tamilnadu

img

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழக அரசின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது

புதுதில்லி, ஜூலை 25-

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் அணைப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு இருந்து வரும் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்று மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர் ஏ. நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் ஏ. நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:

மத்திய அரசாங்கம், 2019 அணை பாதுகாப்பு சட்டமுன்வடிவு ஒன்றினை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிகிறேன். இது தொடர்பாக, 2018 ஜூன் 26 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்மீது மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அந்தத் தீர்மானத்தை மேற்கோள் காட்டிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“மத்திய அரசால் முன்மொழியப்பட்டிருக்கிற வரைவு அணை பாதுகாப்பு சட்டமுன்வடிவின் கூறுகள் (clauses), தமிழ்நாட்டின் உரிமைகளை மீறக்கூடிய விதத்தில், குறிப்பாக தமிழ்நாடு அரசாங்கத்தால் கட்டப்பட்டு அண்டை மாநிலத்தில் இருக்கின்ற அணைகளக அமைந்திருப்பதால், அவற்றின் இயக்குதலும், பேணுதலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால், இச்சட்டமுன்வடிவு தொடர்பாக, மாநில அரசாங்கத்தைக் கலந்தாலோசித்தபின்பு, மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இதில் கருத்தொற்றுமை ஏற்பட்டதற்குப்பின்பு, இதனைக் கொண்டுவர வேண்டும் என்றும் அதுவரை அதனைக் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தை இந்த மன்றம் வலியுறுத்துகிறது.”

தமிழ்நாட்டின் நான்கு அணைகள் கேரளாவில் இருக்கின்றன. அதாவது, முல்லைப் பெரியார், பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம். இவை அனைத்தும் தற்போது தமிழ்நாடு அரசின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றன. அவை, தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட இருக்கும் சட்டமுன்வடிவு, இந்த உரிமைகளைப் பறித்துவிடும். இது நியாயமில்லை. இது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது. இது சட்டவிரோதமானது. இது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பினை ஏற்படுத்திடும்.

அவைத் தலைவர்: இது ஒரு முன்மொழிவு மட்டுமே. நீங்கள், உங்கள் ஆலோசனையை அளியுங்கள்.

ஏ. நவநீதகிருஷ்ணன்: இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்துவதற்கு முன், தமிழ்நாடு அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது இருந்து வரும் உரிமைகளைப் பறித்திடக் கூடாது.

டி.கே.ரெங்கராஜன்: மத்திய அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் உதாசீனம் செய்துகொண்டிருக்கிறது. கூட்டுக் கூட்டாட்சித் தத்துவம் (cooperative federaism) முற்றிலுமாக ஓரங்கட்டப்படுகிறது.

இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.

(ந.நி.)