கோவையில் நுழைவுத் தேர்வு நடத்திய சிஎஸ்ஐ பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு தேர்வு நடப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பிரேம் என்பவர் புகைபடம் மற்றும், வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையறிந்த உடனடியாக பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோரையும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி முதல்வர் மெர்சி மெட்டில்டா அறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தை முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் அறை, நுழைவுத்தேர்வு நடத்திய பகுதி என அனைத்தையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.