், சில வேட்பாளர்களையும் பாஜக சின்னத்தில் நிற்க நிர்ப்பந்தித்திருக்கிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக ஏராளமாகப் பணத்தை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றிருக்கிறது. தேர்தல்நிதிப் பத்திரங்களில் 80 சதவீதம் பாஜகவிற்கே அளிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது. மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து மிகப்பெரிய அளவில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு முன்பும் பின்பும் அமலாக்கத்துறை எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஏவப்பட்டிருக்கிறது. அதன்காரணமாகத்தான் பாஜகவிடம் அஇஅதிமுக சரணாகதி அடைந்திருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றி நம் முன் உள்ள ஓர் அரசியல் சவால் என்பதில் சந்தேகமில்லை.

கன்னையா குமாருக்கு பொறுப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுவில் மூத்த தலைவர் தோழர் ஷமீம் ஃபைஷீ மறைவால் ஏற்பட்டுள்ள காலி யிடத்திற்கு கன்னையாகுமார் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

புதிய பொதுச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும் சுதாகர் ரெட்டி, தன்னை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், அவர் விடுவிக்கப்பட்டு, மூத்த தலைவரான து. ராஜா புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தீர்மானங்கள்
கூட்டத்தில், ரயில்வேயை தனியார்மய மாக்குவதற்கு எதிராகவும், துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதற்கு எதிராகவும், அருணா ராய் போன்று  பலர்மீது ஆர்எஸ்எஸ் தாக்குதல் தொடுத்திருப்ப தற்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதற்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (ந.நி.)