கேரவன் செய்தியாளர், காவல்துறையினரால் அடித்து நொக்கப்பட்டுள்ளார். இதற்கு தில்லிப் பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்தே மற்றும் பொதுச் செயலாளர் சுஜாதா மதோக் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரவன் இதழின் இளம் இதழாளர் அகான் பென்கர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதற்கு தில்லிப் பத்திரிகையாளர் சங்கம் அதிர்ச்சையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த சம்பவம் மாடல் டவுன் காவல்நிலையத்தில் நடந்துள்ளது. அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பந்தமாக செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் இது நடைபெற்றிருக்கிறது. அவருக்கு மூக்கு, முதுகு, தோள்பட்டை, கணுக்கால் முதலிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக, கேரவன் இதழ், தில்லிக் காவல் ஆணையரிடம் முறையீடு தாக்கல் செய்திருக்கிறது.
பென்கர்த, தன்னுடைய அலைபேசியில், காவல்நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற சிறிய அளவிலான கிளர்ச்சிப் போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் மாணவர் சங்க செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று (2020 அக்டோபர் 16) அன்று இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். கொலை செய்யப்பட்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை அக்டோபர் 7 அன்று நடந்திருக்கிறது.
காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், பென்கரையும் அடைத்து வைத்திருக்கின்றனர். பென்கர் தன் பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் காட்டியும் அவரைக் காவல்துறையினர் விடுவிக்கவில்லை. அவர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில், தன்னுடைய அலை பேசியைக் காவல்துறையினர் பறித்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் போராட்டம் சம்பந்தமாகப் பதிவு செய்ததை அழித்துவிட்டனர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர், காவல் உதவி ஆணையர், அஜய் குமார், தன்னை உதைத்ததாகவும், திரும்பத் திரும்ப அடித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஐந்தாறு காவல்துறையினரும் தன்னை அடித்ததாகவும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திடும் அதே சமயத்தில், இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்தும், தில்லிக் காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் தில்லிப் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு எஸ்.கே. பாந்தேயும், சுஜாதா மதோக்கும் அறிக்கையில் கோரியுள்ளார்கள்.