தங்கியுள்ள இடத்திலே வேலை தரப்படும் என அறிவிப்பு
புதுதில்லி, ஏப்.19- வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களில் இருந்து வெளியேறக்கூடாது என்று உள்துறை அமைச்சக செயலர் அஜய்பல்வா கூறியு ள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தவிதமான வாழ்வாதாரமும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முயன்றனர், பல இடங்களில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு திங்கள் முதல் (இன்று) சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக தொழில்துறை, உற்பத்தி, கட்டுமானம், விவசாயம், மற்றும் நூறு நாள் வேலைத்திட்டப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடலாம். இந்த நிலையில், ஊரடங்கால் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல், வெளி மாநிலங்களில் முகாம்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளி மாநிலத் தொழிலாளர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் உள்ள அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு உகந்த வேலைகளை அடையாளம் கண்டு வழங்கும் பணி உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.
புலம்பெயர்ந்தோர் தற்போதுள்ள மாநிலத்திற்குள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்ப விரும்பினால் அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள். வைரஸ் தொற்று இல்லாதவர்கள் பணியிடங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். பேருந்துப் பயணத்தின் போது சமூக-விலகலை பின்பற்ற வேண்டும். சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகள் சுத்தம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உணவு வசதி வழங்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.