பனாஜி:
கோவாவில் திரியும் மாடுகள் சிக்கன், வறுத்த மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டுமே விரும்பி உண்பதால், அவற்றை மீண்டும் சைவத்திற்குத் திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அம்மாநில பாஜக அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.வடக்கு கோவாவில் உள்ள அர்போரா கிராமத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், கலக்குட் தொகுதி எம்எல்ஏ-வும் மாநில குப்பை மேலாண்மை அமைச்சருமான மைக்கேல் லோபோ கலந்துகொண்டு பேசியுள்ளார். அதில் அவர் ‘வேதனை’யுடன் கூறியிருப்பதாவது:
“கால்நடைகள் சைவம் என்று நாம் எப்போதும் சொல்கிறோம். ஆனால் கோவாவின் கடலோர கிராமங்களான கலங்குட் மற்றும் காண்டோலிம் பகுதிகளை உள்ளடக்கிய பல கிராமங்களில் வளரும் மாடுகள் அசைவமாக மாறியுள்ளன. அந்த மாடுகள் உரிய பாதுகாப்பின்றி மிகவும் தவறான முறையில் வளர்க்கப்பட்டதால் அவை சுத்த அசைவமாக மாறிவிட்டன. கோழி எலும்புகள் மற்றும் வறுத்த மீன்களை மட்டுமே சாப்பிடுகின்றன. கடலோர சுற்றுலாவிற்கு வருபவர்கள் அவற்றைக் கெடுத்து வைத்துள்ளனர். அசைவ வாசனை பிடித்து வளர்ந்துள்ள இந்த76 மாடுகளை சிறைப்பிடித்து மேயெம் கிராமத்தில்‘கோமண்டக் கோசேவக் மகாசங்கம்’ நடத்தும்கோசாலைக்கு அனுப்பி வைத்தோம். அங்கே அவற்றிற்கு சைவ உணவு சாப்பிட கொடுக்கப்பட்டன. எனினும் அங்கும் அந்த மாடுகள் அசைவ உணவையே எதிர்பார்த்தன. .புல், தானியங்கள் உள்ளிட்ட சிறப்புத் தீவனங் களை தொடக்கூட இல்லை. உணவகங்களிலிருந்து கிடைக்கும் வாசனையோடு சமைக்கப்பட்ட கோழி எலும்புகள், வறுத்த மீன் போன்ற அசைவ உணவு களை வழங்கினால் உடனே சாப்பிட்டுவிடுகின்றன.இத்தகைய அசைவ உணவை உட்கொள்வதால், அவற்றின் உணவுமுறை மனிதர்களைப் போலவே மாறிவிட்டது. முன்பு அவை தூய சைவ உணவை விரும்பி உண்டன. ஆனால் தற்போது அசைவ உணவின் வாசனை வந்தால்தான் சாப்பிடவே தயாராகின்றன. எப்படியாயினும் இது மாற்றப்பட வேண்டும். அதற்காக சிறப்பு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். இது ஒரு நாளில் முடிகிற காரியமில்லை என்றனர். அதனால் அவர் வெளியே செல்லமுடியாதபடி அங்கே தங்கவைத்துள்ளோம்.மருத்துவ ரீதியாக உரிய சிகிச்சையளித்து மீண்டும் சைவ உணவு உண்பவையாக மாற்றுவதுதான் அவர்கள் முதல் வேலை. இதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.