tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் சமஷ்டிக் கழகமும் நீலகண்ட பிரம்மச்சாரியும்

1921ஆம் ஆண்டில் பம்பாயிலிருந்த எஸ்.ஏ.டாங்கே, ‘காந்தியும் லெனினும்’என்ற தலைப்பில் ஒரு சிறிய நூலை எழுதினார். இந்நூலில் லெனினுடைய தத்துவ, அரசியல் கண்ணோட்டத்தையும், காந்திஜியின் தத்துவ, அரசியல் நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு அதில், தான், லெனின் பக்கம் நிற்பதாக டாங்கே எழுதியிருந்தார். இதே காலக்கட்டத்தில் சென்னையில் ஜி.வி.கிருஷ்ணாராவ் என்பவர் ‘நிக்கோலாய் லெனின்: அவருடைய வாழ்வும் பணியும்’ என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இதை சென்னையிலுள்ள கணேஷ் அண்ட் கோ என்ற புத்தக நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஏறத்தாழ இதே சமயத்தில் ராமகிருஷ்ண அவஸ்தி என்பவர் லெனின் குறித்து ‘போல்ஷ்விக் மந்திரவாதி’ என்ற தலைப்பில் இந்தி மொழியில் ஒரு நூலை எழுதினார். அது கல்கத்தாவில் வெளியானது. மராத்தி, உருது, வங்காளி, கன்னட மொழிகளிலும் இதுபோன்ற நூல்கள் வெளிவந்தன.

பிரபல காங்கிரஸ் தலைவரான டி.பிரகாசம் நடத்தி வந்த ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கிருபாநிதி என்பவர் லெனினைப் பற்றிய ஒரு நூல் எழுதினார்.

1921ம் ஆண்டின் இறுதியில் லெனின் எழுதிய “போல்ஷ்விக்குகள் நீடித்து ஆள முடியுமா?” “இடதுசாரி கம்யூனிசம்”, மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” நூலைக் குறித்து சுருக்கமாக விவரிக்கும் ‘பீப்பிள்ஸ் மார்க்ஸ் (மக்களுடைய மார்க்ஸ்) போன்ற ஆங்கில நூல்கள் ரகசியமாக புத்தகக் கடைகளில் கிடைத்தன. அதே ஆண்டில்தான் லெனினுடைய நிழற்படமும் இந்தியாவில் வெளியானது. அது இந்திய தேசபக்தர்களிடையே, தொழிலாளர் தலைவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் திருவிகவும் ஒருவர்.

‘1921ஆம் ஆண்டில் சென்னைத் தொழிலாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன் முதல் சோவியத் அதிபராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கையை என்னால் இயன்ற அளவு பரப்ப முயன்று வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டுமென்று, கனவு காண்பவருள் யானும் ஒருவன்’

- என்று திருவிக கூறியதிலிருந்து ரஷ்யப் புரட்சி தமிழகத்தில் கொண்டிருந்த தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்த காலக்கட்டத்தில் சிங்காரவேலர் தொழிலாளர் பிரச்சனை, போராட்டங்கள், போலீஸ் ஒடுக்குமுறை போன்றவை குறித்து ‘ஸ்வதர்மா’ பத்திரிகையிலும், ‘இந்து’ விலும் இதர தமிழ்ப் பத்திரிகைகளிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

“தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி” “ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து”, “கர்னாடிக் மில் வேலைநிறுத்தம்”, “தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும்”, “இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு”, “ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும்”, “பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம்”, “வேலைநிறுத்த உரிமை - கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில், “மில் வட்டாரத்துக்  கலகங்கள்” போன்று ஏராளமான கட்டுரைகளை எழுதி தொழிலாளி வர்க்கத்திற்குப் போதனையூட்டினார்.

1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிங்காரவேலரின் இல்லம் போலீசாரால் சோதனையிடப்பட்டது. ஆனால் அங்கு ஆட்சேபகரமான எந்தப் பிரசுரமும் அவர்களால் கைப்பற்றப்படவில்லை. ‘இந்திய கம்யூனிஸ்ட் சமஷ்டி கழகம்’ என்ற அமைப்பின் பெயரில் ‘சவால்’ என்ற துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதை வெளியிட்டதற்காக நீலகண்ட பிரம்மச்சாரி என்ற பயங்கரவாதப் புரட்சியாளர் கைது செய்யப்பட்டார். அவர் தங்கியிருந்த இடமானது சிங்காரவேலுவின் வீட்டிற்கு அருகில் இருந்ததால், சிங்காரவேலரின் வீட்டில் அந்தப் பிரசுரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் கருதியது. அதன் காரணமாகவே சிங்காரவேலர் வீடு சோதனையிடப்பட்டது.

எருகூர் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி, ஆங்கிலேய அரசாங்கத்தை வன்முறை மூலம்தான் தூக்கியெறிய முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்த பயங்கரவாதப் புரட்சியாளர் ஆவார். 1911ஆம் ஆண்டில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்த ஆஷ் என்பவன் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1917ஆம் வருட ரஷ்யப் புரட்சியானது பயங்கரவாதத்தில் அவர் கொண்டிருந்த கவனத்தை மாற்றித் தன் பக்கம் திருப்பியது. கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவற்றைப் பரப்பவும் தொடங்கினார். ‘இது விஷயத்தில் அவர் இந்த நாட்டில் கம்யூனிசத்தை முதன் முதலில் பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவராக விளங்கினார்.

“இவர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய சிங்காரவேலு செட்டியாருடன் சென்னையில் தங்கியிருந்து கம்யூனிஸ்ட் திட்டம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டதாக ‘புதிய அலை’ பத்திரிக்கை ஆசிரியை டாக்டர் எஸ்.விஜயலட்சுமி கட்டுரையொன்றில் (26.1.75) கூறியுள்ளார். இந்நூலின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும் 1922ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் தடைவிதித்த புத்தகங்களின் பட்டியலில் ‘இந்தியக் கம்யூனிஸ்டுச் சமஷ்டிக்கழகம்’ என்ற நூலும் இடம்பெற்றுள்ளது. இந்நூலானது எம்.என்.ராய் வெளியிட்டு வந்த ‘வேன் கார்டு’ என்ற கம்யூனிஸ்ட் மாதமிருமுறை ஏட்டின் விளைவே என்று உளவு இலாகாவின் உயர் அதிகாரி ஸெஸில் கேயி கூறுகிறார்.

இதிலிருந்து நீலகண்ட பிரம்மச்சாரி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதற்காக, கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் அடிப்படையில் அவரோ அல்லது அவரது கோஷ்டியோ தயாரித்திருந்த அறிக்கையைத்தான் வெளியிட்டார் என்று நாம் முடிவு கட்டலாம். இது உண்மையானால், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதிலும், அக்டோபர் புரட்சியின் செய்தியைப் பரப்புவதிலும் முன்னோடியாக விளங்கியவர்களில் அவரும் ஒருவர் என்றே நாம் கூறலாம்.”

‘இந்திய கம்யூனிஸ்ட் சமஷ்டி கழகம்’ என்ற பெயர் கொண்ட ஆங்கிலப் பிரசுரமானது 1922ஆம் ஆண்டில் செங்கல்பட்டிலிருந்த மித்தர் அண்ட் கோ என்ற புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டதாகும். ஆங்கிலேய அரசாங்கமானது ‘கம்யூனிசம்’ குறித்த எந்தவொரு கருத்தும் தமிழகத்திற்குள் பரவிவிடக்கூடாதென்பதில் எந்தளவு உன்னிப்பாக இருந்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம்.

லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘கம்யூனிஸ்ட்’ என்ற மாத ஏடு அன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. அதில் வந்த கட்டுரையொன்றை ஸ்ரீரங்கத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘இந்து மதச் செய்தி’ என்ற தமிழ்வார ஏடு வெளியிட்டுவிட்டது. இதற்காக அந்தப் பத்திரிகை மீது ஏன் வழக்குத் தொடரக்கூடாதென்பதற்குக் காரணம் கூறுமாறு அதன் ஆசிரியர் கேட்கப்பட்டார்.

ஆங்கிலேய அரசாங்கம் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து எந்தளவுக்கு கண்கொத்திப் பாம்பாக இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று எஸ்.ஏ.டாங்கேயை ஆசிரியராகக் கொண்ட ‘சோசலிஸ்ட்’ என்ற வார ஏடு வெளியானது. இது கல்கத்தா, சென்னை போன்ற இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. நல்ல வரவேற்பைப் பெற்றது. கல்கத்தாவிலிருந்து முசாபர் அகமது டாங்கேக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இத்தகையதொரு ஏடு வெளிவந்திருப்பது குறித்து கல்கத்தா குழு மகிழ்ச்சியடைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். டாங்கேயுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், ‘சோசலிஸ்ட்’ கோஷ்டியுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புவதாக சிங்காரவேலு செட்டியாரை மையமாகக் கொண்டிருந்த சென்னைக் குழு விரும்பியது.

- என்.ராமகிருஷ்ணன் எழுதிய தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலிலிருந்து