tamilnadu

img

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பில் கொலை - சீத்தாராம் யெச்சூரி  கடும் கண்டனம்

சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்குக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டதன் விளைவாகவே இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302ஆவது பிரிவின்கீழ் (கொலைக் குற்றத்திற்காக) வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

மாநில அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்குக் கொடுங் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களைக் காவல் அடைப்பு (ரிமாண்ட்) செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை, (அருகேயே சிறை இருந்தநிலையில் அங்கே அடைக்காமல்) வெகு தூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை, மருத்துவர்கள் அவர்களை சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியுள்ளமை மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் கொடுங் காயங்களைக் குறித்துக்கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து  ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 

;