tamilnadu

img

ஆங்கிலோ இந்தியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதா? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எதிர்ப்பு

புதுதில்லி:
ஆங்கிலோ இந்திய சமூக மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான மசோதா குறித்தும், ஆங்கிலோ இந்திய சமூக மக்களுக்கான  இட ஒதுக்கீடு தொடர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன்  கடந்த டிசம்பர் 10 அன்று (செவ்வாய்கிழமை) மக்களவையில் உரையாற்றினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ரத்து செய்யும் விதத்தில் மக்களவையில் செவ்வாயன்று கொண்டு வரப்பட்ட 126 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆங்கிலோ இந்தியர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்தின.மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய பி.ஆர்.நடராஜன் பேசியது வருமாறு:
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான வேலை வாய்ப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை,  10 ஆண்டுகளுக்கு அதாவது 2030 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் நீட்டிக்கும்  இந்த மசோதாவின் முதல் பகுதியை  ஆதரிக்கிறேன். ஆனால், இந்த மசோதாவில், ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான இடஒதுக்கீடு அல்லது பிரதிநிதித்துவத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எதிர்க்கிறேன்.

ஆங்கிலோ - இந்தியர்களுக்கு என்று சொந்த மாநிலம் இல்லை என்பதால், அவர்கள் குறைவான எண்ணிக்கையிலானவர்களாக இருப்பதால், அல்லது புவியியல் ரீதியாக சிறுபான்மையினராக இருப்பதால், நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றங்களில் தங்களது சமூக நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தேவைப்படுகிறது.இதற்கு எதிரான இந்த மசோதாவின் பகுதிகள், அறியப்படாத காரணங்களுக்காக, அமைதியை நேசிக்கும் மத சமூகத்திற்கு எதிரான, ஒரு வகையான மோசமான வஞ்சகமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைக்கான மோடி அரசாங்கத்தின் கூற்று என்னவென்றால், இந்த சமூகம் இப்போது நலமாக உள்ளது; எனவே அரசியலமைப்பு சட்டத்திலுள்ள, சிறப்பு உரிமைகள் எதுவும் தொடர வேண்டியதில்லை என்பதே. இந்த அனுமானம் யதார்த்தத்திற்கு முற்றிலும் முரணானது.

ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தில், இன்னும் கூட, சில குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன என்பது நமக்கெல்லாம் தெரியும். சமீபத்திய வெள்ளம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பல ஆங்கிலோ-இந்திய மக்களின் கனவுகளையும் நாசப்படுத்தியது.  ஆங்கிலோ-இந்திய சமூகத்திற்கு, மேலும் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்குமாறு எனது வேண்டுகோளை வலியுறுத்திப் பதிவு செய்கிறேன்.ஆங்கிலோ-இந்திய மக்கள் குறித்து இந்த மசோதாவில் ஒரு வார்த்தை கூட தாங்கள் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மிகவும் புத்திசாலித்தனமாக கூறுகிறார். இதுவே ஆங்கிலோ - இந்திய சமூக மக்களுக்கு  வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தானாகவே காலாவதியாகிவிடும் என்பதைக் காட்டுகிறது.  எனவே, ஆங்கிலோ - இந்திய மக்களுக்கு இடஒதுக்கீட்டை இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமைச்சர் ஒரு விதிமுறையை இந்த மசோதாவிலேயே சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.

;