tamilnadu

img

பல்கலைக்கழக வளாகங்களில் காவல்துறையினரின் மிருகத்தனமான தாக்குதல்கள் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நாட்டில் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் கல்விக் கட்டணங்கள் உயர்வு மற்றும் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் தன்னெழுச்சியாக  மேற்கொண்ட போராட்டங்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாஜக அரசாங்கம் பல்கலைக் கழகங்களில் அதீதமான அளவில் கல்விக் கட்டணங்களையும், விடுதிக் கட்டணங்களையும் உயர்த்தியிருப்பதை எதிர்த்தும், சமீபத்தில் நாடாளுமன்றத்தின் தனக்கிருக்கிற முரட்டுத்தனமான பெரும்பான்மையை வைத்து குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியதற்கு எதிராகவும் மாணவர்களும், ஆசிரியர்களும் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் இறங்கினர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்கமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இதனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அமைதியாகக் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதற்குப்பின்னர், அஸ்ஸாமில் போராடிய மாணவர்கள்மீதும் தன் முரட்டுத்தனத்தைக் காட்டியிருக்கிறது. நேற்றையதினம், ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஆத்திரமூட்டும் விதத்தில் தடியடிப் பிரயோகம், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தி இருக்கிறது.  இதில் மாணவ, மாணவியர்கள் மிகவும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாசிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டம் எந்த அளவுக்கு இருந்திடும் என்பதற்கு மோடி ஆட்சியின்கீழ் இப்போது நடந்துள்ள வன்முறைகள் மற்றுமோர் உதாரணமாகும்.
இதேபோன்று நேற்றிரவு அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திற்குள்ளும் காவல்துறை ‘ரெயிடு’ செய்திருப்பதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அங்கே தங்கியிருந்த மாணவர்களை விடுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. அவர்களை பேருந்துகளில் அடைத்து வெளியேற்றியிருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் எவ்விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இல்லாது செய்ய வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே விடுமுறையும் அறிவித்திருக்கிறது.
நம் அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக உரிமைகளை அடித்து நொறுக்கிடும் ஆட்சிக்கு எதிராகவும், பல்கலைக்கழக வளாகங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிராகவும் துணிவுடன் போராடும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. பல்கலைக் கழக வளாகங்களில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிறப்பித்திருப்பதை எதிர்த்திடவும், அறிவற்ற எதேச்சாதிகார சக்திகளால் ஏவப்பட்டுள்ள தாக்குதலை எதிர்த்திடவும், நாட்டின் அடிப்படைக் குணாம்சத்தைப் பாதுகாத்து உயர்த்திப்பிடித்திடவும் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)