திருவனந்தபுரம்;
நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் எதிர்கொள்ளும் போது கேரளாவில் அரசு இந்த வகுப்பினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எஸ்சி/எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறைகளின் கீழ் 20 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். மாநிலபிற்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ்,100 நாட்களில் 3060 வேலைகள் உருவாக்கப் பட்டன, ரூ.650 கோடி மதிப்புள்ள கடன்திட்டங்கள், காஞ்ஞாங்காடு, தலசேரி, மானந்தவாடி, காஞ்சிராப்பள்ளி, பத்தனாபுரம், அடூர் ஆகிய இடங்களில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுபிக்ஷா கேரளதிட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயத் துறைகடன்கள் போன்றவை உட்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார்.
கிறிஸ்தவ மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கோட்டயத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம், கோவிட் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவிஆகியவை தொடங்கப்பட்டன. பட்டியல் சாதி மேம்பாட்டுத் துறையின் கீழ், இடுக்கிகோடாலிப்பாரயில் உள்ள போஸ்ட் மெட்ரிக் விடுதி, காசர்கோடு பெடடூக்காவில் ப்ரீ-மெட்ரிக் விடுதி, குட்டிகோல் ப்ரீ-மெட்ரிக் ஹாஸ்டல், இரிட்டி ஆரலம் பண்ணை தயாரிப்பு ஷோரூமான தணல் மினி சூப்பர்மார்க்கெட், கேரள மாநில பழங்குடி வரைபட (அட்லஸ்) வெளியீடு போன்றவை மற்றதிட்டங்களில் அடங்கும். பட்டியல் சாதி மேம்பாட்டுத் துறையின் கீழ் கோழிக்கோடு மருதோங்கரயில் கட்டப்பட்ட பி.ஆர்.அம்பேத்கர் அரசு மாதிரி தங்குமிடத்துடன் கூடிய மகளிர் பள்ளி, பாலக்காடு மாவட்டம் கொழிஞ்ஞாம்பாறயில் போஸ்ட் மெட்ரிக் விடுதி ஆகியவற்றை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.ஆற்றிங்கல் தொகுதியில் உள்ள 18 பட்டியல் சாதி காலனிகளுக்கான திருவனந்தபுரம் தோனக்கல் மாதிரி குடியிருப்பு பள்ளியின் அடிக்கல் நாட்டும், குடிநீர் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நடைபெற்றது.