திருவனந்தபுரம்:
கேரளத்தில் புதனன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 8830 பேருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும்அதிக அளவாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 1056 பேருக்கும், குறைந்தஅளவாக இடுக்கி மாவட்டத்தில் 157 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 23 மரணங்களும் கோவிட்டால் நடந்துள்ளன. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 742 ஆக உயர்ந்தது.
புதனன்று நோய் கண்டறியப்பட்டவர்களில் 58 பேர் வெளிநாடுகளிலிருந்தும் 164 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள்.தொடர்பு மூலம் 7695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 784 பேருக்கானதொடர்பு ஆதாரங்கள் தெளிவாக இல்லை. தொடர்பு மூலம் 23 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த3536 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,28,224 பேர் கோவிட்டிலிருந்து குணமடைந்துள்ளனர். 67,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 2,40,884பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,11,294 பேர் வீட்டு/ நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 29,590 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். புதனன்று புதிததாக 3468 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 63,682 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை, வழக்கமான மாதிரிகள், விமான நிலைய கண்காணிப்பு உட்பட மொத்தம் 29,25,734 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதாரப் பணியாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் அதிக சமூக தொடர்பு உள்ளவர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களிடமிருந்து 2,04,349 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. புதனன்று 15 புதிய ஹாட்ஸ்பாட்கள் உருவாயின.15 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் 660 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.
செப்டம்பரில் இரட்டிப்பான கோவிட்
கேரளத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறி எதிர் கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்திய செப்டம்பர் மாதத்தில் கோவிட்டால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட்டை விட இரண்டு மடங்கு அதிகரித்தது. ஆகஸ்டின் பிற்பகுதியில் ஓணம் கொண்டாட்டங்களும் அதைத் தொடர்ந்து பரவலான கும்பல் வன்முறைகளும் செப்டம்பர் மாதத்தை ஒரு நோய் அதிகரிப்பு மாதமாக மாற்றின.ஆகஸ்டில், 51,772 நோயாளிகள் இருந்தனர், இது செப்டம்பர் மாதத்தில் 1,11,891 ஆக அதிகரித்தது. இதுவரை கோவிட் உறுதிப்படுத்தியவர்களில் இது 57.06 சதவிகிதமாகும்.ஆகஸ்ட் மாத இறுதியில், பரிசோதிக்கப்பட்டவர்களில் 8.48 சதவீதம் பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். செப்டம்பர் கடைசி நாளானபுதன்கிழமை இது 13.87 ஆக இருந்தது. நோய் பரவுவது கடுமையான கட்டத்திற்குள் நுழைகிறது என்பதற்கான அறிகுறியாகும் இது. வரும் வாரங்களில், முதியோர், குழந்தைகள் மற்றும் தீவிர நோயுற்றவர்களுக்கு பரவாமல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.