(தனது அனுபவங்களைப் பற்றி பேசிய ‘கமிங் அவுட் ஆஸ் தலித்’ என்ற நூலின் ஆசிரியர் தன்னுடைய
ரகசியத்தை உடைத்து வெளியேறியது குறித்தும், கலை, இசை, கலாச்சாரத்தில் தலித்துகளின் உறுதிப்பாடு
புதிய தலைமுறைக்கான பங்கை எவ்வாறு மாற்றும் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.)
ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்குப் பிறகு, நியூயார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர்
யாஷிகா தத் பல ஆண்டுகளாகத் தான் மறைத்து வைத்திருந்த தன்னுடைய வாழ்க்கை ரகசியத்தையும் தான்
.தலித் என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு முடிவு செய்தார். அவ்வாறு தலித்தாக ‘வெளியே’
வந்ததிலிருந்து, மாறுபட்ட எதிர்வினைகளை அவர் எதிர்கொண்டார். ‘ஓ,.. ஆனாலும் உங்களைப் பார்த்தால்
தலித் போன்று தெரியவில்லையே’ என்பதே அவற்றில் மிகவும் பொதுவான எதிர்வினையாக இருந்தது.
மற்றவர்கள் சமூக மூதலீட்டிற்காக தங்களுடைய சாதியைப் பகட்டாகக் காட்டிக் கொண்டிருக்கும்போது, தலித்
குடும்பத்தில் வளர்வது குறித்தும், தன்னுடைய சாதியை மறைக்க வேண்டிய கட்டாயங்கள் தனக்கு இருந்தது
பற்றியும் தன்னிடம் இருந்த அனுபவங்களை இப்போது நினைவுக்குறிப்பாக தத் எழுதியுள்ளார். தலித்தாக
வெளியே வருவது (கமிங் அவுட் ஆஸ் தலித்) என்ற அவருடைய புத்தகம் அவரைப் பற்றிய தனிப்பட்ட
கதையாக மட்டும் இல்லாது, இன்றைய இந்தியாவில் தலித்தாக வாழ்வது குறித்த ஒருவருடைய அனுபவத்தின்
வர்ணனையாகவும் இருக்கிறது.
நேர்காணலின் பகுதிகள்:
உங்களுடைய நினைவுக்குறிப்பு சொந்தக் கதையாக மட்டுமல்லாது, பெருமளவில் தலித்துகளுக்கு என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான வர்ணனையாகவும் இருக்கின்றது. அது அதற்கான உண்மையான
பொருளைத் தருவதற்காகவா அல்லது தவறான புரிதலைத் தருகின்ற ‘ஒற்றை விவரிப்பு’ குறித்த ஆபத்தைத்
தவிர்க்கும் வகையில் உங்களுடைய சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவா?
மற்ற தலித்துகளின் கதைகளைப் போலவே. ஆனாலும் தரவுகள், உண்மைகள், ஆய்வுகள் மூலம் அதைச்
செய்ய வேண்டும் என்று என்னால் வேண்டுமென்றே தெரிவு செய்யப்பட்டது. என் வாழ்நாள் முழுவதும்
பத்திரிகையாளராக இருந்து வருவதால், என்னுடைய சொந்தக் கதையை மட்டுமே எழுத வேண்டும் என்ற
எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. என்னுடைய உலகத்தைப் பற்றியதாக மட்டுமே அந்தப் புத்தகம் இருக்க
வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பவில்லை.
என்னைப் பொறுத்தவரை, தலித் பாகுபாடு குறித்த ஆவணங்கள் என்ற என்னுடைய ட்யும்ப்ளரின் இயல்பான
நீட்டிப்பாவே பல வழிகளில் அந்தப் புத்தகம் இருக்கிறது. தலித்துகள் குறித்து இருக்கின்ற உரையாடலுக்கு
எதிர்வினையாகவே நான் அதைத் தொடங்கினேன், அந்தச் சவாலை புத்தகத்திலும் தொடர வேண்டும் என்று
நான் விரும்பினேன். ஆனால் வெறுமனே ‘வெற்றிடத்திற்குள் உரக்க கத்த’ நான் விரும்பவில்லை. யாராலும்
மறுக்கமுடியாத வகையில் (உண்மைகள், ஆய்வுகளுடன்), என்னுடைய வாதங்களைப் புறக்கணிக்க முடியாத
வகையில் செய்யவே நான் விரும்பினேன்.
தலித் என்று அறிவித்து நீங்கள் வெளிவந்த பிறகு, ‘ஓ, ஆனாலும் உங்களைப் பார்த்தால் தலித் போன்று
தெரியவில்லையே’ என்பது போன்ற கருத்துகளையே மற்றவர்களிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
நீங்கள் அதை எவ்வாறு உணர்ந்தீர்கள்?
அதுவே மிகவும் பொதுவான கருத்தாக இருந்தது. மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதைக்
கண்டு நான் உற்சாகமடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். ஊடகங்கள், சினிமா, பாப்-கலாச்சாரம் (நாம்
அவற்றில் பார்க்க முடியுமென்றால்) போன்றவற்றில் அடிக்கடி அவர்கள் பார்த்து வருகின்ற வகையான
தலித்துகளே, ‘ஒரு தலித் போல நான் இருக்கவில்லை’ என்று அவர்கள் அவ்வாறு சொல்வதற்கான
உண்மையாக இருந்தது. ஆனால் நம்மிடையே 25 கோடிக்கும் அதிகமாக இருக்கின்ற தலித்துகள் அனைவரும்
ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்ற உண்மையை அது ஒருபோதும் மாற்றி விடாது.
நாம் அனைவரும் நகரங்களில் வசிக்கவில்லை என்பதைப் போலவே, நாம் அனைவரும் கிராமப்புறங்களிலும்
வசிக்கவில்லை. நான் விரும்புகின்ற எந்த வகையிலும் என்னால் தோற்றமளிக்க முடியும், பிறர் முன்பாக
என்னை முன்வைக்க முடியும், எதிர்வினையாற்ற, பதிலளிக்க முடியும். அவை எதுவும் என்னை (அல்லது வேறு
யாரையும்) ஒரு தலித் ஆக அல்லது என்னிடம் உள்ள தலித் தன்மையைக் குறைத்து மதிப்பிடும் வகையில்
இருந்து விடக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஒற்றை விவரிப்பில் இருக்கின்ற உண்மையான ஆபத்து
இதுதான். தலித்துகள் என்றல் அவர்கள் குறிப்பிட்ட வகையினராக, அதாவது படிக்காதவர்கள் அல்லது
ஆங்கிலம் பேச இயலாதவர்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், மோசமான பாகுபாடு,
வன்முறைக்குள்ளானவர்கள் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற தவறான கருத்தை அந்த ஒற்றை
விவரிப்பு நிலைநிறுத்துகிறது. நேர்மறை நடவடிக்கைகள் அல்லது இடஒதுக்கீடுகளை ஓரளவு
நியாயப்படுத்தும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான்
எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகால திட்டமிட்ட அநீதியை சமூகம் ஒப்புக்
கொள்ளும் என்பதாகவும் அது இருக்கின்றது.
மேலும், பெரும்பாலானவர்கள் கூறுவதைப் போல ‘தலித்’ என்பதாகத் தெரியாமல் இருப்பதன் மூலம்,
‘உயர்’சாதி மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக இருக்கின்ற தற்பெருமை குறித்த கருத்துக்களை நான்
வெளிப்படையாகவே எதிர்க்கிறேன். தற்பெருமை அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக தலித்துகள்
தண்டிக்கப்பட்டதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மீசையை வளர்த்ததற்காக தலித் இளைஞர்
தாக்கப்பட்டது மிக சமீபத்திய எடுத்துக்காட்டு. எனவே, தலித் அல்லாதவர் என்று என்னை வர்ணித்ததற்கான
காரணங்களுக்குள், தலித்துகள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள், நகர்ப்புறத்தவர்களாக இருக்க மாட்டார்கள்,
நம்பிக்கையுடன் இருக்க மாட்டார்கள் என்ற கருத்திற்கு எதிராக நான் இருந்ததும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம்.
இங்கே வர்க்கம் எவ்வாறு நுழைகிறது? சாதி, வர்க்கம், பாலினம் ஆகியவற்றால் உருவாகின்ற பல்வேறு
வகையிலான பாகுபாடுகளை, குறிப்பாக இந்தியச் சூழலில் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
சாதியைப் பற்றி விவாதிக்கும் போது, வர்க்கம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சாதி, வர்க்கத்தின்
அடிப்படையிலான பாகுபாட்டின் கீழ்முனையில் இருக்கின்ற தலித்துகள், குறிப்பாக தலித் பெண்கள் மிகவும்
பாதிக்கப்படக் கூடியவர்களாக இருந்து, பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள்.
கழிவறைகளைச் சுத்தம் செய்யும் தலித் பெண்கள் (மிகவும் ஆபத்தான உலர்கழிவறைகளில்) தங்களுடைய
தலையின் மேல் தளர்வாகப் பின்னப்பட்டிருக்கும் மூங்கில் கூடைகளில் மனிதக் கழிவுகளை எடுத்துச் செல்வது
குறித்து என்னுடைய புத்தகத்தில் உள்ளதொரு அத்தியாயத்தில் நான் விவாதித்திருக்கிறேன். அவர்களுக்குப்
பெரும்பாலும் வேறு வழியே இருப்பதில்லை. பாலியல் ரீதியாக தலித் பெண்கள் எப்படியும் கிடைத்து
விடுவார்கள், ஒருவிதத்தில் அவர்களைத் தாக்குகின்ற உரிமை 'உயர்'சாதி ஆண்களுக்கு இருக்கிறது என்ற
பயங்கரமான சிந்தனையின் பேரிலேயே, வயல்வெளிகளில் அல்லது அன்றாடக் கூலித் தொழிலாளர்களாக
வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய வர்க்கம், சாதி ஆகிய இரண்டாலும் பாலியல்
துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுடைய வர்க்கமே அந்தச் சுரண்டலுக்கு அவர்களை உள்ளாக்கி
அதிகம் பாதிப்புக்குள்ளாக்கவும் செய்கிறது, அதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்ட அதே பணியிடத்திற்கே
திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை.
ரோஹித் வெமுலாவைப் பொறுத்தவரையிலும்கூட, அவருடைய சாதியுடன் சேர்ந்து, வர்க்கமும் அவருக்கு
மிகப்பெரிய தடையாக இருந்தது. வர்க்க நிலை காரணமாகவே, பள்ளி, கல்லூரிகளில் தன்னுடைய
குழந்தைகளைச் சேர்ப்பதற்காக மிகச் சாதாரண வேலைகளை ராதிகா வெமுலா செய்ய வேண்டியிருந்தது.
ரோஹித்தும் தனக்காக இதுபோன்ற பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. அவருடைய
நிலைமையை நன்கு அறிந்து வைத்திருந்த ஹைதராபாத் பல்கலைக்கழகம், தங்களுடைய கொள்கைகளை
ரோஹித் கேள்விக்குள்ளாக்குவதைத் தடுக்கின்ற வகையில், அவருக்கு அளிக்க வேண்டிய உதவித்
தொகையை அளிப்பதில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
மரணத்தின்போது கூட, ரோஹித்தின் ஒரே வருமான ஆதாரமாகவும், அந்த நேரத்தில் பல மாதங்களாக
அவருக்கு கிடைக்காமலும் இருந்த அந்த உதவித் தொகையே அவருடைய மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக
இருந்திருக்கிறது (தன்னுடைய அந்த இறுதிக் கடிதத்தில் அவர் அதைக் குறிப்பிட்டிருந்தார்). எங்கள் மீது
காட்டப்படுகின்ற பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதற்கு, எங்களுடைய
கீழ்தட்டு வர்க்க நிலைமையே காரணமாகி விடுகிறது. அந்த நிலைமையிலிருந்து தப்பிப்பது எங்களுக்கு
எதிரான பாகுபாட்டைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை என்றாலும், அந்த நிலைமையை எளிதாக
வழிநடத்திச் செல்வதற்கான வழிகளை அது உருவாக்கித் தருகிறது. அதனால்தான் இன்னும் இடஒதுக்கீடு
குறித்த நேர்மறை நடவடிக்கைக் கொள்கையானது தலித்துகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
வர்க்கத்தை மீறவும், சாதி அடிப்படையிலான தொழில்களின் கொடூரமான நிலைமைகளிலிருந்து தப்பிக்கவும்
உதவுகின்ற உயிர்நாடிகளில் ஒன்றாக அதுவும் இருக்கின்றது.
உங்களைப் பொறுத்தவரை, உங்களுடைய அம்மா அனுபவித்த வீட்டு வன்முறைகளைப் பற்றி எழுதுவது
எந்த அளவிற்கு கடினமாக இருந்தது? உங்களுக்கு ஏன் அதைப் பற்றி எழுதுவது முக்கியமானதாக இருந்தது?
அது என்னுடைய சிறுவயதிலிருந்தே எனது இருப்பு குறித்த மிகப்பெரிய யதார்த்தங்களில் ஒன்றாக இருந்து
வருகிறது. எனது சாதியைப் பற்றி இருந்த நல்ல புரிதலுடன், எப்போதும் விதிவிலக்கான வலுவான நபராக
நான் கருதி வந்த என்னுடைய தாய் பெற்றிருந்திருந்த பாதிப்புகளைப் பற்றியும் நன்கு அறிந்தவளாகவே
இருந்தேன். அவரைப் போன்ற இன்னுமொருவர் அதேபோன்று நடத்தப்படக்கூடும் என்றாலும், அவர்
அதுகுறித்து எதுவும் செய்ய முடியாதவராக இருக்கலாம் என்பதாக இருந்த முரண்பாடு, என்னைச் சுற்றியுள்ள
உலகத்தை நான் எவ்வாறு புரிந்துகொள்கிறேன் என்பதை வடிவமைப்பதாக இருந்தது.
சூழலை மீறியதாக எங்களுடைய தேர்வு இருக்க முடியாது என்பதை, குறிப்பாக மூன்று குழந்தைகளுடன்
குடும்பத்தையும் கொண்டிருக்கின்ற, மகள்களுக்காக தன்னுடைய லட்சியங்களை விட்டுத் தராத தலித்
பெண்ணுக்கு அவ்வாறான தேர்வு இருக்க முடியாது என்பதை அது எனக்கு உணர்த்தியிருந்தது...
விளைவாக, அவருடைய உதவியற்ற தன்மைக்கு எதிராக, அதைப் பின்னுக்குத் தள்ள விரும்பினேன்,
கற்றுக்கொள்ளவும் செய்தேன். அவரைப் பாதுகாக்கவும் நான் கற்றுக்கொண்டேன். தன்னுடைய இரண்டு
மகள்களையும் நல்ல பள்ளிகளுக்கு அனுப்புவதையும், எந்த வகையிலும் தன்னுடைய மகனுக்குக் கிடைத்ததை
விடக் குறைவான வாழ்க்கையை அவர்களிருவருக்கும் அளித்து விடக்கூடாது என்பதையும் அவர் உறுதி
செய்ததே என்னுடைய பெரும்பாலான முடிவுகளுக்கு உந்து சக்தியாக இருந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக
அதைப் பற்றி எழுதுவது என்பது எளிதானது அல்ல, குறிப்பாக ஒவ்வொரு திருத்தம், மறுபரிசீலனையிலும்
நான் அந்த அதிர்ச்சியை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியிருந்தது (நான்குமுறை நான் அதைத் திருத்தி
எழுதியுள்ளேன்).
ஆனாலும் நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, ஏனென்றால் என்னுடைய கல்வி, சுதந்திரங்களை என்
அம்மா சமரசம் செய்ய விரும்பாததே, நான் நன்கு வளர்ந்து இந்த புத்தகத்தை எழுதக்கூடிய நபராக
மாறுவதற்கு என்னை அனுமதித்திருக்கிறது. என்னுடைய சாதி, கீழ்தட்டுவர்க்கத்தைச் சுற்றியுள்ள அவமானம்
ஆகியவற்றை நான் நிராகரித்தபோது, என் தாயின் போராட்டம், அவரிடமிருந்த மீளுந்தன்மை, மனஉறுதி,
ஒருபோதும் கைவிட்டு விடவே கூடாது என்ற அவருடைய உறுதியான தீர்மானம் ஆகியவை குறித்து நான்
பெருமிதம் அடைந்தேன்.
ஆணாதிக்கம், பெண் வெறுப்பு குறித்த கருத்தை, நாங்கள் தலித் என்பதால் அது ஒன்றும் மாயமாக மறைந்து
விடவில்லை என்பது குறித்து பெரிய அளவில் நான் கூற விரும்பினேன். குறிப்பாக ராஜஸ்தானில், பெண்
கருக்களைச் சிதைத்துக் கொன்றது குறித்து இருக்கின்ற மோசமான பதிவுகள், ஆணாதிக்க மனப்பான்மை
ஆகியவை கவலைக்குரியன. என் அம்மா மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.
அவருடைய குடும்பத்தில் இருந்த ஆண்களின் முடிவுகளை மறுத்து, அவற்றை ஏற்றுக் கொள்ளத் தவறியது,
தன்னுடைய மகள்களுக்கு சமத்துவம் கோரியதன் விளைவாகவே அவர் சகித்துக் கொண்ட உடல் ரீதியான
வன்முறைகள் இருந்தன. மறைந்திருப்பதால் தலித் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும், அதேபோன்று
பதுங்கியிருந்த என் அம்மா எதிர்கொண்ட வன்முறைகளின் இருண்ட யதார்த்தம் பற்றியும் ஒரு புத்தகத்தை
நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
வெளிப்படையான சாதி பாகுபாடு குறித்து வட்டாரமொழி ஊடகங்களில் எழுதும் போது, ஆங்கில செய்தி
அறைகளிலும்கூட ‘கேட்காதீர்கள் சொல்லாதீர்கள்’ என்ற கொள்கை இருந்து வருவதை எனது
அனுபவத்திலிருந்து சொல்ல முடியும் என்றும், தலித் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை அது
கண்ணிவெடியைப் போன்றதாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறீர்கள். அந்தக் கருத்து குறிப்பிட்ட
அனுபவத்தின் மூலமாகப் பெறப்பட்டதா?
நியூயார்க்கிற்குச் செல்லும் வரையிலும், என்னை தலித் என்று அறிவித்து நான் வெளியே வரவில்லை.
கட்டுரை ஒன்றை எழுதுகின்ற போது அல்லது என்னுடைய கருத்தைச் சொல்லும் போது எனது சாதியை
வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விடலாம் என்று கருதியதால், டெல்லியில் பணிபுரிந்தபோது நான்
ஒருபோதும் அரசியல் குறித்தே எழுதியதில்லை அல்லது அரசியல் குறித்து எதையும் எழுதுவதற்கான
ஆர்வத்தைக் காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் நான் அதை அனுபவிக்கவில்லை என்றாலும், நான்
படித்த பல அறிக்கைகள் (என்னுடைய புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன), ஐ.ஐ.எம்.சி, ஏ.சி.ஜே
போன்ற பத்திரிகை நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இடஒதுக்கீட்டிற்கு
எதிராகச் செய்தி அறைகளுக்குள்ளே அணிவகுத்து நிற்கின்ற 'உயர்'சாதியினருடன் தலித் பத்திரிகையாளர்கள்
எதிர்கொள்கின்ற அசௌகரியத்தை விவரிப்பதாகவே இருக்கின்றன.
தங்கள் சாதியைப் பற்றி வெளிப்படையாகக் கூறியவர்கள், தாங்கள் சாதிய தாக்குதலுக்கு உள்ளானவர்களாக
இருந்ததையும், ஆசிரியர் குழுவிற்குள் மேலே வருவதற்கான வாய்ப்புகள் தங்களுக்கு கிடைக்காததையும்
குறித்து பேசினர். இதுவரையிலும் (எந்தவொரு) தலித் மூத்த ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள்
இருந்ததாக நமக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால், அது அர்த்தமுள்ளதாகவே இருக்கின்றது. பல ‘சாதிக்
கதைகள்’ மூலமாக, அவர்களை நிர்வகிப்பது கடினம், அவர்கள் கிளர்ச்சியாளர்கள் என்று முத்திரை
குத்தப்படுகின்றன. ஆனால் ஆங்கிலச் செய்தி அறைகளில், என்னைப் போல, சாதி என்பது வெளிப்படையாக
கேள்விக்குள்ளாகி இருக்கவில்லை எனினும், அது இன்னும் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டே வருகிறது.
அரசியல், ஊடகம், சினிமா, இலக்கியம், இசை என்று பல துறைகளில், குறிப்பாக இளைஞர்களால்
எழுந்திருக்கும் தலித் உறுதிப்பாடு குறித்த புதிய அலைகளைப் பற்றி உங்களுடைய கருத்துக்களைக்
கூறுங்களேன்.
எனது சாதியை மறைத்துக் கொண்ட தலித் குழந்தையாக நான் வளர்ந்தபோது, என்னைப் போன்றவர்கள்
இருப்பதைக் குறிக்கின்ற வகையில் எதுவும் இருக்கவில்லை. அம்பேத்கர் போன்ற முக்கியமான அரசியல்
பிரமுகர்கள் எங்களிடையே இருந்தனர். ஆனால் பொதுவாக இருக்கின்ற உரையாடல்கள் அல்லது பாப்-
கலாச்சாரம் ‘உயர்’சாதி பிம்பங்களை மட்டுமே உறுதிப்படுத்தியிருக்கின்றன.
இங்கே தலித் என்ற பெருமிதம் கொண்ட ஒருவரை நினைவில் கொண்டு வருவது மிகவும் கடினம்.
அதனால்தான், தனது கைகளை மடக்கி கேமராவில் காட்டிய தலித் பாப் நட்சத்திரமான ஜின்னி மஹி, மிகவும்
பிரபலமான தன்னுடைய யூடியூப் வீடியோவில் தன்னை ‘டேஞ்சர் சமர்’ என்று அழைத்துக் கொண்டபோது,
அது மிகத் தீவிரமான மாற்றமாகவே இருந்தது. அதை நான் 2016ஆம் ஆண்டில் பார்த்திருந்தாலும், அந்த
11
நேரத்தில் நான் என்னுடைய தலித் அடையாளத்தை உலகுக்கு அறிவித்த நிலையில், ‘சமர்’ என்ற
வார்த்தையின் மூலம் சுயமதிப்பை மீட்டெடுத்த அந்தச் செயல் மிகுந்த அதிகாரம் அளிப்பதாக இருந்தது. அது
அந்த ஒரு வீடியோவாலேயே சாத்தியமாகி இருந்தது.
இப்போது, தலித் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இருக்கின்ற பல பிரகாசமான, அற்புதமான,
எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டுகள் என்னைப் பொறுத்தவரை தலித்துகள் பற்றியிருந்த பொதுவான
உரையாடலை ஓரளவு மாற்றியிருக்கின்றன. தலித் அடையாளம் திடீரென்று அமைதியாகி விட்டதா என்று
சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியும்கூட தலித்துகள் எந்த வெட்கமும், குற்ற உணர்வும்,
சுயபரிதாபமும் இல்லாமல் தங்களை வெளிப்படையாக உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியதிலிருந்து
நிகழ்ந்திருக்கின்ற மிகச்சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிப்பதாகவே இருக்கிறது. இப்போது
எங்களிடம் நாட்டின் வரலாறு, கலாச்சாரத்தில் தங்களுக்கான சரியான இடத்தைக் கோரக் கூடிய தலித்
இயக்குநர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், கல்வியாளர்கள் இருக்கின்றனர்.
தலித்தாக இருப்பது, செயல்படுவது, தோற்றமளிப்பது குறித்து நம்மிடையே இருந்து வந்த கருத்துக்களைக்
கேள்விக்குள்ளாக்கும் வகையில் அவர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள். தலித் உறுதிப்பாடு, பெருமை
மற்றும் சுயமதிப்பு ஆகியவை குறித்த இந்த படிமங்களைப் பார்த்து வளர்ந்து வருகின்ற தலித் குழந்தைகளுக்கு
இது எவ்வளவு பெரிய அதிகாரத்தை அளிக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.
எங்களைப் போன்றவர்கள் அவர்களைப் போலவே இருப்பதை அறிந்து கொள்வதற்கான நம்பிக்கையை அது
அவர்களுக்குத் தருகின்றது.
https://thewire.in/caste/coming-out-as-dalit-yashica-dutt
நன்றி: தி வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு