புதுதில்லி
பிஎஸ்என்எல் நிறுவனத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கான சூழ்ச்சி வலையை மோடி அரசுமிகத்தீவிரமாக மேற்கொண்டிருக் கிறது என பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர்பி.அபிமன்யு குற்றம்சாட்டியுள் ளார்.
பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்கும் பெரும் போராட்டமே நவம்பர் 26 நாடு தழுவிய அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தம் என்றும் இப்போரில் நாட்டின் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:பி.எஸ்.என்.எல் விடுத்த 4 ஜிக்கான டெண்டரை ரத்து செய்த பின்னர் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்து 4 ஜி சேவைக்கான சாலை வரைபடத்தை வடிவமைக்க பணித்தது. அக் குழு அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட தாக செய்திகள் வந்துள்ளன. அக் குழுவின் அறிக்கை கூறும் ஆலோசனைகள், 4 ஜி சேவையை தாமதப்படுத்தி பி.எஸ்.என்.எல் ஐ நலிவுற்ற நிறுவனமாக மாற்றுகிற சதியாகவே இருக்கின்றன. ஊடகச் செய்திகளின்படி, தொலைத் தொடர்புத் துறை 4 ஜி வலைப் பின்னலை உருவாக்கி, நிர்வகிக்க ஒரு “கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரை” (System Integrator) நியமிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. “கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்” இந்திய நிறுவனமாக இருக்கும். அதன் பணி என்னவெனில் வன்பொருள், மென்பொருள்களை பல விற்பனை யாளர்களிடம் இருந்து வாங்கி அவற்றை இணைப்பதாகும் (Assembly).
இங்கே நாம் கவனிக்க வேண்டிய அம்சம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் ஒரே விற்பனையாளர் மூலமே வலைப் பின்னலை உருவாக்கியுள்ளார்கள். அதற்காக அவர்கள் “திறவுகோல் உடன்பாடுகளை” (Turn key contract) உருவாக்கிக் கொள்வார்கள். அதன்படி ஒரே விற்பனையாளர், சேவை நிர்வாக உடன்பாடு அடிப்படை யில் வலைப் பின்னலை நிர்வகிப் பார்கள். ஆனால் பி.எஸ்.என்.எல்லுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள “கட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர்” முறைமை பல விற்பனை யாளர்களை உள்ள்டக்கியதாகும். இதனால் தொழில் நுட்பப் பிரச்சனைகள் நிறைய எழவாய்ப்புள்ளது.
இது குறித்த செய்தியை எகானமிக் டைம்ஸ் கடந்த 12.10.2020 அன்று வெளியிட்டுள்ளது. அதில் “கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முறைமையை பி.எஸ்.என்.எல் 4 ஜிசேவைக்காக, உள்நாட்டு விற்பனையாளர்க்கான முன்னுரிமையோடு, அறிமுகம் செய்வது செலவினச் சுமைகளை ஏற்படுத்தும்; சந்தையில் போட்டியிடுவதற்கான திறனை காயப்படுத்தும் என்று துறை நிபுணர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். அவர்கள் கருத்துப்படி, “கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்” முறைமை மற்றும் உள்நாட்டு விற்பனையாளர்களின் நிபுணத்துவம் 4 ஜி சேவையை நிர்மாணிக்க, ரேடியோ உள்ளிட்ட முக்கிய சாதனங்களில், பெரும்பாலும் நிரூபணம் ஆகாதவையே”.இதெல்லாம் உணர்த்துகிற செய்தி என்ன? பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை கொல்வதற்கான சதிவலை மிக ஆழமாகப் பின்னப்படுகிறது என்பதுதான்.இதற்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.