புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 21-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார். சுமார் 55 நிமிடங்கள் இந்தியில் உரையாற்றினார். இதன்மூலம், மோடி வரலாற்றுச் சாதனை புரிந்துவிட்டார் என்று இந்திய ஊடகங்கள் இப்போது வரை ஊதி வருகின்றன.ஆனால், ‘ஹவுதி மோடி’ என்ற ‘மோடி நலமா?’ நிகழ்ச்சிக்கு எதிராக ‘அடியோஸ் மோடி’என்ற இயக்கம், அதே அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் எழுந்ததை சாமர்த்தியமாக மறைத்து விட்டன. மோடி வரும்போதெல்லாம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ‘கோ பேக் மோடி-Go Back Modi’ என்ற முழக்கம் எழுப்பப்படும். அதைப் போல, அமெரிக்காவில் எழுப்பப் பட்ட ‘போய்வாருங்கள் மோடி’தான், ‘அடியோஸ் மோடி ’(#adios_modi) என்பதாகும். மோடி, அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னதாகவே, ‘போய் வாருங்கள் மோடி’ என்ற முழக்கம் அமெரிக்க வாழ் இந்தியர்களால் டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ‘ஹவுதி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்ற ஏஆர்ஜி கால் பந்தாட்ட மைதான அரங்கிற்கு வெளியே திரண்ட, நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள், ‘அடியோஸ் மோடி’ என்று முழங்கியுள்ளனர். ‘இந்தியாவின் பயங்கரவாத முகம் மோடி’ என்று அட்டைகளையும் ஏந்தியுள்ளனர். ‘இந்துத்துவம்’ என்ற கொள்கையால், பல்வேறு வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்திய இந்தியர்தான் மோடி என்றும், ‘உண்மையான இந்து இந்துத்துவவாதியாக இருக்க மாட்டார்’ என்றும் ‘அடியோஸ் மோடி’ போராட்டக்குழுவினர் முழக்கங்களை எழுப்பியுள்ளர். தற்போதும் இந்த முழக்கங்களை அமெரிக்காவில் ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.