குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்யப்பட்ட பிஞ்ச்ரா தோட் இயக்கத்தின் செயற்பாட்டாளரும், ஜேஎன்யு மாணவருமான தேவன்கனா கலிதாவினை, உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்து, ஆணை பிறப்பித்துள்ளது.
சென்ற ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது கலிதா தர்யாகஞ்ச்சில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார் என்று தில்லி, குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரை பிணையில் விடுவித்திட வேண்டும் என்று கோரி கலிதாவிற்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமையன்று, பெருநகர நீதிமன்றத்தில் பிணை மனு விவாதத்திற்கு வந்தது. அப்போது கடமையிலிருந்த நீதித்துறை நடுவர், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக காவல்துறையினர் இந்தியத் தண்டனைச் சட்டம் 325 (கொடுங்காயம் விளைவித்தல்), 353 (பொது ஊழியரை அவர்தம் கடமையைச்செய்யவிடாது தடுத்தல்) ஆகிய குற்றங்களின்கீழ் வழக்குதொடுத்திருந்தாலும் அவற்றுக்கு நேரடி சாட்சியம் எதையும் தாக்கல் செய்யவில்லை என்றும், அங்கிருந்த சிசிடிவியிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர் வன்முறை நடவடிக்கை எதிலும் ஈடுபட்டதற்கான சாட்சியம் எதுவும் இல்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் இதர திறன்பேசி ஆகியவற்றிலும் அவரைக் குற்றத்துடன் பிணைத்திடும் வகையில் எதுவும் காணப்படவில்லை என்றும் கூறியதுடன், அவர் ஒன்றும் வழக்கமாகக் குற்றம்புரிபவரோ அல்லது முன்னாள் தண்டனை பெற்றவரோ கிடையாது என்றும் கூறி, அவரை, பிணையில் விடுவித்தார்.
கலிதா, ஜேஎன்யு-வில் ஒரு எம்.பில். மாணவியாக இருக்கிறார். இருப்பினும் அவருக்கு காவல்துறையினர் விசாரிக்கும்போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், அவருடைய பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சரண் செய்திட வேண்டும் என்றும் நிபந்தனையுடன் பிணையில் விடுவித்தார்.
(ந.நி.)