புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து மிகவும் கூருணர்வற்ற விதத்தில் மத்திய அரசு நடந்துகொள்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்புகள் குறித்து சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
தங்கள் இல்லங்களை நோக்கி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி மிகவும் கூருணர்வற்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் அறிவிப்புகள் இருக்கின்றன. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் வேலை அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதைவிட இரக்கமற்ற நகைச்சுவை வேறெதுவும் இருக்க முடியாது. இது, மக்களை ஏமாற்றும் முயற்சியே இதுவாகும். நிதி அமைச்சரின் கூற்றுப்படியே நாட்டில் எட்டு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அளித்துள்ள உறுதிமொழியின்படி ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளருக்கும் ஒரு நாளைக்கு 202 ரூபாய் ஊதியம் என்று அளித்தால்கூட இவர்கள் ஒதுக்கியிருக்கும் தொகை இவர்களுக்கு ஓராண்டில், வெறும் 2.2 நாட்களுக்கு வேலை செய்யத்தான் வரும். அரசாங்கம் அறிவித்திருக்கிற அறிவிப்புகள் பல, கடன்கள் அளிப்பது தொடர்பாகத்தான். அவை வீதியில் வியாபாரம் செய்பவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, அல்லது நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதிக் கடன்களாக இருந்தாலும் சரி அல்லது விவசாயிகளுக்கானதாக இருந்தாலும் சரி.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
து.ராஜா
நிர்மலா சீத்தாராமன் அறிக்கை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா கூறுகையில், இது புள்ளிவிவரங்களின் செப்பிடுவித்தை என்றும், வெறும் அரசியல் வார்த்தை ஜாலங்கள் என்றும் கூறினார். மேலும் அவர், கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வேலைகளை இல்லை. ஏழை மக்களின் துன்ப துயரங்கள் குறித்து அரசாங்கம் கூருணர்வற்ற நிலையிலேயே இருந்துவருகிறது என்றும் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரக் ஓ பிரியன், புலம் பெயர் தொழிலாளர்களை அதோகதியில் விட்டுவிட்டு, வெறும் நான்கு மணி நேரத்தில் சமூக முடக்கத்தை அறிவித்த அரசாங்கம், இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்றார்.
(ந.நி.)